வியாழன், 28 மே, 2009

மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் கருணாநிதியும்,வரலாறும்


தமிழ் நாட்டிலேயே மிகவும் மகிழ்ச்சியாகவும், குதுகலமாகவும் இருக்கும் நபர் முதலமைச்சர் கருணாநிதியாகத் தான் இருக்க முடியும். அதில் தவறு ஒன்றுமில்லை.சமீபத்தில் அவருக்குக் கிடைத்த வெற்றிகள் மகத்தானவைகள் என்றால் மிகையாகாது.வெற்றிகளின் பட்டியல் இதோ:

1. பாராளுமன்றத் தேர்தலில் பலமுனை எதிர்ப்பையும் முறியடித்து வெற்றிக் கனியைப் பறித்துள்ளார்.குறிப்பாக அவர் மகன் அழகிரியின் வெற்றி அவரை இன்பக் கடலில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

2. கூடவே இருந்து கருணாநிதியையும்,தி.மு.கவையும் கடுமையாகத் தாக்கி வந்த ராமதாஸ் மண்ணைக் கவ்வியதில் பேரானந்தம் அடைந்திருப்பார் என்று சொல்லத் தான் வேண்டுமா?

3. தன்னுடைய பரம எதிரியான எம்.ஜி.யாரின் கட்சி மத்திய அரசின் பக்கம் தலை வைக்க முடியாமல் கடந்த பத்து ஆண்டுகளாக செய்து வரும் சாதனை மனதைக் குளிர வைக்காமல் என்ன செய்யும்?

4.பொது வாழ்வுக்காக தன் வாழ்கையையே அர்பணித்துக் கொண்டாலும், தன் குடும்பங்கள் மீது தீராத பாசம் வைத்திருக்கும் கருணாநிதிக்கு மகன்கள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிப் பீடத்தில் அமருவதைக் கண்டு மனம் குதூகலிக்காமல் என்ன செய்யும்?

5. அத்தனை இலங்கையின் தமிழ் போராளிக் குழுக்களும் கருணாநிதியைத் தேடி வந்த போது, விடுதலைப் புலிகள் மட்டும் எம்.ஜி.யாரைத் தேடிச் சென்றனர். அந்த விடுதலைப் புலிகள் இன்று தோற்றது இவருக்கு மகிழ்ச்சியைத் தராமல் இருக்க முடியுமா?

வரலாறு இவரைப் பற்றி என்ன சொல்லும்?

1. கடந்த ஐம்பது வருடங்களாக தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒருவர் உண்டென்றால் அது கருணாநிதி தான்.இவர் இல்லாத வரலாறு நினைத்துக் கூட பார்க்க முடியாது

2. எத்தனையோ விதமான வேறு பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் (ஊழல்,அராஜகம்,தன குடும்பத்தை முன்னிறுத்துதல்), இவர் சாதாரண மக்களுக்கு செய்த உதவிகள் மறுக்க முடியாதவை.தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததும் இவருக்கு பெருமை சேர்க்கும்.

ஆனால் உலகத் தமிழர்களின் தலைவர் என்ற பட்டத்தின் மீது தான் அவருக்கு மிகுந்த பற்று இருந்தது. அது இப்போது அவருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாகும்.குறிப்பாக 1980 களில் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அவர் காட்டிய வேகம் அவரை "உலகத் தமிழர்களின் தலைவர்" என்ற பட்டத்தை நோக்கி இட்டுச் சென்றது. ஆனால் இன்று "அவர் இதயத்தில் மட்டும் இடம் கொடுக்கப்பட்ட ஈழப் பிரச்சனைக்கு" கடிதம் எழுதுவது,தந்தி அடிப்பது,கவிதை எழுதுவது போதும் என்று நினைத்து விட்டார் போல் உள்ளது.இன்று பெற்ற பதவிகள் சுகம், நாளைக் கிடைக்கப் போகும் பட்டத்தை விட குதுகலமானது இல்லையா? பட்டம் கிடைக்கவில்லை என்றால் என்ன? ஆண்டவன் தீர்ப்பு என்று புலம்பாமல் அடங்கிப் போக வேண்டியது தான்.

வெள்ளி, 22 மே, 2009

"அரசை நான் நடத்த வேண்டாமா?" கருணாநிதிக்கு மன்மோகன் சிங் பதிலடி


தான் சொல்லிய படி எல்லாம் ஆடி வந்த பிரதமர் மன்மோகன் சிங் இப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கூறியது தான் கருணாநிதியை கோபத்தோடு சென்னை திரும்ப வைத்தது. இவர் இருக்கும் இடம் தேடி 2004ம் ஆண்டு வந்த காங்கிரசார், இன்று உடல் நிலை சரியில்லாத போதும் அவர்களைத் தேடி வரும் படி செய்தது பரிதாபம் தான்.

அப்படியாவது முறைத்துக் கொண்டு வந்தால் பதவி ஏற்பு விழா நடக்காது என்ற கனவு பொய்த்துப்போனது. "அரசை நான் நடத்த வேண்டாமா?" என்று மென்மையாக அதே நேரத்தில் கடுமையாக மன்மோகன் கூறியது தி.மு.கவை ஆச்சிரியப்பட வைத்திருக்கிறது. மேலும் சோனியா தன் பக்கம் இருந்து ஆதரிப்பார் என்று எதிர் பார்த்த கருணாநிதிக்கு பெரிய அதிர்ச்சி தான் காத்திருந்தது.

குறிப்பாக அடிப்படை வசதிகள் சம்பந்தப்பட்ட இலாக்காகளை நேர்மையான,திறமையான நபருக்கு கொடுக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் நினைப்பது தவறில்லை.பாலுவும்,ராஜாவும் ஊழலின் இரு பக்கங்களாக சென்ற ஆட்சியில் இருந்ததாக எல்லா பத்திரிகைகளும்,குறிப்பாக வட நாட்டு ஊடகங்களும் பிரசாரம் செய்து வருகின்றன.

இப்போது உள்ள நிலையில் கொடுப்பதை வாங்கிக் கொண்டு கவிதை எழுவதைத் தவிர கருணாநிதியால் ஒன்றும் செய்ய முடியாது. கருணாநிதியின் "கருணையில்" சென்ற ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் இன்று "கருணை" காட்டாமல் போனது காலத்தின் கோலம்.பொறுத்திருந்து பார்ப்போம் கருணாநிதி பொங்கி எழுகிறாரா அல்லது பதுங்கிப் போகிறாரா என்று?

இந்த வாரக் கணக்கு - 12


p,q,r,s நான்கு நேர்ம முழு எண்கள் (positive integers) எனக் கொள்வோம்.

pq+rs=38
pr+qs=34
ps+qr=43

எனில் p+q+r+s - இன் மதிப்பு என்ன?


சென்ற வாரக் கணக்கிற்கு சரியான விடையும், விளக்கமும் கொடுத்த பாலராஜன்கீதா அவர்களுக்கு மிக்க நன்றி.

வியாழன், 21 மே, 2009

ராபர்ட் பிராஸ்டின் நெருப்பும்,பனிக்கட்டியும்

ராபர்ட் பிராஸ்டின் (Robert Frost) இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
ஆசையை நெருப்பிற்கும்,வெறுப்பை பனிக்கட்டிக்கும் உவமையாக கொடுத்திருக்கிறார் என்பது என் கணிப்பு.உணர்ச்சிகள்,ஆசைகள் தான் நெருப்பாகிறது இங்கு இந்தக் கவிதையை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் எண்ணங்களும், புரிபடும் அர்த்தங்களும் வெவ்வேறு வகையாக இருப்பது தான் இந்தக் கவிதையின் சிறப்பாகும்.



உலகம் நெருப்பில் முடியும் என்பது சிலர் கூற்று

பனிக்கட்டியில் முடியும் என்பது சிலர் கூற்று.

நான் சுவைத்த ஆசைகளிலிருந்து

நெருப்பை விரும்புவர்கள் பக்கமே இருக்கிறேன்.

இரண்டு முறை உலகம் முடிவிற்கு வருமானால்,

வெறுப்பைப் பற்றி போதுமான அளவு எனக்குத் தெரியும்

நான் நினைக்கிறேன் பனிக்கட்டியும் அழிவிற்கு மிகச் சிறந்தது

என சொல்ல முடியும்

மேலும் அதுவே போதுமானதும் கூட.




மனிதனுக்கு பல விதமான ஆசைகள்.சில ஆசைகள் விருப்பங்களாக வந்து போகும்.மற்றும் சில ஆசைகள் நிராசைகளாகப் போய் விடும். அப்போது ஏமாற்றம்,கோபம் அதனால் வன்முறை என்று அழிவுப் பாதைக்கு போகும் வாழ்க்கை.சில சமயம் ஆசையின் காரணமாக உடம்பு கொதிக்கும்,நரம்பு புடைக்கும்.ஆனால் சில ஆசைகள் மனதில் கொழுந்து விட்டு எரியும்.அந்த எரியும் ஆசைகள் தான் மனிதனின் அழிவிற்கு காரணமாகிறது. இந்த ஆசைகளைத் தான் நெருப்பாக சித்தரிக்கிறார் பிராஸ்ட்.

வெறுப்பு என்று வந்து விட்டால் மனம் படும் பாடு சொல்லி முடியாது.வெறுப்பின் விளைவு ஆத்திரம்.ஆத்திரம் வந்தால் புத்தி பேதலிக்கிறது.அழிவை நோக்கி இட்டுச் செல்லும் கருவியாகிறது.கறுப்பர்,வெள்ளையர்,ஜாதி,மதம் மற்றும் இனம் என்ற பெயரில் தான் மனித குலத்தில் எத்தனை எண்ணிலடங்காத வெறுப்புக்கள் உலா வருகின்றன.அதனால் ஏற்படும் சண்டைகள்,சச்சரவுகள் சொல்லி முடியாது.வெறுப்பினால் மனம் பனிக்கட்டி போல் இறுகி விடுகிறது. உதவி செய்ய மனம் வராது.அதனால் தான் பிராஸ்ட் வெறுப்பை பனிக்கட்டிக்கு உவமை ஆக்குகிறார் போல் உள்ளது.

இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.என் மொழி பெயர்ப்பில் தவறு இருந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டவும். மேலும் இந்தக் கவிதையைப் படிக்கும் போது உங்களுக்கு தோன்றும் எண்ணங்களை பின்னூட்டம் இட்டு பகிர்ந்து கொள்ளலாமே?

Some say the world will end in fire,
Some say in ice.
From what I've tasted of desire
I hold with those who favor fire.
But if it had to perish twice,
I think I know enough of hate
To say that for destruction ice
Is also great
And would suffice.

செவ்வாய், 19 மே, 2009

பிரபாகரனின் மரபணு சோதனையும்,சில சந்தேகங்களும்


மரபணு சோதனை செய்து பிரபாகரனின் மரணத்தை உறுதி செய்ததாக இலங்கை அரசு கூறுகிறது.ஆனால் என்ன முறையில் இது செய்யப்பட்டது என்ற அறிவியல் பூர்வமான விளக்கத்தைக் கொடுக்கத் தவறி விட்டது.சரி எந்தெந்த முறையில் இந்த சோதனை மேற்கொள்ள முடியும் என்று பார்ப்போம்.

1. பிரபாகரனின் தாய் அல்லது தந்தையின் மரபணுக்களின் மாதிரிகள் உபயோகப்படுத்தலாம். ஆனால் அது நிச்சியம் இலங்கை அரசிடம் இல்லை.

2. பிரபாகரனின் ஏற்கனவே எடுக்கப் பட்ட மரபணு மாதிரியை வைத்து சோதனை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.ஆனால் மீண்டும் பிரபாகரனின் மரபணு மாதிரி திட்டவட்டமாக இலங்கை அரசிடம் இருக்க வாய்ப்பில்லை.

3. பிரபாகரனின் மகன் சார்லஸ் மரபணு மாதிரியைக் கொண்டு பிரபாகரனின் மரபணு சோதனை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.அதுவும் சார்லசின் மரணம் உண்மை மற்றும் அவர் உடல் இலங்கை அரசிடம் கிடைத்தது என்று உறுதியாக நம்பும் பட்சத்தில்.இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.முதலில் சார்லசின் மரபணு மாதிரி சரியானது தான என்று நீருபிக்க வேண்டும்.

அதற்கு அவரின் தாய் மற்றும் தந்தையின் மரபணு மாதிரிகள் தேவை.கட்டாயமாக தாயின் மரபணு கிடைக்கவோ,அரசிடம் இருக்கவோ வாய்ப்பில்லை.அதனால் பிரபாகரன் மற்றும் அவரின் மகன் மரபணுவை உபயோகித்து தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

அந்த அளவிற்கு இவ்வளவு குறுகிய நேரத்தில் மரபணு சோதனை செய்யும் விஞ்ஞானக் கூடங்கள் இலங்கையில் இல்லை. இதை வைத்து தான் கருணாநிதியும் பிரபாகரனின் மரணம் உறுதி செய்யப் படவில்லை என்று கூறுகிறார் போல் உள்ளது.

இதுவரை இலங்கை அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை.அதனால் இலங்கை அரசு ஒன்று அறிவியல் பூர்வமான நீருபணத்தை வெளியிடல் வேண்டும் இல்லை என்றால் பிரபாகரனைப் பற்றி தங்களிடம் போதுமான தகவல் இல்லை என்று கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வெள்ளி, 15 மே, 2009

ஏ.கே..அந்தோணி அடுத்த பிரதம மந்திரியா?



காங்கிரஸ் தலைமையில் தான் மத்தியில் ஆட்சி அமையும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.மன்மோகன் சிங் என்றாலே இடது சாரிகளுக்கு கொஞ்ச நாளாக கசப்பாக இருக்கிறது.எல்லாம் 123 தான் காரணம்.ராகுல் காந்திக்கு இன்னும் கொஞ்சம் அனுபவம் வேண்டும் என்று நினைக்கிறார் சோனியா.அதனால் மற்றொரு நேர்மையான காங்கிரஸ் அரசியல் வாதியான ஏ.கே.அந்தோணியை பிரதமராக்க முயற்சி நடக்கிறது.இடது சாரிகளும், குறிப்பாக மேற்குவங்க இடது சாரிகள் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன. ஜனாதிபதி பிரதிபா காங்கிரசைத் தான் முதலில் அரசு அமைக்க அழைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.உடனே பெட்டிகள் கைமாறும். மேலும் ஒரு பொம்மைப் பிரதமரை வைத்து சோனியா ஆட்சி அமர்களமாக நடக்க வாய்பிருக்கிறது.ஏ.கே..அந்தோணி இராணுவ அமைச்சராக இருந்து தான் இலங்கைக்கு உதவினார் என்பதெல்லாம் தி.மு.க மற்றும் அண்ணா.தி.மு.க மறக்க ரொம்ப நேரம் ஆகாது.என்ன கூத்தெல்லாம் நடக்கப் போகிறதோ ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.இலங்கை தமிழர் பிரச்சனையை முற்றிலும் மறக்க இன்னும் ஓர் சந்தர்ப்பம்.

http://publication.samachar.com/pub_article.php?id=4239831&navname=General%20&moreurl=http://publication.samachar.com/newindianexpress/general/newindianexpress.php&homeurl=http://www.samachar.com&nextids=4247215|4239831|4239822|4243996|4247216&nextIndex=2

திங்கள், 11 மே, 2009

இந்த வாரக் கணக்கு - 11








97 லிருந்து 102 வரை உள்ள எண்களில் உள்ள இலக்கங்களின் கூட்டுத் தொகை
9+7+9+8+9+9+1+0+0+1+0+1+1+0+2=57 ஆகும்.


இதைப் போல் 1 லிருந்து 2009 வரை உள்ள எண்களில் இருக்கும் இலக்கங்களின் கூட்டுத் தொகை என்ன?

சென்ற வாரக் கணக்கிற்கு சரியான விடை எழுதிய தியாகராஜன் அவர்களுக்கு என் நன்றிகள்.

புதன், 6 மே, 2009

ஆர்ப்பட்டமில்லாத இசைக் கலைஞர்




1987 ஆம் ஆண்டு என்று நினைவு.சென்னை மயிலையில் உள்ள சாஸ்திரி ஹால்.மிகச் சிறிய அரங்கம்.சங்கீத கலாநிதி ராஜம் ஐயர் அவர்களின் கர்நாடக இசைக் கச்சேரி.6:30 மணிக்கு தொடங்க வேண்டும்.ஆனால் தொடங்கவில்லை.மிருதங்க வித்வான் பாலக்காடு ரகு அவர்கள் வரவில்லை.கச்சேரி ஏற்பாடு செய்தவர்கள் தொடர்பு கொண்ட போது,அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளதால் வருகை தாமதமாகும் எனத் தெரியப்படுத்தப் பட்டது.சிறிது நேரம் காத்திருந்து, பின் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களின் வற்புறுத்தலின் பேரில் ராஜம் ஐயர் அவர்களும், வயலின் வாசிப்பவரும்(பெயர் நினைவில் இல்லை) மேடையில் வந்து அமர்ந்தார்கள்.பாலக்காடு ரகு அவர்கள் வந்த உடன் நேரம் வீணாகாமல் கச்சேரி ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு. இந்த அரங்கில் திரை எல்லாம் கிடையாது.



மிருதங்க வித்வான் இல்லாமல் பாடகரும்,வயலின் வாசிப்பவரும் அமர்ந்திருந்தது மிகவும் வித்தியாசமாக இருந்தது.7:00 மணி வாக்கில் பாலக்காடு ரகு அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.ஆனால் மேடைக்கு வரவில்லை.தாமதமாக வந்தது அவர் தவறில்லை.எனவே எப்போதும் போல் பாடகரும் பக்க வாத்தியக் காரர்களும் சேர்ந்து மேடைக்கு செல்வது போல் செய்ய வேண்டும் என்பது அவர் விருப்பம்.அவர் மன வருத்தத்தை அறிந்த ராஜம் ஐயர் அவர்கள் உடனே எழுந்து உள்ளே சென்று பாலக்காடு ரகு மற்றும் வயலின் வித்வான்களுடன் மீண்டும் மேடையில் வந்து அமர்ந்தார்.



இந்த நிகழ்ச்சி ராஜம் ஐயர் அவர்களின் பெருந்தன்மையையும்,சக கலைஞரின் மேல் அவர் வைத்திருந்த அன்பையும் எடுத்துக் காட்டுகிறது.காதில் கடுக்கன்,நெற்றியில் திருநீறு மற்றும் சிரித்த முகத்துடன் கச்சேரி துவங்கியது.மிக அருமையாகப் பாடினார்.ரகு அவர்களின் மிருதங்கம் பற்றி சொல்லவே வேண்டாம்.



ரசிகர்களை மிரட்டாமல் அதே நேரத்தில் கலப்பிலாத சுத்தமான சங்கீதம் கொடுப்பதில் ராஜம் ஐயர் அவர்கள் மிகச் சிறந்த விற்பன்னர்.மேலும் இவர் மிக நல்ல சங்கீத ஆசிரியரும் கூட.இரண்டு நாட்களுக்கு முன் காலமான இவர் ஒரு பெரிய பாரம்பரியத்தை தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.ஆர்ப்பட்டமில்லாத மிகச் சிறந்த கர்நாடக இசைக் கலைஞரை நாம் இழந்துள்ளோம்.இவருடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.


பேசாமல் பேசினாள்

சென்ற வாரம் ஆறாம் வகுப்பு செல்லப் போகும் என் இளைய மகன் ஸ்ரீ ஹரியின் பள்ளியில் பெற்றோர்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டறை (Orientation) மாலை 7:00 மணிக்கு இருந்தது.பள்ளியின் விளையாட்டுக் கூடத்தில் வைத்து நிகழ்ச்சி நடந்தது.பள்ளியின் முதன்மை ஆசிரியர், உதவி முதன்மை ஆசிரியர் மற்றும் மாணவ ஆலோசகர்கள் மிகவும் எளிமையாக நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். ஒரு மைக் பேசுவதற்கு இருந்தது.சரியாக 7:00 மணிக்கு முதன்மை ஆசிரியர் பேச ஆரம்பித்தார்.அத்தனை பெற்றோரும் மிக ஆர்வத்துடன் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் மூன்றாவது வரிசையில் ஒரே ஒரு பெண் மட்டும் சிறிது நாற்காலியை வளைத்துப் போட்டு முதன்மை ஆசிரியருக்கு முதுகைக் காட்டிக் கொண்டும்,பெற்றோர்களைப் பார்த்தும் அமர்ந்திருந்தார்.அந்த பெண்ணிற்கு வயது இருபது இருக்கலாம்.மிகவும் அழகான முகம்.கண்கள் மிகவும் துறுதுறுப்பாக காட்சி அளித்தன.அரபு நாட்டுப் பெண் போல் தோன்றினாள்.பாரதிராஜா பார்த்திருந்தால் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருப்பார்.திடீரென அந்தப் பெண் தனக்கு எதிரில் உட்காந்திருந்த அவள் அம்மாவைப் பார்த்து பேச ஆரம்பித்தாள்.ஆனால் அது எந்த விதத்திலும் முதன்மை ஆசிரியர் பேச்சுக்கு இடையுறாக இல்லை.அதே நேரத்தில் அந்தப் பெண்ணுக்கும் முதன்மை ஆசிரியர் பேசியது ஒரு பொருட்டாக இல்லை.அவள் பேசுவதற்கு கை விரல்களையும்,முக பாவனையையும் முழுவதும் நம்பி இருந்தாள்.அவள் தாயார் அவள் பேச்சைப் பார்த்துக் கொண்டும்,முதன்மை ஆசிரியரின் பேச்சைக் கேட்டுக் கொண்டும் இருந்தது மிகவும் ஆச்சிரியமாக இருந்தது.

ஆமாம் நீங்கள் யூகித்திருப்பீர்கள்.அந்தப் பெண் பிறவியில் பேச முடியாமல்,கேட்க முடியாமல் இந்த உலகத்தைப் பார்க்க வந்திருக்கிறாள்.அந்த அரங்கமே கைதட்டி அல்லோகலப் பட்ட போது அந்த பெண் மட்டும் மௌன மொழியில் பேசியது எங்கோ மனதில் தைத்தது.

ஞாயிறு, 3 மே, 2009

தெரியவில்லை...

அம்மாவுக்குப் பிடிச்சா பிடித்தது
நண்பர்கள் சொல்லில் மயக்கம்
பிடித்தது தெரியாமல்
பிதற்றல் - அவளைப் பிடித்ததால்
பிடித்தது புரிந்தது
பாதி வாழ்க்கையில்
கடமையும் கனவுமாக
கடந்து செல்லும் காலம்

இந்த வாரக் கணக்கு - 10


46656 என்ற எண்ணுக்கு எத்தனை வர்க்கக் காரணிகள் (factors which are perfect squares) உள்ளன?
சென்ற வாரக் கணக்கிற்கு சரியான விடை எழுதிய தியாகராஜனுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

வெள்ளி, 1 மே, 2009

ஜெயலலிதாவின் நம்ப முடியாத ஈழ மோகம்

மாற்றி மாற்றி பேசுவது ஜெக்கும்,கருணாநிதிக்கும் கைவந்த கலை.ஜெக்கு தீடிரென ஏன் இந்த கரிசனம் ஈழத்தின் மீது? பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எப்படியாவது கருணாநிதியின் அரசைக் கலைக்க வேண்டும்.இத்தனை நாள் இல்லாத சிந்தனை ரவி ஷங்கர் காண்பித்த வீடியோவினால் வந்ததா? நம்ப முடியவில்லையே.
ஈழம் பெற்றுத் தந்தால்,விடுதலைப் புலிகளின் இயக்கத்தை என்ன செய்வார்?ஈழத்தோடு புலிகளையும் ஆதரிக்கிறாரா?இந்திய இராணுவத்தை அனுப்பி, இலங்கையுடன் போர் நடத்தத் திட்டமா?

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல
என்ற திருக்குறளுக்கு ஏற்ப இந்திரா காந்தி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் பல உலகநாட்டுத் தலைவர்களை சந்தித்து,ரஷ்யாவுடன் ஓப்பந்தம் செய்து,மிகச் சாதுர்யத்துடன் பங்களாதேஷ் போரை நடத்தினார்.
சரியான திட்டமிடல் இல்லாமல் ராஜீவ் காந்தி இந்திய அமைதிப் படையை அனுப்பியதின் பலனை இன்றும் அனுபவிக்கிறோம்.தேர்தல், ஓட்டு,பதவி போன்றவைகளுக்கு ஆசைப் பட்டு நினைத்ததைப் பேசுவது,சிந்திக்காமல் உறுதி மொழி கொடுப்பது தலைவர்களின் பொழுது போக்காகிவிட்டது.
இதை எதிர்கொள்ள கருணாநிதி நாங்கள் 50௦ வருடமாக ஈழத்தை ஆதரிக்கிறோம் என்கிறார்.இந்தக் கூத்துக்களுக்கு நடுவே அங்கே இலங்கையில் மனிதர்கள் பட்டினியாலும்,பிணி யினாலும்,குண்டுகளுக்கும் இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய அரசு உடனடியாக சீனா மற்றும் பாகிஸ்தானுடன் பேசி இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்.தேர்தல் நேரம் என்று பார்க்கக் கூடாது.வெளி விவகாரத்தைக் கையாளும் முறையில் இந்த அரசு பெரிய அளவில் தோல்வியைக் கண்டுள்ளது.தமிழர்கள் என்று கூட பார்க்க வேண்டாம்.மனிதாபமான முறையில் உதவ வேண்டும்.இதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு என்று தெரிந்தும், இந்த பதிவு இடுவது மன வேதனைக் குறைக்கும் சுயநலம் தான்.