செவ்வாய், 29 ஏப்ரல், 2014

புரியாத உறவுகள்

வாழ்க்கையில் எத்தனையோ சந்திப்புகள், உரையாடல்கள்அதுவும் இன்று சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமாகும் முகமறியாத நண்பர்கள் வேறு.  ஆனால் இவற்றில் ஒரு சில மட்டுமே அந்தரங்க மகிழ்ச்சி அளிக்கும் உறவாக பரிமளிக்கிறது. அப்படியான என் முன்னால் மேலாளருடனான ஓர் உறவு குறித்த நினைவுகளின் பதிவு தான் இது.

2007 ஆம் ஆண்டு முதல் 2009 முடிய அமெரிக்காவின் பொருளாதார நிலைமை மிக மிக மோசமாக இருந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. அப்போது எந்நேரம் வேலை போகுமோ என்ற மன அழுத்தத்துடனே கடந்த நாட்கள். நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்பதின் முழு அர்த்தமும் தெளிவான காலம்.இந்த நிலையில் நான் வேலை பார்த்து வந்த அந்த கார்பரேட் கம்பெனியில் என் பழைய மேலாளர் விருப்ப ஓய்வு வாங்கிச் செல்ல, புது மேலாளருடன் வேலை செய்ய வேண்டிய நிலைமை

 நான் ஒப்பந்த முறையிலும், மேலாளர் நிரந்தர(?) ஊழியராகவும்  வேலை பார்த்து வந்தோம். நிரந்தர ஊழியர் என்றாலும், மேலாளரின் நாற்காலி சிறிது ஆட்டத்துடன் தான் இருந்தது. கார்பரேட் நிறுவனங்கள் ஒருவர் சாதித்ததையோ, சாதிக்க முடியக் கூடியதையோ பற்றி கவலைப்படாது.அதுவும் பொருளாதாரம் தள்ளாடும் போது அதற்கு தினமும் தங்க முட்டையிடும் வாத்து தான் தேவை. செலவைக் குறைக்கும் முகமாக கணணி தொடர்பான வேலைகளின் பெரும் பகுதியை இந்தியாவிற்கு அனுப்பும் வேலை மிகவும் வேகமாக நடந்து வந்தது. போறாதா காலம் என் மேலாளரிடம் இருந்த சில கணணி சார்ந்த அப்ளிகேஷன்களை இந்தியாவிற்கு அனுப்புவதில் பெரிய சிக்கல்கள் இருந்தது

ஒரு நாள் மதியம்பேச்சுவாக்கில்,ஒருகுழப்பத்திலிருந்த அப்ளிகேஷன் குறித்த பேச்சு வந்தது. அந்த அப்ளிகேஷன் பயன்படுத்தும் தொழில்நுட்பம் உனக்குத் தெரியாதெனெனினும், உன்னால் அதை இந்த வருட இறுதிக்குள் இந்தியா அனுப்ப உதவ முடியுமா? எனக் கேட்டார். அந்த சமயத்தில் நான் ஏற்கனவே வேலை பார்த்து வந்த அப்ளிகேஷன் இந்தியா அனுப்பும் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தது. இதை ஒரு நல்ல சந்தர்பமாக நினைத்தேன். வேலை உறுதி மற்றும் புதிய தொழில் நுட்பம் கற்க ஒரு வாய்ப்பு. சரி என ஒப்புக் கொண்டு விட்டேன்.  கடுமையான வேலை. இந்தியாவில் ஆட்கள் கிடைப்பது சுலபமாக இல்லை.அப்படியே கிடைத்தாலும் நிரந்தரமாக இருப்பதில்லை.
தங்கப்பதக்கம் சிவாஜி போல் சோதனை மேல் சோதனை. ஆனால் என் மேலாளர் மிகவும் நல்ல மனமுடையவர். ஒரு நாள் கூட அழுத்தம் கொடுத்ததில்லை. நீண்ட நாட்கள் பழகிய நண்பரைப் போல் பேசிக் கொண்டிருப்பார். “என்ன அதிகபட்சம் என் வேலை போகலாம். கவலைப்படாதே. பார்த்துக் கொள்ளலாம்” எனக் கூறுவார். இத்தனை புரிதலுடனும், சகஜமாகவும் அவர் இருந்ததால்,வேலை பளுவெல்லாம் ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. எங்கள் சொந்த விஷயங்களைக் கூட பகிர்ந்து கொள்வோம்

சில மாதங்களுக்குப் பிறகு அவருக்கு வேறு பிரிவில் வேலை மாற்றலானது. இருந்தாலும் ஒரே கட்டிடத்தில் தான் வேலை பார்த்து வந்தோம். வாரத்திற்கு ஒரு முறையாவது என் இருப்பிடம் வந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போவார். மற்றபடி எங்களுக்குள் தொலைபேசி எண்கள் கூட பரிமாற்றம் இல்லை

இரண்டரை ஆண்டுகளுக்கு முன் நான் அந்த அலுவலகத்தை விட்டு வந்து வேறிடம் சேரும் போது அவரிடம் விடை பெற்று வந்தேன். அதற்குப் பிறகு ஒரு முறை எங்கோ சந்தித்தோம். தீடிரென சென்ற திங்கள்(ஏப்ரல் 21 ) காலை பொது நண்பரிடம் இருந்து குறுச்செய்தி. உன் முன்னால் மேலாளர் இரண்டு ஆண்டுகளாக கான்சருடன் போராடி நேற்றிரவு உயிரழந்தார் என்று. அதிர்ச்சி,வருத்தம் கூடவே அவருடன் கழித்த அந்த நாட்கள் குறித்த நினைவுகள்.

சென்ற சனி காலை அவருக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்றிருந்தேன். அங்கு யாரையும் எனக்குத் தெரியாது. மெலிந்த உடம்புடன் அமைதியாக உறங்குவது போல் பூக்களுக்கு நடுவே படுத்திருந்தார். அப்போது மனதில் தோன்றியது"இவரை தெரியாமலே இருந்திருக்கலாமே?  இப்படி ஒரு நல்ல மனிதர் தொடர்பு, அதிர்ஷ்டமா அல்லது சாபமா?  எனக்கும் அவருக்குமான இந்த உறவு வேறு யாருக்கும் தெரியாதது.புரியவும் புரியாதது. இந்த உறவை என்னவென்று அழைப்பது."

இப்போது ஒரு வாரம் மேலாகியும், கண்ணில் விழுந்த மணல் போல் மனதில் நெருடல். தேங்கிப் போன நினைவுகளுடன் தொடரும் வாழ்க்கை .


3 கருத்துகள்:

  1. தன் துயர் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாத
    இது போன்ற அற்புத மனிதர்கள் நம்முடன்
    இருக்கத்தான் செய்கிறார்கள்
    அவர்களை இழந்தபின் அவர்கள் வெளிக்காட்டிக்
    கொள்ளாத துயர்களை அறிய நேர்கையில்
    நமக்குள் இனம்புரியாத இதுபோன்ற கூடுதல்
    துன்பம் நேர்வது இயல்புதான்
    மனம் தொட்ட பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பதிலளிநீக்கு
  3. Bhaskar, I was also shocked to hear that message and it was always nice working with him. Will try to meet you at the earliest.

    பதிலளிநீக்கு