வியாழன், 19 மே, 2011

ரஜினியின் உடல் நிலை



ரஜினியின் ரசிகன் நான். கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவர் படிப்படியாக முன்னேறியது கண்டு மகிழ்ந்தது நினவுக்கு வருகிறது.



ஓய்வில்லாமல் உழைத்து உடலும், மனமும் பாதிப்பிக்குள்ளாகி அதிலிருந்து "தங்க ரதம்" என்ற படத்தின் மூலம் மீண்டு வந்து சினிமா உலகில் தொடர் சாதனைகள் செய்து கொண்டிருந்தார். இன்று உடல் நிலை சரியில்லாமல், பல விதமான செய்திகளுக்கு நடுவே மருத்துவமனையில் இருக்கிறார். எந்த செய்தியை நம்புவதென்றே தெரியவில்லை.




"ரஜினி ரசிகனா?" என்று என்னை ஏளனம் செய்தவர்களும், செய்பவர்களும் உண்டு. கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் ரசிகனாக இருப்பது ஓர் இயற்கையான நிகழ்வு. பதினாறு வயதினிலே, புவனா ஒரு கேள்விக்குறி, நெற்றிக்கண், மூன்று முடிச்சு போன்ற ரஜினி சினிமாக்கள் ஒரு வகை என்றால், பாட்சா, அண்ணாமலை, படையப்பா மற்றொரு வகை. ரஜினி நடித்த படங்களிலேயே "அவள் அப்படித்தான்" மற்றும் "முள்ளும் மலரும்" என்ற இரண்டு படங்களும் மிகவும் சிறந்தது என்பது என் கருத்து .எந்த உச்சத்திற்குப் போனாலும் அது எதுவும் தலைக்கு ஏறாமல் பார்த்துக் கொண்டது ரஜினியின் மிக முக்கிய பிளஸ் பாயிண்ட்.




குறிப்பாக திருமணத்திற்குப் பின் பல நிறைகளுடனும், மிகச் சில குறைகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையாகாது. பொதுவாக திரை உலகினர் அவருடைய படங்கள் மீது எந்த விமர்சனம் வைத்தாலும், தனிப்பட்ட முறையில் நல்ல மனிதராகவே அவரை சித்தரிக்கின்றனர்.




ரஜினிக்கு உடல் நிலை எந்த அளவு பாதித்துள்ளது. நிரந்தர dialysis தேவைப்படுமா? அவரால் இனி மேலும் சினிமாவில் நடிக்க முடியுமா? காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ரஜினியை நினைத்தால் மனதிற்கு மிகவும் வருத்தமாகத் தான் உள்ளது.



37 வருடங்களாக தொடர்ந்து உச்சத்தில் இருப்பது என்பது சாதாரணமான விஷயமில்லை. ரஜினி கூடிய விரைவில் நலம் பெற்று மீண்டும் பழைய ரஜினியாக வலம் வர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

4 கருத்துகள்:

  1. பலரால் நேசிக்கப்படும் ஒரு மனிதனின் உடல்நிலை பற்றிய வதந்திகளை படிக்கும் போது எரிச்சல் வருகிறது. அவர் விரைவில் குணம் பெற்று வந்து பல நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ரஜினி போன்ற ஒரு நல்ல மனிதருக்கு எல்லோரும் செய்யக்கொடிய ஒன்று பிரார்த்தனை மற்றும் வதந்திகளை தவிர்ப்பது. நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்!

    பதிலளிநீக்கு
  3. சார்வாகன், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

    பதிலளிநீக்கு
  4. நன்றி bandhu. நல்லது நடக்கும் என்று எதிர் பார்த்திருப்போம்.

    பதிலளிநீக்கு