செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

சுஜாதா என்ற மறக்க முடியாத ஆளுமை

சுஜாதா இன்றும் சாதாரண தமிழ் வாசகனுக்கு ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக இருக்கிறார். புத்தகக் கண்காட்சியில் அவர் புத்தகங்கள் அதிக அளவு விற்று வருவது, இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியிலும் அவர் தாக்கம் இருப்பதைக் காண முடிகிறது.

அதற்கு அவருடைய எழுத்து தொழில்நுட்பம் ஒரு முக்கிய காரணி. 
அவர் அறிவியல், இலக்கியம், சரித்திரம் என பல துறைகளில் எழுதினார். அவரளவுக்கு இப்படி வெவ்வேறு துறைகளில் வேறு எந்த தமிழ் எழுத்தாளரும் எழுதி உள்ளாரா? எனக்குத் தெரிந்து இல்லை என்று தான் கூற முடியும்.



சுஜாதா 1991 ஆம் ஆண்டு (ரோஜா சினிமா வெளியான நேரம்) என நினைக்கிறன். அவர் திருநெல்வேலியில் ஆர்யா என்ற ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கணிதம், கணணி, numerical methods பற்றியெல்லாம் பேசினார். அதில் அவருக்கு ஆழமான புரிதல் இருந்தது நன்றாகத் தெரிந்தது.

ஆனால் அவர் அறிவியல் கட்டுரைகள் அந்த அளவிற்கு ஆழமானதாக இல்லை. இது அவர் மீது வைக்கப்படும் ஒரு பெரிய குற்றச்சாட்டு. பொதுவாக அவர் பிரபல பத்திரிக்கைகளில் எழுதியதால் சமரசம் செய்து கொண்டும், எளிமையாகவும் எழுதினாரா தெரியவில்லை.நல்ல ஆழமான அறிவியல் கட்டுரைகள் எழுத்தும் அளவிற்கு அவருக்கு சரக்கு இருந்தது என்பதில் சந்தேகமில்லை.

அவருடைய இலக்கிய பங்களிப்பு, பொதுவாக, ஒரு பொழுதுபோக்கு இலக்கியம் என்ற அளவில் நிராகரிக்கப்பட்டாலும் , அவருடைய ரசிகர்கள் அதைப் பொருட்படுத்துவதாக இல்லை. அவர் தந்தை இறந்த போதும், அவருக்கு எழுபது வயதான போதும் எழுதிய கட்டுரைகள் இலக்கியத் தரமானவை என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
 விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என எவருமில்லை. சுஜாதாவின்  இலக்கியப் பங்களிப்புக் குறித்து தரமான, நேர்மையான விமர்சனங்கள் வர வேண்டும்.


எழுத்தாளர் ஜெயமோகன் இந்தக் கட்டுரையில் கூறியது போல்,

 http://www.jeyamohan.in/?p=8412

எழுதுவார்  என எதிர்பார்ப்போம்.  மற்றவர்களும் எழுதட்டும்.
அதிலிருந்து பிறக்கும் கருத்துருவாக்கம் அவருடைய இலக்கிய இடத்தை நிரந்தரமாக நிர்ணயிக்கும். இலக்கியத்தை விடுவோம்.

சுஜாதா தமிழின் ஒரு முக்கியமான, தவிர்க்க முடியாத எழுத்தாளர் மற்றும் ஓர் இளைய தலைமுறைக்கு  நல்ல இலக்கியத்தை அடையாளம் காட்டிய வழிகாட்டி என்பதை சரித்திரம் தவறாமல் தானே  எழுதிக் கொள்ளும்.




2 கருத்துகள்:

  1. இதில் ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும்- சுஜாதா இலக்கியவாதியா என்ற கேள்வி வேறு, சுஜாதா படைத்தது இலக்கியமா என்ற கேள்வி வேறு.

    முதல் கேள்விக்கு பதில், ஆம் என்றே இருக்கும். அவரது எழுத்தைப் படித்த யாரும் அவருக்கு இலக்கியத்தில் இருந்த ஆர்வத்தையும் அவரது நுட்பமான ரசனையையும் மறுக்க முடியாது. புதுமைப்பித்தன், லா ச ராமாமிர்தம் மாதிரியான இலக்கிய ஆளுமைகளைப் பற்றி எழுதுவது என்பது வேறு. நான்கூட பக்கம் பக்கமாக எழுதுவேன், அதிகம் கவனிக்கப்படாத எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பாராட்டுவது என்பது வேறு (எழுபதுகளில் வந்த கணையாழியில் சம்பத்தின் குறுநாவல்கள் என்று ஒரு குறிப்பு எழுதுகிறார். இன்று இலக்கியம் படைக்கும் பலரை அவர்களது ஆரம்ப நாட்களிலேயே அடையாளம் கண்ட அவரை இலக்கியவாதி இல்லை என்று சொல்ல யாருக்கும் துணிச்சல் இருக்காது என்று நினைக்கிறேன்.

    அவரது புனைவு : இன்று கொஞ்சம் களையிழந்து விட்டது என்பது உண்மைதான். ஆனால், அவற்றின் இலக்கியத் தரத்துக்கு ஆதரவாக சில பொருட்படுத்தத்தக்க கருத்துகளை முன்வைக்க முடியும். காலம் பதில் சொல்லும் :)

    பதிவுக்கு ரொம்ப நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி பாஸ்கர் தங்கள் கருத்துரைக்கு. பொருட்படுத்தத்தக்க கருத்துக்களை ஆதாரங்களுடன் முன் வையுங்கள்.
    சுஜாதாவின் இலக்கியப் பங்களிப்பு குறித்து தொடர், நியாயமான, தரமான விவாதம் நடத்தப் படுவது மிகவும் நல்லது. அது எந்த விதத்திலும் அவருக்கு இருக்கும் புகழைக் குறைத்து விடாது. அவருடைய எழுத்தின் ரசிகன் என்ற நிலையில் மாறுதல் வராது. மேலும் புரிதலுக்கு உதவும்.

    பதிலளிநீக்கு