செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

பஷீரின் மதில்கள் - அன்பின் மணம்



மலையாள எழுத்தாளர் பஷீரின் மதில்கள் குறுநாவல் எழுத்தாளர் நீல.பத்மநாபன், கவிஞர் சுகுமாரன் மற்றும் கவிஞரும், எழுத்தாளருமான சுந்தர ராமசாமி ஆகிய மூன்று பெரிய ஆளுமைகளால் தமிழிலில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதிலிருந்தே இந்த படைப்பு எத்தனை உன்னதமானதாக இருக்கக் கூடும் என்று யூகிப்பது கடினமில்லை. மிகுந்த எதிர் பார்ப்போடுதான் படிக்க ஆரம்பித்தேன். சோடைபோகவில்லை. பஷீர் மீது விமர்சகர்கள் என்ன மதிப்பீடு வைத்திருக்கிறார்களோ, ஒரு வாசகனாக எனக்குப் பிடித்த எழுத்தாளுமைகளில் இவரும் ஒருவராகிறார்.

1942 ஆம் ஆண்டு சிறைச்சாலை அனுபவத்தை அணையாகத் தேக்கி வைத்து 1965 -இல் ஓர் அருமையான புனைவாகத் தந்திருக்கிறார் பஷீர். சிறைச்சாலையில் கதையின் நாயகன் நுழையும் போது "பெண்ணின் மணம்" ஒரு குறியீடாக அறிமுகமாகிறது. வார்டன்களின் தில்லுமுல்லுகள், கைதிகளின் கைவரிசை என்று சம்பவங்களின் நீட்சியாக செல்லும் கதையில் ஒரு பெண் அறிமுகமாகிறாள். அவர்களை ஒரு பெரிய மதில் சுவர் பிரிக்கிறது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் இருவருக்கு இடையேயான அன்பின் கரங்கள் நீண்டு கொண்டே போகிறது. இருவரும் எப்படியாவது சந்தித்து விடுவது என்று முடிவு செய்கிறார்கள். அந்த இடத்தில கதையை இலக்கியமாக்கிருக்கிறார் கதாசிரியர்.

புனைவு முழுவதும் சிறை வாழ்க்கையின் சந்தோசச் சித்தரிப்புகள். அன்பின் மணம் வீசிக் கொண்டே இருக்கிறது. அஹிம்சையின் சுவையை அனுபவிக்க முடிகிறது. படித்தால் புரியும். நல்ல இலக்கிய அனுபவம் வேண்டுமென்றால் கட்டாயம் படிக்கவும். இதனை மொழி பெயர்ப்பு செய்துள்ள கவிஞர் சுகுமாரனின் நடை அற்புதம். இதை அடூர் கோபாலகிருஷ்ணன் திரைப் படமாக எடுத்திருக்கிறாராம். காலச்சுவடு பதிப்பகம். விலை ரூ.50/=.

புத்தகத்திலிருந்து ஒரு சில வரிகள்:

கொஞ்சம் சத்தமாகத் தான் பேச வேண்டியிருந்தது. அவள் மதிலுக்கு அந்தப் பக்கம். நான் இந்தப் பக்கம்.

அவள் கேட்டாள் "பேரென்ன?"

நான் பேரைச் சொன்னேன். தண்டனைக் காலம். என்னுடைய தொழில், நான் செய்ததாகச் சொல்லப்படும் ராஜத் துரோகக் குற்றம் எல்லாவற்றையும் சொன்னேன். வாழ்கையில் செய்த தவறுகளைப் பற்றி அவளும் சொன்னாள்.

அவளுடைய அழகான பெயர் - நாராயணி.
அவளுடைய அழகான வயது - இருபத்திரண்டு.

நான் சொன்னேன்: "நாராயணி, நாம ரண்டு பெரும் ஒண்ணாத் தான் ஜெயிலுக்குள்ளே வந்திருக்கோம்"

"அப்படியா?' நீண்ட நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு கேட்டாள். "எனக்கு ஒரு ரோஜாச் செடி கொடுப்பீங்களா?'

நான் கேட்டேன் "இங்கே ரோஜாச் செடியிருக்குன்னு நாராயணிக்கு எப்படித் தெரியும்?"
நாராயணி சொன்னாள் "ஜெயிலாச்சே! இங்கே ரகசிய மொண்ணுமில்லே ..... எல்லோருக்கும் தெரியும்."

...............
நாராயணி மறுபடியும் கேட்டாள்: "ஒரு ரோஜாச்செடியக் குடுப்பீங்களா?"

"நாராயணி" நான் இதயம் பிய்த்து போகிற சக்தியுடன் உரக்கக் கத்தினேன்.

"இந்த புவனத்திலிருக்கிற எல்லா ரோஜாச் செடிகளையும் உனக்குத் தரேன்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக