அனுபவம் நாவல் படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் நாவல் படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 டிசம்பர், 2010

நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள்


1970-80 களில் இரண்டு பெரிய சமூகப் பிரச்சனைகள் இந்தியாவில், குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்தன. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வரதட்சணைக் கொடுமை. இதை மையமாகக் கொண்டு பல சிறுகதைகள் (விகடன், குமுதத்தில்) மற்றும் புதுக் கவிதைகள் எழுதப்பட்டன. வறுமையின் நிறம் சிகப்பு, நிழல்கள் போன்ற வேலையில்லாத் திண்டாட்டத்தை முன்னிறுத்தி திரைப்படங்கள் வந்தது நினைவிருக்கலாம்.

இந்த சட்டகத்தை வைத்து இருபத்திமூன்று வயதான ஒரு இளைஞனின் வாழ்வில் நடக்கும் உறவுச் சிக்கல்கள் மற்றும் உணர்ச்சிப் போராட்டங்களை மிக அழகாக,யதார்த்தமாக சித்தரித்துள்ளார் நாஞ்சில் நாடன். ஓர் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் படித்து பட்டம் பெற்று வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் நாயகன் சிவதாணு. வேலை வாங்கித் தருவதாக வாக்கு கொடுத்து தன் பெண் பார்வதியை படித்த பையனான சிவதாணுவுக்குக் கட்டிக் கொடுக்க முனையும் சொக்கலிங்கம் பிள்ளை.

முதலில் துள்ளிக் குதித்தாலும், பிறகு திருமணத்திற்கு சம்மதிக்கும் சிவதாணு. பணத்திற்கு கஷ்டமில்லாத மாமனார் வீடு. திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளையை வீட்டிலேயே வைத்துக் கொள்ள முயற்சிக்கும் மாமனார். சிவதாணுவின் வீட்டு ஏழ்மையை வைத்து "ஆறாத நாவினால் சுடும்" சொல் அம்புகள் மாமியார் நீலாப்பிள்ளை வார்த்தைகளில். இறுதியில் சிவதாணுவுக்கு ஒரு வேளை கிடைத்து தனிக் குடுத்தனம் போகலாம் என்றால், மனைவி பார்வதி வர மறுக்கிறாள். இது பெரிய சண்டையாகி தீராத மனஸ்தாபமாகிறது. இறுதியில் பார்வதியும், சிவதாணுவும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்று கதை முடிகிறது.

இதை நாஞ்சில் நாடன் ஒரு உயர்ந்த இலக்கியத் தரத்தில் எழுதியுள்ளார். இயலாமை,கோபம்,ஆசை,தாபம், மனக் குரோதங்கள்,பொறாமை, உளச் சிக்கல்கள் மற்றும் ஏழ்மை என்று எல்லா உணர்ச்சிகளையும் மிக அருமையாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். சில இடங்கள் மிகவும் கவித்துவமாகவும் உள்ளன.குறிப்பாக சில வரிகள்: "பாழ். எல்லாம் பாழ். தேன் துளிர்க்கும் பருவத்தில் பிணநாற்றம் வீசுகின்ற மலர்....வேகின்ற வேளையில் படீர் என்று வெடித்து விட்ட மண்குடம்..விழுதென்று பிடிக்கப் பாம்பாகப் பயமுறுத்தும் உறவுகள்..."
"காரட்டைக் கண்ட ஒட்டகமாக கிடைக்கும் கிடைக்கும் என்று, அகப்படும் அகப்படும் என்று பிடித்துவிட ஓடிய ஓட்டம். முடிவில் நயவஞ்சகக் கும்பல்."

மேலும் தன் பாட்டியின் இறப்பின் போது சிவதாணுவின் நினைவுகள்,காந்திமதி, ராமநாதன் (வேலை செய்யும் இடத்தில கிடைத்த நல்ல நண்பர்கள்)பார்வதி வீட்டிற்கு சென்று வந்த விபரத்தை வாசகனின் கற்பனைக்கு விடுவது, பாத்திரப் படைப்புக்களில் சிறிதும் சுருதி பிசகாத ராக ஆலாபனை போன்ற சித்தரிப்பு மற்றும் சுகமான நாஞ்சில் நடை என்று பல சிறப்புகள் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நாவலை கட்டாயம் படிக்க சிபாரிசு செய்கிறேன்.(நீ என்ன கா.நா.சு வா, ஜெமோவா,எஸ்ராவா என்று கேட்காதீர்கள்?). நான் படித்தவரை தமிழில் இது ஒரு முக்கியப் படைப்பு என்பதில் எனக்கு சிறுதும் சந்தேகமில்லை.

இப்போது சில கருத்துகள்: ஒன்று, இந்தக் கதையை முடித்த விதம்(முடிவல்ல) சிறிது செயற்கையாக இருக்கிறது. இரண்டாவது, கதை நடந்த கால கட்டத்தில் இருந்த வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் வரதட்சணை பற்றி சிறிது விரிவாக எழுதி இருக்கலாம். ஆனால் 30 வருடங்களுக்குப் பிறகும் இந்த ஆக்கம் படிக்கப் படுவதற்கு முக்கியக் காரணம் மனித உறவுகளில் உள்ள சிக்கல்கள், தவறானக் கணக்குகள் விவரிக்கப் படும் விதம் மற்றும் எழுத்து நடை என்று கூறலாம்.

இந்த நாவல் "சொல்ல மறந்த கதை" என்று சினிமாவாக வந்துள்ளது. ஆனால் இந்த நாவல் சினிமாவை விடவும் பலமடங்கு சிறப்பாக இருக்கிறது. படமும் அப்படி ஒன்றும் மோசமில்லை

இந்த ஆக்கம் ஜெயமோகன் மற்றும் எஸ்.ரா பட்டியல்களில் இடம் பெறுகிறது என்பதையும் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த நேரத்தில் நாஞ்சில் நாடனுக்காக வலைத்தளம் நடத்தி வரும் சுல்தான் அவர்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பி.கு. நாஞ்சில் நாடன் ஒருவேளை நன்றாக சமைக்கத் தெரிந்தவராக அல்லது நன்கு ரசித்துச் சாப்பிடக் கூடியவராக இல்லை இரண்டும் கலந்த கலவையாக இருக்க வேண்டும். 2010 ஆம் ஆண்டில் தமிழில் நடைபெற்ற மிகப் பெரிய இலக்கிய நிகழ்வாக இவருக்குக் கிடைத்த "சாகித்ய அகாடமி" பரிசைக் குறிப்பிடலாம். வாழ்த்துக்கள்.

புதன், 22 செப்டம்பர், 2010

சா.கந்தசாமியின் சாயாவனம் - அழிவைச் சித்தரிக்கும் அழியாத ஆக்கம்


சுமார் நாற்பத்தைன்பது வருடங்களுக்கு முன் சுற்றுச் சூழலை சமூக மாற்றங்களுடன் ஒருங்கிணைத்து ஓர் உயர்வான ஆக்கத்தை உருவாக்கும் எண்ணம் சா.கந்தசாமி அவர்களுக்கு எப்படித் தான் தோன்றியதோ? அதிலும் அவருடைய இருபத்தைந்து வயதில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். சமூகத்தில் அன்று நிலவிய ஏற்றத் தாழ்வுகள் மற்றும் மரபான பண்ட மாற்று முறையிலிருந்து பணம் என்ற பேய் எப்படி மெதுவாக தன் பலத்தை பரப்ப ஆரம்பித்தது என்பதை சாயாவனம் துல்லியமாக படம் பிடித்து காட்டியிருக்கிறது.ஓர் அழிவை அழியாத சித்திரம் ஆக்கிக் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

"ஒரு புளியன் தோப்பை அழித்து சர்க்கரை ஆலை கட்டப்படுகிறது" என்று கதையை ஒரு வரியில் சொல்லி விடலாம். ஆனால் அதன் பின்னால் இருக்கும் மனிதனின் பேராசை, அகங்காரம், இலக்கை அடைந்தே தீரும் வெறி, அப்பாவி மக்களின் எண்ண ஓட்டங்கள், மனிதர்களுக்குள் நடக்கும் சண்டைகள் மற்றும் ஏற்ற தாழ்வுகள் என்ற பல விசயங்களை மனதில் ஒருவிதமான நெருடலோடு படிக்கும் படி கதையை கட்டமைத்துள்ளார் நாவலாசிரியர் என்றால் மிகையாகாது.

வெளிநாட்டில் இருந்து சாயவனத்திற்கு வரும் சிதம்பரம் தான் புளியன் தோப்பை வாங்கி சர்க்கரை ஆலை கட்ட முற்படும் கதையின் நாயகன். அதற்காக அவன் மேற்கொள்ளும் சமாதானங்கள், அவனுக்குள் நிகழும் அற வீழ்ச்சி, அவனுடைய எண்ணங்கள் நிறைவேற, நிறைவேற முற்றிலும் மறந்து போகும் மனிதாபிமானம் என்று கதைப் பின்னப்பட்டுள்ளது. இதில் சிவனாண்டித்தேவர் சிதம்பரத்திற்கு பெரிதும் உதுவுகிறார். காடு எரியூட்டப் படுவதை சிறிது கூட ஆர்வம் குறையாமல் படிக்கும் படி எழுதியுள்ளார். சிதம்பரத்தின் மன நிலையையும், அற வீழ்ச்சியையும் அணையில் நீர்மட்டம் போன்ற சித்தரிப்புக்கு ஒப்பிடலாம்.

செட்டியார் வீட்டிற்க்குச் சென்று நெய்த புடவையை எடுத்து வந்து நெல் விளையும் போது கொடுக்கும் ஓர் இணக்கம், "பெண்ணிற்கு ஒரு தங்கக் கூண்டிலிருந்து மற்றொரு தங்கக் கூண்டிற்கு செல்லும்" நிகழ்ச்சியாக அந்தக் காலத்துக் கல்யாணத்தை பற்றிய விவரிப்பு, காங்கிரஸ் மாநாடு பற்றிய செய்தி, பண்ட மாற்று முறைக்கு பதிலாக பணப் புழக்கத்தை கையாளத் தெரியாத மற்றும் விரும்பாத ஊர் மக்கள், ஆலைக்கு கரும்பு வேண்டும் என்பதற்காக கரும்பைப் பயிரிட ஊக்குவிக்கும் சிதம்பரத்தின் செயல்பாடுகள், தன் இறந்த தாயைப் பற்றி அவளுடைய பால்ய சிநேகிதி பேசும் போது கூட சிறுதும் உணர்ச்சி காட்டாத சிதம்பரத்தின் மன ஓட்டம் என்று பல நிகழ்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த நாவலின் சிறப்பே ஆசிரியர் எந்த இடத்திலும் ஒரு முடிவைச் சொல்லாமல், வாசகர்களின் கற்பனையில் காட்சிகளை விரிவடையச் செய்வது மற்றும் நாவல் முழுவதும் மறைத்து கிடக்கும் படிமங்கள் என்று சொல்லலாம்.

தமிழ் இலக்கியத்தில் ஆவல் இருப்பவர்கள் எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல் இது. தமிழின் தலை சிறந்த படைப்புகளில் ஒன்றாக எந்தக் காலத்திலும் இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

காலச்சுவடின் கிளாசிக் பதிப்பில் அழகாக நாவல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு சிகரம் வைத்தார் போல் பாவண்ணன் அவர்களின் முகவுரை அற்புதம்.
மீண்டும் மீண்டும் படிக்கும் ஆவலைத் தூண்டும் ஒரு நாவல் சாயவனம்.

புதன், 9 ஜூன், 2010

என் பெயர் ராமசேஷன் - ஆதவனின் ஆக்கம்


மனிதனுக்கு மன நிலை மாறுதல்கள் ஒரு தொடர்கதை. அதிலும் கல்லூரியில் நுழையும் பருவத்திலும், அங்கு ஏற்படும் அனுபவங்களும், கவரும் நோக்கத்துடன் ஆணுக்காக பெண்ணும், பெண்ணுக்காக ஆணும் செய்து கொள்ளும் சமரசங்களும், போடும் போலி வேஷங்களும், அதனால் ஏற்படும் மன உளைச்சல்களையும் மிகத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஆதவன்.

ராமசேஷன் தான் கதை சொல்லி மற்றும் கதாநாயகன். கல்லூரி வாழ்க்கை முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவன் கல்லூரியில் சேரும் தருணத்தையும், அங்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது தான் கதை.

கதை ஆரம்பத்தில் அவன் குடும்பத்தில் அம்மா ஒருபுறமும், பாட்டி (அப்பாவின் அம்மா) மற்றும் விதவையாகி வீட்டில் இருக்கும் அத்தையும் சேர்ந்து அப்பாவை படுத்தும் பாட்டை லேசான நகைச்சுவையுடன் அழகாகக் கூறியிருக்கிறார். ராமுக்கு ஒரு தங்கை வேறு. அவன் கல்லூரியில் சேர்ந்தவுடன் அறிமுகமாகும் பணக்கார ராவ் மற்றும் மூர்த்தி பற்றிய சித்தரிப்பு கச்சிதம். ராவின் தங்கை மாலாவுடன் ராமுக்கு ஏற்படும் பரிச்சயம், அவர்கள் வயதின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு இட்டுச் செல்கிறது. அந்த உறவின் முறிவில் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சிறிது "இண்டேலேசுவல்" பெண்ணான பிரேமாவுடன் உண்டாகும் தொடர்பு மற்றும் பிரேமாவுக்கும், மாலாவுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்று கதையை மிக சுவாரசியமாக எடுத்துச் செல்கிறார் ஆசிரியர்.
வி.எஸ்.வி என்ற சினிமா இயக்குனரை அறிமுகம் செய்து அவர் மூலமாக படைப்பாளியைப் பற்றி பேச வைப்பது தான் கதையில் நான் மிகவும் ரசித்துப் படித்தது.

ஓர் இடத்தில வி.எஸ்.வி இப்படிக் கூறுகிறார் "கலைஞனின் ஹிபோக்ரசியைப் பற்றி பேசுகிறவர்கள், தாங்களும் ஹிபோக்ரசி இல்லாதவர்கள் தானா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். சொந்த வாழ்கையில் புரட்சிகரமாக எதையும் சாதித்திரதாவர்களும், சந்தித்திரதாவர்களும் தான் கலைப் படைப்புகளில் காரசாரமாக, புரட்சிகரமான அம்சங்களை நாடுகிறார்கள் - அப்போது தானே இவற்றை ஆரவாரமாகப் புகழ்வதன் மூலம் தனக்கென ஒரு புரட்சிகரமான பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்."

இது விமர்சிக்கும் பலருக்கும் எந்த காலத்திலும் பொருந்தும். இந்த நாவலில் ஒவ்வொருவரின் மனவோட்டங்களையும், அதற்கான காரணங்களையும் துல்லியமாக எழுதி உள்ளார். எந்த பாசாங்குகளும், தேவையில்லாத வர்ணனைகளும் எங்குமே காண முடியவில்லை. 1970-80 களில் மத்திய தர, குறிப்பாக பிராமண குடும்பத்தில், இருந்த எண்ணவோட்டங்களை சிறப்பாக அனுபவித்து எழுதி உள்ளார் ஆதவன்.

ஒரு கணிதப் பேராசிரியர், மற்றும் "out of the world" அறிவு ஜீவியாக ராமபத்திரன் என்ற மற்றுமொரு பேராசிரியர், ராமின் பெரியப்பா, ராவின் அம்மா, முக்கியமாக பங்கஜம் மாமி என்று ஒரு பட்டாளமே வந்த கதையை நகர்த்திச் செல்கிறது.

உறவின் சிக்கல்களை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம். மேலும் கல்லூரியில் தனிமனிதனாக மட்டுமில்லாமல் கூட்டமாக சேரும் போது உண்டாகும் குழு மனப்பான்மையை படம் பிடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இதுவரை படிக்காமல் இருந்தால் இந்த நாவல் நிச்சியம் படிக்கத் தகுந்தது.

பதிப்பகம்: உயிர்மை
புத்தகம் வாங்கியது: udumalai.com மூலமாக