கிரிக்கெட் உலகக் கோப்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரிக்கெட் உலகக் கோப்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

உலகக் கோப்பை - நினைவுகளில் III


வாழ்வில் ஆச்சிரியம் கலந்த சந்தோஷம் கைகூடி வரும் நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.அப்படிப் பட்ட ஒரு நாள் தான் இந்தியா 1983 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற நாள். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத "பொன்" நாள். அது நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை என்பதல்லாம் இன்று வரலாற்றின் மற்றொரு பகுதி. இப்போது மூன்றாவது ஒரு நாள் உலகக் கோப்பையில் இந்திய வெற்றிக்கான காரணிகளையும் மற்றும் வேறு சில முக்கிய நிகழ்வுகளையும் பார்க்கலாம்.

1. இங்கிலாந்தில் போட்டி நடை பெற்றது.

2. இந்திய அணியின் ஒரு நாள் போட்டி மனப்பான்மையில் கபில் தேவினால் கொண்டு வரப்பட்ட மாறுதல்கள்.

3.மதன் லால்,பின்னி,அமர்நாத் மற்றும் பல்விந்தர் சந்து முதலான மித வேகப் பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீச்சில் இங்கிலாந்தின் தட்ப வெப்ப நிலை மிகவும் உதவியது.

4. யஷ்பால் ஷர்மா வெஸ்ட் இண்டீசுடனான முதல் போட்டியில் மிக அருமையாக விளையாடி வெற்றிக்கு வழி வகுத்தார்.

5. கபில் தேவின் ஆட்டமிழக்காத 175 ஓட்டங்களும், இறுதி ஆட்டத்தில் ரிச்சர்ட்ஸை அவுட் ஆக்க 20 அடிகள் ஓடி அவர் பிடித்த கேட்சும் மறக்க முடியாதவைகள்.




6. சந்தீப் பாட்டில் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் 32 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.



7. இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் அடித்த 38 ரன்கள் என்றுமே உலகக் கோப்பை இறுதி
ஆட்டத்தில் விளையாடிய ஒரு முக்கியமான இன்னிங்க்ஸ்களில் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

8. சந்துவின் பந்து வீச்சில் கிரீனிட்ஜ் இறுதி ஆட்டத்தில் தவறாக கணித்து விளையாடி ஆட்டமிழந்தது ஓர் அதிசியம் தான்.

9. இரண்டு உலகக் கோப்பைகள் வெல்வதற்கு காரணமாக இருந்த வெஸ்ட் இண்டீசின் ரிச்சர்ட்ஸ், இந்த முறை அதன் தோல்விக்கு காரணமானார்.



10.மொஹிந்தர் இந்த தொடர் முழுவதும் நல்ல மட்டையாளராகவும், சிறந்த பந்து வீச்சாளராகவும் பரிமளித்தது இந்திய வெற்றிக்கு முக்கிய காரணியாக விளங்கியது.

11.இதைத் தவிர ரிச்சர்ட்ஸ் பாகிஸ்தானுடன் அரை இறுதி ஆட்டத்தில் அடித்த 80 ரன்கள் இந்தக் கோப்பைப் போட்டியில் மிகச் சிறந்த ஆட்டம் என்றால் மிகையாகாது.




12. எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது கபில் தேவின் விடா முயற்சி, அணிக்கு கொடுத்த உத்வேகம் மற்றும் சிறப்பாக அணியை வழி நடத்தி சென்ற விதம்.

இதுவரை நடந்த உலகக் கோப்பையைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன், ஆனால் இன்னும் இரண்டு நாட்களில் 2011 உலகக் கோப்பைப் போட்டியே ஆரம்பமாகப் போகிறது. அதனால் இந்தத் தொடரை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். 1983 ஆம் ஆண்டிற்குப் பிறகு 2003 ஆண்டு தான் இந்தியா மீண்டும் கோப்பையை வெல்ல ஒரு வாய்ப்பிருந்தது. அது மட்டமான பந்து வீச்சினால் நடவாமல் போனது. இந்த முறையாவது இந்தியா வெல்ல வாய்ப்புள்ளதா? நேற்று நடந்த ஆஸ்திரேலியா-இந்தியா ஆட்டத்தில், இந்தியா வெற்றி பெற்றாலும் நன்றாக விளையாடவில்லை. மேலும் இதைப் பற்றி வரும் பதிவுகளில் ஆராய முயற்சிப்போம்.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

உலகக் கோப்பை - நினைவுகளில் II


முதல் மற்றும் இரண்டாவது உலகக் கோப்பைகளுக்கு நடுவே கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான பல நிகழ்வுகள் நடந்தேறின. முதலாவது ஆஸ்திரேலியாவின் "Packer " என்ற ஆசாமி பிரபல கிரிக்கெட் வீரர்களை வாங்கி "Packer Series" என்ற ஒரு நாள் போட்டிகளை நடத்த முடிவு செய்தார். இதற்கு உலகக் கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் அளிக்கவில்லை. பாக்கர் சீரிஸில் கலந்து கொள்ளும் வீரர்களை அதிகாரப் பூர்வ கிரிக்கெட் விளையாட்டுகளில் விளையாடுவதிலிருந்து நீக்கியது உலகக் கிரிக்கெட் கவுன்சில். அதனால் விவியன் ரிச்சர்ட்ஸ், லில்லி போன்ற பல மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் இரண்டு வருடங்கள் அதிகாரப் பூர்வ கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாமல் போனது பெரிய துரதிர்ஷ்டம். இரண்டாவது முக்கிய மாற்றம். இரவு-பகல் (Day-Night) கிரிக்கெட் மற்றும் "சொட்டு நீளம் டோய்" என் பளிச் வெள்ளை உடைகள் போய், விதவிதமான உடை அணிந்து கிரிக்கெட் நட்சத்திரங்கள் ஆட ஆரம்பித்தார்கள்.

நல்ல வேலையாக இந்த சண்டையெல்லாம் இரண்டாம் உலகக் கோப்பை 1979 இல் நடை பெறுவதற்கு முன்பே தீர்ந்தது. இந்த முறையும் இங்கிலாந்திலேயே போட்டி நடை பெற்றது.வெஸ்ட் இண்டீஸ் அணி க்ரோப்ட், ஹோல்டிங், ராபர்ட்ஸ்,கார்னர் என்ற மிக பலம் பொருந்திய பந்து வீச்சாளர்களின் அணிவகுப்புடன், ரிச்சர்ட்ஸ், க்ரிநிட்ஜ், லாயத் என பிரபல மட்டையாளர்களுடன் களம் இறங்கியது. அவர்கள் தான் கோப்பையை இந்த முறையும் வெல்வார்கள் என்று எல்லோரும் எதிர் பார்த்தது போல் நடேந்தேறியது.

பாகிஸ்தான் அணியும் மிகவும் பலம் பொருந்தியதாக இருந்தது. ஆனால் செமி பைனலில் வெஸ்ட் இண்டீசிடம் செம அடி. இங்கிலாந்தின் மைக் ப்ரியர்லி கிரிக்கெட் வரலாற்றில் அணித் தலைவராக, பேட்டிங்கை விட, மிகவும் புகழ் பெற்றவராக அறியப்படுகிறார். அவர் திறமையாக அணியை வழி நடத்தி நுசிலாந்து அணியை இங்கிலாந்த் மிகக் குறுகிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி காண உறுதுணையாக இருந்தார். ஆனால் இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் இவர் பாச்சா பலிக்கவில்லை.

இறுதி ஆட்டத்தில் ரிச்சர்ட்சின் சதம் மறக்க முடியாத ஒன்று. இங்கிலாந்தின் ஹென்றிக் துல்லியமான பந்து வீச்சிற்கும், சிக்கனதிற்கும் பெயர் போனவர். அதனால் அவரை இறுதி ஓவர் போட வைத்தார் மைக். ரிச்சர்ட் ஆன் சைடில் விளையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர். அதனால் இறுதி பந்தை வலது ஸ்டம்புக்கும் வலப்பக்கம் போட முடிவு செய்தார் ஹென்றிக். ஆனால் இதை எதிர்பார்த்த ரிச்சர்ட் வலது பக்கம் வேகமாக நகர்ந்து ஆன் சைடில் ஆறு ரன்கள் எடுத்தது நினைவிலிருந்து என்றும் நீங்காத நிகழ்ச்சி. முதல் இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளிலும் ரிச்சர்ட்ஸ் வெஸ்ட் இண்டீஸ் கோப்பையை வெல்ல ஒரு முக்கியப் பங்கு வகித்தார். எத்தனையோ மட்டையாளர்கள் வந்தாலும் "விவியன் ரிச்சர்ட்ஸ்" ஒரு வித்தியாசமான ஆளுமையாக வரலாற்றில் என்றும் இருப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை.




இரண்டாவது உலகக் கோப்பையில் இந்தியாவின் பங்களிப்பைப் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்வதிற்கில்லை. குண்டப்பா விஸ்வநாத் (இந்திய கிரிக்கெட்டில் மிகவும் அழகாக விளையாடும் திறமை கொண்டிருந்த மட்டையாளர்) வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 75 ஓட்டங்கள் எடுத்தார். அந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வேகப் பந்து வீச்சாளர்களை அவர் மிக அனாயசமாகக் கையாண்டார். அந்த உலக கோப்பைப் போட்டியில் மிகவும் சிலாகிக்கப் பட்ட இன்னிக்ஸ்களில் இதுவும் ஒன்று. அந்த சம்பவங்களை இன்று நினைத்துப் பார்த்து பகிர்ந்து கொள்ளும் போது அன்றை விட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

உலகக் கோப்பை - நினைவுகளில்


புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், கிரிக்கெட் மீதான காதல் தொடர்கிறது. அதுவும் அந்த நாட்களில் கிரிக்கெட்டே மனதை ஆக்கிரமித்த நீங்காத நினைவுகள். ஐந்து நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட் நடை பெற்று வந்த காலத்தில், புயலென நுழைந்தது தான் ஒரு நாள் கிரிக்கெட். இங்கிலாந்து-ஆஸ்திரேலியா டெஸ்ட் ஆட்டம் மழையினால் தடை பட்டதால், அதை ஒரு நாள் ஆட்டமாக மாற்றியதில் தோன்றிய சிந்தனை தான் ஒரு நாள் உலகக் கோப்பை பிறக்கக் காரணமானது.

Prudential என்ற கம்பெனி தான் முதல் உலகக் கோப்பையை 1975 ஜூனில் நடத்தியது. வரலாற்றில் சிறப்பான கேப்டன்கள் மிகவும் அபூர்வம். Ian Chappell ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவர். அவர் தலைமையில் விளையாடிய ஆஸ்திரேலியா தான் முதல் உலகக் கோப்பையை வெல்லும் என்று நினைத்திருந்தேன். ஆனால் சாப்பல் மிக பிரமாதமாக ஆஸ்திரேலியா அணியை வழி நடத்தியும் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது.

அந்த காலத்தில் தொலைக் காட்சி இல்லாததால் தட்டினால் கேட்கும் ரேடியோவில் தான் ஆட்டத்தின் வர்ணனை கேட்க முடியும். அந்த சுகமே தனி. அன்றிருந்த வருணனையாளர்கள் ஆட்டத்தை நேரில் பார்க்கும் உணர்ச்சியைக் கொடுப்பார்கள். அப்போது 60 ஓவர்கள் ஆட்டம். அதனால் விளையாடுவது மிகவும் கடினம். விக்கட்டும் விழாமல் அடித்தும் ஆட வேண்டும். முதல் உலகக் கோப்பையில் மிகச் சிறந்த ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்கு இடையே நடந்த இறுதி ஆட்டம் தான். Clive Lloyd அடித்த 102 ரன்கள் மற்றும் விவியன் ரிச்சர்ட்சின் அருமையான பீல்டிங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணிகள். Ian Chappell எழுதிய "சப்பலி" என்ற புத்தகத்தில் இந்த இறுதி ஆட்டத்தைப் பற்றி மிக அழகாக வருணித்திருப்பார்.

எந்த அளவுக்கு இந்த இறுதி ஆட்டம் மனதில் நிற்கிறதோ அதே அளவு நம் காவஸ்கர் 60 ஓவர் விளையாடி 36 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததும் நினைவில் நிற்கிறது. காவஸ்கர் ஆட்ட வரலாற்றில் இது ஒரு பெரிய கரும் புள்ளி. குறிப்பாக அதற்கு முந்தைய ஆண்டு லீட்சில் நடந்த இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் காவஸ்கர் அடித்த 101 ஓட்டங்கள் அவர் விளையாடிய முதல் ஐந்து சிறந்த இன்னிங்க்ஸ்களில் ஒன்று என்றால் மிகையாகாது. மற்ற படி இந்தியாவும் முதல் உலகக் கோப்பையில் கலந்து கொண்டது என்பதைத் தவிர இந்திய ஆட்டத்தைப் பற்றி வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

1979 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.