வியாழன், 30 ஏப்ரல், 2009

கருணாநிதி அன்றும் இன்றும்


கல்லுக்குடி கொண்டாய் அன்று
காங்கிரஸ் "குடி" சென்றாய் இன்று

அண்ணா என்ற மூன்றெழுத்து அன்று
"ஆட்சி" என்ற மூன்றெழுத்து இன்று

தமிழ் உயிர் மூச்சு அன்று
மூச்சுக்குத் தமிழ் இன்று

கழகக் குடும்பத்தின் தலைவர் அன்று
கலகக் குடும்பத்தின் தலைவர் இன்று

சீறாமலே சிங்கம் என்றார் அன்று
சீறினாலும் சீண்டுவார் இல்லை இன்று

வீர வசனம் அன்று
மௌன மொழி இன்று

காலம் உன் கையில் அன்று
காலத்தின் கையில் நீ இன்று

புதன், 29 ஏப்ரல், 2009

இந்த வாரக் கணக்கு - 9

0.1777777777777....... என்ற தசமத்தில் உள்ளதை பின்னமாக எழுதுக?
குறிப்பாக ௦0.5 என்பதை 1/2 என்று எழுதுவது போல்.

சென்ற வாரக் கணக்கின் விடை.

பெருக்குத் தொடரில் அமைந்த மிகப் பெரிய மூன்று இலக்க எண் = 964
பெருக்குத் தொடரில் அமைந்த மிகச் சிறிய மூன்று இலக்க எண் =124
எனவே வித்தியாசம் = 840

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம்-3

உயிரோசை இதழில் வெளியானது
இந்த நிலையில் 1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்தது.இந்தத் தேர்தலில்தான் முதல் முறையாக உத்திரப் பிரதேசத்தில் பிராமணர்கள் பா.ஜ.கவுக்கும்,முஸ்லீம்கள் ஜனதா கட்சிக்கும் ஓட்டளித்தார்கள். காங்கிரஸ் பெரும்பான்மை பெறத் தவறியது. வி.பி.சிங், ஜனதா கூட்டணி இடதுசாரி மற்றும் பா.ஜ.க உதவியுடன் ஆட்சி அமைத்தார். ஆனால் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ஆட்சிக்கு ஆபத்து வந்த போது மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தினார் என்ற குற்றச் சாட்டு பிறந்தது. வட மாநிலங்களில் பெரிய அளவில் மண்டலை எதிர்த்து போராட்டம் நடந்தது. பா.ஜ.க தன்னுடைய இந்து ஓட்டுக்களைப் பிரிப்பதற்கு வி.பி.சிங் செய்த சதி என்று கருதியது. அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டார். ரத யாத்திரை பீகார் வந்த போது அத்வானி கைது செய்யப்பட்டார். மதக் கலவரத்திற்கு வித்திட்டது. வட இந்தியாவில் ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டது. பா.ஜ.க, வி.பி சிங் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டது. ஆட்சி கவிழ்ந்தது. சந்திர சேகர் காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமரானார். அந்த ஆட்சியும் அல்ப ஆயுளில் முடிந்தது. ஏதோ நொண்டிச் சாக்குச் சொல்லி காங்கிரஸ் சந்திரசேகர் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. மீண்டும் பொதுத் தேர்தல் வந்தது
.தமிழ் நாட்டில் 1991ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணா. தி.மு.கவும் காங்கிரசும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.தேர்தலின் போது தமிழ்நாட்டில் பிரச்சாரத்தில் இருந்த ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இருந்தாலும் காங்கிரஸ் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற முடியவில்லை. ஆனால் அதிக இடங்கள் வென்ற தனிக் கட்சியாக காங்கிரஸ் இருந்ததால் அதனை ஆட்சி அமைக்க வருமாறு அன்று ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் அழைத்தார். தேர்தலிலேயே நிற்காத நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவி ஏற்றார். வி.பி.சிங் மற்றும் சந்திரசேகர் அரசுகள் இந்தியப் பொருளாதாரத்தை மோசமாகக் கையாண்டதின் விளைவு, நரசிம்ம ராவ் பதவி ஏற்ற போது நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. மன்மோகன் சிங் நிதி அமைச்சராகப் பதவி ஏற்றார். நரசிம்ம ராவ் அவருக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். பொருளாதாரச் சீர்திருத்தத்தை முழு வீச்சுடன் செயல்படுத்தினார். இன்று இந்தியா அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம் இட்டவர்கள் என்ற பெருமை மன்மோகன் சிங் மற்றும் நரசிம்ம ராவையே சேரும். மேலும் நரசிம்ம ராவ் ஆட்சியில்தான் பஞ்சாபில் நடந்து வந்த காலிஸ்தான் பிரிவினை வாதம் முழுவதும் அடக்கப்பட்டு,சாதாரண நிலைக்குக் கொண்டு வரப்பட்டது.

ஆனாலும் பாபர் மசூதி இடிப்பு,ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல், ஆட்சியைக் காப்பற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்த சர்ச்சை என்று நரசிம்ம ராவ் ஆட்சி பல குற்றச் சாட்டுகளுக்கு ஆளானது.இருந்தாலும் நரசிம்ம ராவ் தொலை நோக்குப் பார்வையுடன் ஆட்சி செய்தார் என்பதை மறுக்க முடியாது. 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. ஜெயலலிதாவின் மிகப் பெரிய ஊழல் ஆட்சி,தமிழ் நாட்டில் காங்கிரசில் ஏற்பட்ட பிளவு,காங்கிரசுக்கு தமிழ் நாட்டில் பெரிய தோல்வியைத் தந்தது. ஜெயலலிதா மற்றும் நரசிம்ம ராவ் இருவரும் பதவியை இழந்தனர். மூப்பனார் தலைமையில் பிரிந்து சென்ற காங்கிரஸ் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெற்றது. முதல் முறையாக பா.ஜ.க வாஜ்பாய் தலைமையில் பதவி ஏற்று 13 நாட்களே தாக்குப் பிடிக்க முடிந்தது. அதற்குப் பின் மத்தியில் மூன்றாவது அணி கோம்முநிச்த்களின் ஆதரவுடன் தேவகவ்டா தலைமையில் ஆட்சி அமைத்தது. கோம்முநிச்ட்கள் ஆதரவுடன் நடத்தப்பட்ட கவுடா அரசு நரசிம்ம ராவால் தொடங்கப் பட்ட புதிய பொருளாதரக் கொள்கையை, தொடர்ந்து கடைப்பிடித்தது குறிப்பிடத் தக்கது. தமிழ் நாட்டில் இருந்து முதல் முறையாக எட்டு மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றார்கள். அந்த ஆட்சி பெரிதாக ஒன்றும் செய்யாமலே கவிழ்ந்து, குஜ்ரால் தலைமையில் மற்றொரு குறுகிய கால அரசு பதவி ஏற்றது. குஜ்ரால் தலைமையில் மற்றொரு குறுகிய கால அரசு பதவி ஏற்றது
மீண்டும் 1998ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் அண்ணா தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, ம.தி.மு.க மற்றும் பா.ம.க போட்டியிட்டன. கணிசமான தொகுதிகளில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது. பா.ஜ.க தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்தது. வாஜ்பாய் பிரதமராகப் பதவி ஏற்றார். ஆனால் அந்த அரசை நடத்த வாஜ்பாய் மிகவும் கஷ்டப்பட்டார். பிரமச்சாரியான வாஜ்பாய், ஜெயலலிதா,மம்தா பானர்ஜி மற்றும் மாயாவதியால் பட்ட துன்பம் சொல்லி முடியாது. ஜெயலலிதா ஆதரவை விலக்கிக் கொண்டதால் பா.ஜ.க அரசு கவிழ்ந்து 1999ஆம் ஆண்டு மீண்டும் பொதுத் தேர்தல் வந்தது.
இந்த முறை தமிழ் நாட்டில் பா.ஜ.க, தி.மு.க கூட்டணியில் சேர்ந்தது. பா.ஜ.க மீண்டும் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. பா.ஜ.க தலைமையில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைந்தது. பா.ஜ.க தலைமையில் முதல் முறையாக காங்கிரஸ் இல்லாத ஓர் அரசு ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்தது குறிப்பிடத் தக்கது. வாஜ்பாய் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சீராக இருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுடனான கார்கில் போர் மற்றும் கண்டகர் விமானக் கடத்தல் சம்பவங்கள் ஆட்சிக்கு நல்ல பெயரைச் சேர்க்காத விஷயங்கள். மிகப்பெரிய பணச் சேமிப்பு மற்றும் ஆங்கிலம் நன்கு படித்திருந்த இளைஞர்கள் அமெரிக்க மற்றும் பிற வெளி நாட்டு நிறுவனங்களைப் பலதரப்பட்ட வேலைகளை இந்தியாவிற்கு அனுப்பத் தூண்டின. அதில் அந்த நிறுவனங்கள் வெற்றியையும் சுவைத்தன. அதே நேரத்தில் இந்தியாவில், குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழ்ந்த மக்களுக்கு அதிக பணமும்,வசதி வாய்ப்பும் கிடைக்கச் செய்தன. ஆனால் கிராம மக்களுக்கும்,விவசாயிகளுக்கும் இதில் பெரிய அளவில் ஆதாயம் கிடைக்க வில்லை. இதை உணராத பா.ஜ.க "இந்தியா மிளிருகிறது" என்ற கோஷத்துடன் 2004ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலைச் சந்தித்தது. ஆனால் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வென்றது. தமிழ் நாட்டில் இந்த முறை தி.மு.க, காங்கிரசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 40௦ தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது.
கம்யூனிஸ்ட்களும் இந்திய அளவில் 60௦ இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது. கம்யூனிஸ்ட் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி 2004ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைத்தது. லல்லு பிரசாத் கட்சி,தி.மு.க மற்றும் ஷரத் பவார் கட்சிகள் ஆட்சியில் பங்கு வகித்தன. மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்ததற்கும் பிரதமராக கடந்த ஐந்து ஆண்டுகள் இருந்ததற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது. அவரால் பிரதமராக தன்னிச்சையாகச் செயல்பட முடியாது தான். எந்த விஷயத்திலும் சோனியாவின் கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருந்தார். கம்யூனிஸ்ட்கள் மற்றும் தி.மு.க வின் எடுபிடிகள்.அமெரிக்காவுடனான 1-2-3 ஒப்பந்தத்தில் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டில் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் கூட்டணிக்குக் கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. பல சமயங்களில் மன்மோகன் சிங்கைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது என்றால் மிகையாகாது. ஆனாலும் இந்திய அரசியலில் மன்மோகன் சிங் ஒரு மிகச் சிறந்த பண்பாளர் என்பதை மறுக்க முடியாது.
இப்போது நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பலருக்கு பிரதமர் பதவி மேல் ஆசை உள்ளது. ஆனால் ஒரு தொங்குப் பாராளுமன்றம்தான் வரும் போல் உள்ளது. தேர்தலுக்குப் பிறகு பல பேரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. நாட்டில் ஒரு நல்ல தலைவர் கூடிய சீக்கிரத்தில் வருவார் என்று எதிர்பார்ப்போம்.
tlbhaskar@gmail.com

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் - 2


உயிரோசை இதழில் வெளியானது

முதல் முறையாக சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் இல்லாத ஓர் ஆட்சி மொரார்ஜி தலைமையில் 1977ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி மத்தியில் பதவி ஏற்றது. மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தார்கள்.அவசர நிலை அத்து மீறல்களை ஆராய ’ஷா’ கமிஷன் அமைக்கப்பட்டது. அவசரத்தில் ஏற்பட்ட இந்தக் கூட்டணி நீண்ட நாளைக்குத் தாக்குப் பிடிக்கவில்லை.கட்சிக்குள் கௌண்டமணி-செந்தில் ரேஞ்சுக்கு சண்டை நடந்தது. மேலும் ஷா கமிஷன் விசாரணை,இந்திரா காந்தியை சிறையில் அடைத்தது எல்லாமாக அவர் மேல் மக்கள் மத்தியில் பரிதாபம் ஏற்பட வாய்ப்பானது. பத்திரிகையைத் திறந்தால் ஜனதா கட்சியின் உட்கட்சிச் சண்டை அல்லது இந்திரா காந்தி அவசரநிலைக் கொடுமைகள் பற்றிய விசாரணைதான் செய்தியாக இருந்தன. சரண் சிங்கின் பதவி ஆசையால் சொற்ப ஆயுளில் ஜனதா கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 64 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சரண் சிங் பிரதமராகப் பதவி ஏற்றார். இந்த நேரத்தில் தமிழ் நாட்டை ஆண்டு வந்த எம்.ஜி.ஆரின் ஒரே குறிக்கோள் கருணாநிதியை எதிர்ப்பதுதான். அதற்காக மொரார்ஜி மற்றும் சரண் சிங் அரசை ஆதரித்தார். கருணாநிதியும் தன் மேல் உள்ள சர்க்காரிய கமிஷன் கண்டறிந்த ஊழல் வழக்குகளில் இருந்து விடுபட எவ்வளவோ முயற்சி செய்தார். மொரார்ஜி முடியாது என்று கூறிவிட்டார். இந்திரா மதுரைக்கு வந்த போது தி.மு.க வினர் கடுமையான வன்முறையில் ஈடுபட்டார்கள். 1979ஆம் ஆண்டு மத்தியில் கூட இந்திராவை எதிர்த்து மிகக் கடுமையான பேட்டியை கருணாநிதி கொடுத்தார்.

ஜனதாவின் உள்கட்சிச் சண்டையை இந்திரா காந்தி மிக சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டார். சரண் சிங் அரசை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று கூறிவிட்டு,பாராளுமன்றம் சரண் சிங் தலைமையில் கூடுவதற்கு முன்பு காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றார். சரண் சிங் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டார்.

எம்.ஜி.ஆர் விலகிச் சென்றதால் காங்கிரசுக்கு தமிழ் நாட்டில் தி.மு.க தேவைப்பட்டது. கருணாநிதிக்கும் ஊழல் குற்றச் சாட்டுகளில் இருந்து தப்பிக்க இந்திரா உதவுவார் என்று நினைத்தார்.


"நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக" என்று தி.மு.க காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. எம்.ஜி.ஆர் ஜனதா மற்றும் இடது சாரிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.எம்.ஜி.ஆர் தனக்கு அசைக்க முடியாத மக்கள் ஆதரவு இருப்பாக நினைத்தார். ஆனால் அவர் அரசியல் வாழ்க்கையில் தேர்தலில் அவருக்குக் கிடைத்த ஒரே தோல்வியாக அமைந்தது 1980ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல். தி.மு.க காங்கிரஸ் கூட்டணி தமிழ் நாட்டில் அமோக வெற்றி பெற்றது. அகில இந்தியாவில் இந்திரா காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றி பெற்று இந்திரா மீண்டும் 1980ஆம் ஆண்டு பிரதமராகப் பதவி ஏற்றார். இந்திராவும் ஆட்சிக்கு வந்தார். கருணாநிதியும் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்தார். இருவர் கனவும் நிறைவேறியது. கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர் இருந்த வரையில் தேர்தலில் கிடைத்த ஒரே ஆறுதல் வெற்றி இந்தத் தேர்தலில்தான் கிடைத்தது.








1980ஆம் ஆண்டு இந்திரா பதவி ஏற்ற போது பணவீக்கம் மிக அதிகமாக இருந்தது. முதல்முறையாக இந்தியா ஐ.எம்.ஃப் இடமிருந்து கடன் வாங்கியது. ஆர்.வெங்கட்ராமன் தான் மத்திய நிதி அமைச்சராக இருந்து இந்தக் கடனை வாங்க முற்பட்டார்.1982ஆம் ஆண்டு ஆசியப் போட்டிகள் இந்தியாவில் நடந்தன. தனி காலிஸ்தான் கேட்டு பிண்டரன்வாலே தலைமையில் நடந்த எழுச்சியை ஒடுக்க சீக்கிய பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியது இந்திரா காந்தியின் முடிவுக்கு முக்கிய காரணமானது. தனக்கு காவலுக்கு இருந்த காவலாளிகளாலே இந்திரா காந்தி 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.






இந்திரா காந்தி வெளிநாட்டில் இந்தியாவின் மதிப்பை அதிக அளவு உயர்த்தினார் என்றால் மிகையாகாது. ஆனால் உள்நாட்டில் அவர் எந்த விதமான எதிர்ப்பையும் தாங்கக் கூடியவராக இல்லாது இருந்தது ஒரு பெரிய குறை தான். கவர்னர்களையும்,முதல்வர்களையும் தன் விருப்பத்திற்கு மாற்றி வந்தார். ஜனாதிபதி பதவி ஒரு அலங்காரப் பொருளாக ஆக்கப்பட்டது. மிகத் துணிச்சலானவர். முடிவுகள் எடுப்பதில் தயக்கம் கட்டாதவர். ஒரு சிறந்த அரசியல் வாதியாக இருந்தார் என்பது மறுக்க முடியாதது. தலைவர்கள் முடிவு எடுப்பதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று முடிவுகளின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த முடிவைச் செயல்படுத்தி அதனை எதிர் கொள்வது. மற்றொரு வகை விளைவுகளைப் பற்றி நன்கு சிந்தித்துப் பிறகு ஒரு முடிவுக்கு வந்து அந்த முடிவை செயல் படுத்துவது. இந்திரா காந்தி முதல் வகையைச் சேர்ந்தவர். எத்தனை குறைகள் இருந்தாலும் இன்று இந்த அளவு இந்தியா முன்னேறி இருப்பதற்கு இந்திரா காந்தியின் பங்கு மறுக்க முடியாதது. இந்திரா காந்திக்குப் பிறகு அவரைப் போல ஒரு சக்தி வாய்ந்த,மக்களால் கவரப்பட்ட,துணிவான பிரதமர் இது வரை இந்தியாவிற்குக் கிடைக்கவில்லை என்பது ஒரு வருத்தமான விஷயம்தான்.





இதற்கு நடுவில் தமிழ்நாட்டில் அண்ணா தி.மு.கவும் காங்கிரசும் நெருக்கமாயின. எம்.ஜி.ஆர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காங்கிரசும்,அண்ணா தி.மு.கவும் 1984ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி அமைத்தது. நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தலும் நடைபெற்றது.

இந்திரா காந்தியின் மறைவு மற்றும் எம்.ஜி.ஆரின் மோசமான உடல்நிலை போன்றவற்றால் வீசிய அனுதாப அலையில் அந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர் அப்போது அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கருணாநிதி தேர்தலில் ஜெயித்தால் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் எம்.ஜி.ஆரிடம் ஆட்சியை ஒப்படைப்பதாகக் கூறி ஓட்டுக் கேட்டார். ஏழு ஆண்டு தண்டனை போதாதா என்றும்,புறங்கையைத் தானே நக்கினோம் என்றெல்லாம் மன்றாடினார். ஆனால் பலன் இல்லை. ராஜீவ் காந்தி பிரதமராகவும்,எம்.ஜி.ஆர் மீண்டும் தமிழக முதல்வராகவும் பதவி ஏற்றனர்.





ராஜீவ் காந்தியின் அரசியல் மற்றும் நிர்வாக அனுபவமின்மை அவரது ஆட்சிக்கு கூடிய விரைவில் கெட்ட பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தியாவை நவீன மயமாக்க முற்பட்டார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார் எனலாம். ஆனால் போபர்ஸ் ஊழல்,இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பியது,ஷா பானு விவகாரத்தில் கொண்டு வந்த சட்டத் திருத்தம்,ராம ஜன்ம பூமி கோவில் பிரச்சினையில் எடுத்த தப்பான முடிவு காங்கிரஸ் மற்றும் ராஜீவின் மீது கடுமையான எதிர்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது..





தொடரும் .....

திங்கள், 13 ஏப்ரல், 2009

நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் -1


உயிரோசை இதழில் வெளியானது
பொதுவாகத் தமிழ்நாட்டில் அந்த நாட்களில் நகரப் புறங்களில் இருந்த குடும்பங்களில் தவறாமல் மாநில மற்றும் அகில இந்திய செய்திகள் வானொலியில் கேட்பது,நடைமுறை அரசியல் மற்றும் கிரிக்கெட் பற்றி விவாதிப்பது,தினசரி பத்திரிகைகள் படிப்பது வாழ்க்கையின் அங்கமாக இருந்தது.எனவே சிறு வயது முதலே இயற்கையாகவே எனக்கு அரசியல் மற்றும் கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டானது. என் நினைவில் இருக்கும் முதல் பொதுத் தேர்தல் நடந்த வருடம் 1971. அப்போது நான் படித்த முனிசிபல் உயர்நிலைப் பள்ளி ஈரோட்டில் உள்ள கருங்கல் பாளையத்தில் இருந்தது.ஒரு நாள் நடந்து செல்லும் போது,காமராஜ் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறார் என்று மிகப் பெரிய கூட்டம் காத்திருந்தது. ஈ.வி.கே.சம்பத் தான் காங்கிரஸ் சார்பில் நின்ற வேட்பாளர்.சிவாஜியும் பிரச்சாரத்திற்கு வந்த போது முதன் முறையாக அவரைப் பார்த்தேன்.காமராஜுக்கும்,சிவாஜிக்கும் கூட்டம் வந்ததே தவிர தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.

காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்து சந்தித்த முதல் தேர்தல். இந்திரா காந்தி ஒரு புறம். மற்ற காங்கிரசின் மூத்த தலைவர்களான காமராஜ்,நிஜலிங்கப்பா,மொரார்ஜி போன்றவர்கள் மற்றொரு புறம்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திராவை முழுவதும் ஆதரித்தது.தமிழ் நாட்டில் அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு கருணாநிதி தலைமையில் தி.மு.க. தேர்தலைச் சந்தித்தது. இந்திரா காங்கிரசுடன் தி.மு.க கூட்டணி அமைத்திருந்தது.தமிழ் நாடு சட்ட மன்றத்தைக் கலைத்து பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் தி.மு.க சந்தித்தது. தி.மு.க எல்லா சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட சம்மதித்து,இந்திரா காங்கிரஸ் 20௦ நாடாளு மன்றத் தொகுதிகளில் போட்டியிட்டதாக நினைவு.இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது.அகில இந்திய அளவில் இந்திராவுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது.தனிப் பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் மத்தியிலும்,தி.மு.க மற்றும் கருணாநிதியின் மீது கடுமையான ஊழல் மற்றும் நிர்வாகச சீர் கேடுகள் கூறப்பட்ட போதும் 184 சட்டமன்றத் தொகுதிகள் வென்று தி.மு.க தமிழ் நாட்டிலும் ஆட்சி அமைத்தன.பாராளுமன்ற வெற்றியைத் தொடர்ந்து 1971ஆம் ஆண்டு இறுதியில் நடந்த பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்றதில்,இந்திராவின் மதிப்பு மக்கள் மத்தியில் பெருமளவு உயர்ந்தது.




இந்திராவின் ஆட்சியில் வெளிநாட்டுக் கொள்கையில் மிக உறுதியாக இருந்தார்.பாகிஸ்தானுடனான போருக்கு முன்பு உலகத் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டியது மற்றும் ரஷ்யாவுடனான உடன்பாடு,போரில் வெற்றி அவருக்கு மிக நல்ல பெயரையும்,மக்கள் மத்தியில் ஆதரவையும் பெருக்கியது.பசுமைப் புரட்சித் திட்டத்தை அமல்படுத்தியதும் அவர் ஆட்சியின் சிறப்பு அம்சமாகும்.மிகவும் சர்ச்சைக்கு உள்ளான பொக்ரானில் 1974ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி நடந்த அணுகுண்டு சோதனை இந்தியாவின் மதிப்பை உலக நாடுகள் மத்தியில் உயரச் செய்தது.

அதே நேரத்தில் 1972ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சி விலைவாசி ஏற்றத்திற்கு வித்திட்டது.பணவீக்கம் அதிகமானது.அரசின் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் வந்தவண்ணம் இருந்தன."ஏழ்மையை விரட்டுவோம்" என்ற முழக்கத்துடன் 1971ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றாலும்,அது ஒரு கனவாகவே இருந்தது.இதற்கு நடுவில் குஜராத்தில் மொரர்ஜியும்,பீகாரில் ஜெயப்ரகாஷ் நாராயணனும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பெரிய அளவில் மக்களைத் திரட்டினார்கள். இந்தப் பலமுனைத் தாக்குதலை இந்திரா காந்தியின் அரசு தாக்குப் பிடிக்க முடியாமல் திண்டாடியது.பலவிதமான தொழிலாளர் போராட்டங்கள்,நிறுவன மூடல்கள் மற்றும் மிகப் பெரிய அளவிலான இரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் என்று நாடே அல்லோகலப் பட்டது.வலுவான எதிர்கட்சி இல்லாத நிலையிலும்,விலைவாசி ஏற்றம்,பணவீக்கம் மற்றும் ஊழல் முதலியவைகளால் காங்கிரஸ் ஆட்சி மிகவும் தொல்லைக்கு உள்ளானது.

அதிகார பலம்,பதவி மோகம்,அவருக்கு எதிராக வந்த அலகாபாத் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு,வேகமாக இழந்து வந்த மக்கள் ஆதரவு இந்திரா காந்தியை யாரும் நினைத்துப் பார்க்காத முடிவை எடுக்க வைத்தது.இந்திய ஜனநாயகத்தின் அனைத்துக் கதவுகளையும் மூடும் விதமாக 1975ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி ‘அவசரநிலை பிரகடனத்தை’ அமல்படுத்தினர் இந்திரா.எல்லா முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களையும் சிறையில் அடைத்தார். கடுமையான பத்திரிகைத் தணிக்கை அமலானது.வானொலியில் சதா சர்வ காலமும் இந்திராவின் புகழ்தான். நல்ல வேளை அந்தக் காலத்தில் தொலைக்காட்சி இல்லை.20௦ அம்சத் திட்டம் என்ற ஒன்று தாரக மந்திரம் ஆன காலகட்டம் அது.ஆனால் எந்த வேலை நிறுத்தமும் நடக்கவில்லை.ஆண்டின் வளர்ச்சி 8% உயர்ந்தது.அரசு அலுவலங்களில் தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு வந்தது மிகவும் ஆச்சரியமாகப் பேசப்பட்டது அந்தக் காலத்தில்.

அவசர நிலை பிரகடனத்தைப் பயன்படுத்தி அதிகார துஷ்ப்ரயோகம் பெரிய அளவில் நடந்தது.சஞ்சய் காந்தி குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சையை மக்கள் விருப்பத்திற்கு மாறாக பெரிய அளவில்,குறிப்பாக,வடஇந்தியாவில் செயல் படுத்தினார். மக்கள் ஒரு வித அச்சத்துடன் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.ஆனால் தமிழ் நாட்டில் நிலைமை வேறு மாதிரி இருந்தது. கருணாநிதி இந்திராவையும்,அவசர நிலையையும் கடுமையாக எதிர்த்தார். ஜார்ஜ் பெர்னண்டோஸ் போன்ற இந்திரா எதிர்ப்பாளர்கள் தமிழ் நாட்டில் தங்கி இருந்தார்கள். மேலும் தமிழ் நாட்டில் அரிசிப் பஞ்சம் தலை விரித்தாடியது.அப்போதுதான் படி (ஒன்றரைக் கிலோ) என்று விற்கப்பட்டு வந்த அரிசி கிலோ என்ற அளவுடன் மார்க்கெட்டில் வாங்கும் நிலை ஏற்பட்டது.1975ஆம் ஆண்டு கிலோ அரிசியின் விலை 8/= ரூபாய் அளவுக்கு விற்றது.எம்.ஜி.ஆர் இந்திரா காந்தியை ஆதரித்தார்.இந்திரா காந்தி கருணாநிதியின் அரசை 1976ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி கலைத்து,ஆயிரக்கணக்கான தி.மு.க வினரை ‘மிசா’ சட்டத்தில் சிறையில் அடைத்தார்.மத்தியத் தொகுப்பில் இருந்து இந்திரா காந்தி அரிசி கொடுத்து தமிழ்நாட்டில் நிலைமையை சீர் செய்ய முயன்றார். அப்போது இருந்த கருணாநிதியின் தைரியத்தையும்,போர்க்குணத்தையும் இன்று காங்கிரஸ் மற்றும் சோனியாவின் முன்பு பாதிரியார் முன் மண்டியிட்டு பாவமன்னிப்பு கேட்கும் பக்தன் இருப்பதைப் போல் உள்ள கருணாநிதியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மிகவும் பரிதாபமாகவும்,வேதனையாகவும் உள்ளது.என்ன செய்வது காலத்தின் கட்டாயம்.



அவசர நிலையை ஜன சங்கம் (அன்றைய பா.ஜ.க.),இடது கம்யூனிஸ்ட்,தி.மு.க மற்றும் சோசலிஸ்டுகள் கடுமையாக எதிர்த்தார்கள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் துக்ளக்,பத்திரிகைத் தணிக்கையை மீறியும் அரசுக்கு எதிராகச் செய்திகள் வெளியிட்டார்கள். ‘சர்வாதிகாரி’ என்று என்றோ வந்த படத்தின் விமர்சனம் வெளியிட்டு சோ தன் எதிர்ப்பைத் தெரிவித்தது இன்றும் மறக்க முடியாதது.

மொரார்ஜி தேசாய் தனிமைச் சிறையில் இருந்த போது பன்சிலால் என்ற காங்கிரஸ் அமைச்சர் அவரைப் பார்க்கச் சென்றிருக்கிறார்.அந்த அறை வசதி குறைவாக இருந்ததைப் பார்த்து மொரார்ஜியிடம் "இந்த அறையில் போதுமான வசதி செய்து கொடுக்கட்டுமா" என்று வினவியுள்ளார்.அதற்கு மொரார்ஜி எனக்குத் தேவையில்லை.ஆனால் நீங்கள் இன்னும் சிறிது நாளில் இங்கு வரப் போகிறீர்கள்.அறையை மேம்படுத்தினால் உங்களுக்கு வேண்டுமானால் அது உதவும் என்று கூறியதாகச் செய்திகள் வந்தன.

உலக நாடுகளின் அழுத்தத்தால் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையிலிருந்து விடுவித்து பொதுத் தேர்தலை அறிவித்தார் இந்திரா காந்தி.அவசர நிலையை எதிர்த்த கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘ஜனதா கட்சி’ உருவானது.வட இந்தியாவில் காங்கிரஸ் படு தோல்வியைத் தழுவியது.இந்திரா காந்தி ரேபரிளியில் தோற்றது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.ஆனால் தென் மாநிலங்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.அவசர நிலையின் அத்து மீறல்கள் பெருமளவு தென் மாநிலங்களில் இல்லாதது முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. தமிழ் நாட்டில் அண்ணா தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.காமராஜ் இல்லாத பழைய காங்கிரஸ் தி.மு.க உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. வட சென்னையில் அன்று எம்.ஜி.ஆரின் வலது கரமாக இருந்த நாஞ்சில் மனோகரனைத் தோற்கடித்ததுதான் ஒரே சாதனை.

தொடரும் ........

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

இந்த வாரக் கணக்கு - 8

a,b,c எனபவை மூன்று இயல் எண்கள் என்று கொள்வோம்.

வர்க்கமூலம்(ab)=c

என்று இருந்தால் இந்த மூன்று எண்கள் a,b,c என்பவைகள் பெருக்குத்தொடரில்(Geometric Progression) அமைந்த எண்கள் என்று அழைக்கப் படுகிறது.

உதாரணமாக 2,4,8 என்ற மூன்று எண்களை எடுத்துக் கொள்வோம்.

2X8=16

16-இன் வர்க்கமூலம் 4 ஆகும்.

எனவே 2,4,8 என்ற எண்கள் பெருக்குத்தொடரில் அமைந்த எண்கள் ஆகும்.

கேள்வி: மூன்று வெவ்வேறு இலக்கங்களைக் கொண்ட பெருக்குத் தொடரில் அமைந்த மிகச் சிறிய மூன்று இலக்க எண்ணுக்கும், மிகப் பெரிய மூன்று இலக்க எண்ணுக்கும் இடையே உள்ள வித்தியாசம் எவ்வளவு?

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

இந்த வாரக் கணக்கு - 7


கனசதுரத்திற்கு 6 முகங்கள் (faces of cube) இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
அறுபத்தி நான்கு 1X1X1 அளவு கொண்ட கனசதுரங்களை பசையினால் ஒட்டி (glued) 4X4X4 என்ற அளவு கொண்ட பெரிய கனசதுரம் உண்டாக்கப்பட்டது.

இப்படி பெரிய கனசதுரம் செய்த போது எத்தனை ஜோடி 1X1X1 கனசதுரங்களின் முகங்கள் (faces) ஒன்றோடொன்று ஒட்டப்பட்டன?

புதன், 1 ஏப்ரல், 2009

பகா எண்களைக் கண்டறிய சுந்திரத்தின் சல்லடை (sieve of Sundaram) முறை


பகா எண்களின் பகிர்மானம் (distribution) ஓர் ஒழுங்கான தன்மை உடையதாக இல்லை என்பதை சென்ற பதிவில் பார்தோம்.மேலும் மிகப் பெரிய பகா எண் என்று எதுவும் இல்லை என்றும், எந்த பகா எண் கொடுத்தாலும் அதை விட பெரிய பகா எண்ணைக் கண்டறியும் முறையையும் சென்ற பதிவில் பார்த்தோம்.அப்படியானால் ஏதாவது முறையில் பகா எண்களைக் அடையாளம் காண முடியுமா?

ஆம், காண முடியும்.எஸ்.பி.சுந்தரம் என்ற இந்திய கணிதவியலாளர் இதற்கு ஓர் முறையை கண்டறிந்துள்ளார்.அதன் பெயர் சுந்திரத்தின் சல்லடை (sieve of Sundaram) முறை ஆகும். சுந்தரத்தின் சல்லடை முறை பகா எண்கள் இல்லாதவைகளை அடையாளம் காட்டும்.அதிலிருந்து பகா எண்களைக் கண்டறியலாம். எப்படி என்று இப்போது பார்ப்போம்.

முதலில் கூட்டுத் தொடர் என்றால் ஒரு குறிப்பிட்ட எண்ணில் தொடங்கி அடுத்தடுத்துள்ள எண்கள் ஒரு நிர்ணயிக்கப்பட்ட வித்தியாசம் கொண்ட எண்களின் வரிசையாக இருக்கும். உதாரணமாக

1,2,3,4,5,.......

என்ற கூட்டுத் தொடரில் முதல் எண்ணும் நிர்ணயிக்கப்பட்ட வித்தியாசமும் ஒன்று ஆகும்.

2,4,6,8,.....

என்ற கூட்டுத் தொடரில் முதல் எண்ணும் நிர்ணயிக்கப்பட்ட வித்தியாசமும் 2 ஆகும்.

சுந்திரத்தின் சல்லடை முறையை அறிய முதலில்

4,7,10,13,16,19,22,25,28,31..........

என்ற நிர்ணயிக்கப்பட்ட வித்தியாசம் 3 கொண்ட 4-ல் தொடங்கும் கூட்டுத் தொடரை எடுத்துக் கொள்வோம்.

அடுத்ததாக நிர்ணயிக்கப்பட்ட வித்தியாசம் 5 கொண்ட 7-ல் தொடங்கும் கூட்டுத் தொடரை எழுதுவோம்.

7,12,17,22,27,32,37,42,47,52,.............

அடுத்ததாக நிர்ணயிக்கப்பட்ட வித்தியாசம் 7 கொண்ட 10-ல் தொடங்கும் கூட்டுத் தொடரை எழுதுவோம்.

10,17,24,31,38,45,52,59,66,73..........

அடுத்ததாக நிர்ணயிக்கப்பட்ட வித்தியாசம் 9 கொண்ட 13-ல் தொடங்கும் கூட்டுத் தொடரை எழுதுவோம்.

13,22,31,40,49,58,........

இப்போது மேலே குறிப்பிட்டுள்ள கூட்டுத் தொடர்களை எழுதும் முறையில் உள்ள ஓர் ஒழுங்கு உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதாவது முதல் கூட்டுத் தொடர்
நிர்ணயிக்கப்பட்ட வித்தியாசம் 3 என்றால், அடுத்தக் கூட்டுத் தொகையின் நிர்ணயிக்கப்பட்ட வித்தியாசம் 5 ,அதற்கு அடுத்த கூட்டுத் தொகையின் நிர்ணயிக்கப்பட்ட வித்தியாசம் 7 என்று நிர்ணயிக்கப்பட்ட வித்தியாசத்தை 2ஆகா உயர்த்தி அடுத்தக் கூட்டுத் தொடரை எழுதுகிறோம்.மேலும் முதல் கூட்டுத்தொடரின் இரண்டாவது,மூன்றாவது,நான்காவது ....எண்கள் முறையே இரண்டாவது,மூன்றாவது,நான்காவது........ கூட்டுத்தொடரின் முதல் எண்ணாக வருவதைக் காணலாம்.

இப்போது இந்த கூட்டுத் தொடரை எல்லாம் ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுவோம்.

4,7,10,13,16,19,22,25,28,31..........
7,12,17,22,27,32,37,42,47,52,.............
10,17,24,31,38,45,52,59,66,73..........
13,22,31,40,49,58,..............
16,27,38,49,60,69,78,.....
............................................
...............................................

மேலே கூட்டுத் தொடரில் உள்ள ஏதாவது ஒரு எண்ணை எடுத்து அதனை 2-ல் பெருக்கி 1-னைக் கூட்டினால்,கிடைக்கும் எண் ஒரு பகா எண்ணாக இருக்காது.உதாரணமாக
13,31,58 என்ற எண்களை எடுத்துக் கொள்வோம்.

13X2+1=27.
31X2+1=63
58X2+1=117....

இதிலிருந்து இந்த கூட்டுத் தொடர்களில் உள்ள எந்த எண் n-க்கும் 2n+1 ஒரு பகா எண்ணாக இருக்காது

அதேபோல் இந்த தொடர்களில் இல்லாத 5,6,41 முதலிய எண்களைப் பார்ப்போம்.

2X5+1=11
2X6+1=13
2X41+1=83...

இதிலிருந்து இந்த கூட்டுத் தொடர்களில் இல்லாத எந்த எண் k-க்கும் 2k+1 ஒரு பகா எண்ணாக இருக்கும் என்பதைக் காண முடிகிறது.

மொத்தத்தில் எந்த ஒரு இயல் எண் N-க்கும்,2N+1 ஒரு பகா எண்ணாக இருக்க போதுமானதும் மற்றும் தேவையானதுமான நிபந்தனை N இந்த கூட்டுத் தொடர்களில் இல்லாமல் இருப்பது தான்.

இதை நிரூபிக்கும் முறையை அடுத்த பதிவில் பார்ப்போம்.

2 என்ற எண் மட்டும் தான் ஒரேஒரு இரட்டைப் படை பகா எண் ஆகும்.அதனை மேலே கூறிய முறையிலிருந்து பெற முடியாது.மற்ற எல்லா பகா எண்களையும் கிடைக்கப் பெறலாம். குறிப்பாக k-வது பகா எண்ணை அடையாளம் காண, (k-1)-வது விடுபட்ட எண்ணை மேலே உள்ள கூட்டுத் தொடர்களிலிருந்து கண்டறிந்து அதனை 2-ஆல் பெருக்கி ஒன்றைக் கூட்டினால் k-வது பகா எண் கிடைக்கப் பெறலாம்.
உதாரணமாக 20 என்ற எண் மேலே உள்ள கூட்டுத் தொடர்களிலிருந்து விடுபட்ட 10-வது எண் ஆகும்.

20X2+1=41

41 என்ற எண் 11-வது பகா எண் ஆகும்.

இப்படி ஒரு சுலபமான ஆனால் வலுவான பகா எண்களைக் கண்டறியும் உத்தியை சுந்தரம் கொடுத்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.