வெள்ளி, 31 டிசம்பர், 2010

பிரான்க் டுக்ஸ்யின் ஓர் எழுச்சியான கவிதை


இந்தப் புத்தாண்டில் எல்லோர் முக்கியத்துவத்தையும் உறுதிபடுத்தும் ஒரு கவிதை.

என் முகமறியாத வலையுலக நண்பர்கள், மற்றும் பதிவெழுதும் அனைவருக்கும் என்

மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இதோ மொழிபெயர்த்த கவிதை இங்கே:

இந்தப் பிரபஞ்சம் ஒரு முடிவிலியானால்

அதன் மையப்புள்ளியாக இருக்கிறேன் நான்.

அதே போல் தான் நீங்களும்.

நீங்கள் எங்கு சென்றாலும்

இது எப்போதும் உண்மையாகவே இருக்கிறது.

நம் முக்கியதுவத்திலிருந்து

நாம் எப்போதும் தப்பிக்கவே முடியாது.

வியாழன், 30 டிசம்பர், 2010

நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள்


1970-80 களில் இரண்டு பெரிய சமூகப் பிரச்சனைகள் இந்தியாவில், குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்தன. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வரதட்சணைக் கொடுமை. இதை மையமாகக் கொண்டு பல சிறுகதைகள் (விகடன், குமுதத்தில்) மற்றும் புதுக் கவிதைகள் எழுதப்பட்டன. வறுமையின் நிறம் சிகப்பு, நிழல்கள் போன்ற வேலையில்லாத் திண்டாட்டத்தை முன்னிறுத்தி திரைப்படங்கள் வந்தது நினைவிருக்கலாம்.

இந்த சட்டகத்தை வைத்து இருபத்திமூன்று வயதான ஒரு இளைஞனின் வாழ்வில் நடக்கும் உறவுச் சிக்கல்கள் மற்றும் உணர்ச்சிப் போராட்டங்களை மிக அழகாக,யதார்த்தமாக சித்தரித்துள்ளார் நாஞ்சில் நாடன். ஓர் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் படித்து பட்டம் பெற்று வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் நாயகன் சிவதாணு. வேலை வாங்கித் தருவதாக வாக்கு கொடுத்து தன் பெண் பார்வதியை படித்த பையனான சிவதாணுவுக்குக் கட்டிக் கொடுக்க முனையும் சொக்கலிங்கம் பிள்ளை.

முதலில் துள்ளிக் குதித்தாலும், பிறகு திருமணத்திற்கு சம்மதிக்கும் சிவதாணு. பணத்திற்கு கஷ்டமில்லாத மாமனார் வீடு. திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளையை வீட்டிலேயே வைத்துக் கொள்ள முயற்சிக்கும் மாமனார். சிவதாணுவின் வீட்டு ஏழ்மையை வைத்து "ஆறாத நாவினால் சுடும்" சொல் அம்புகள் மாமியார் நீலாப்பிள்ளை வார்த்தைகளில். இறுதியில் சிவதாணுவுக்கு ஒரு வேளை கிடைத்து தனிக் குடுத்தனம் போகலாம் என்றால், மனைவி பார்வதி வர மறுக்கிறாள். இது பெரிய சண்டையாகி தீராத மனஸ்தாபமாகிறது. இறுதியில் பார்வதியும், சிவதாணுவும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்று கதை முடிகிறது.

இதை நாஞ்சில் நாடன் ஒரு உயர்ந்த இலக்கியத் தரத்தில் எழுதியுள்ளார். இயலாமை,கோபம்,ஆசை,தாபம், மனக் குரோதங்கள்,பொறாமை, உளச் சிக்கல்கள் மற்றும் ஏழ்மை என்று எல்லா உணர்ச்சிகளையும் மிக அருமையாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். சில இடங்கள் மிகவும் கவித்துவமாகவும் உள்ளன.குறிப்பாக சில வரிகள்: "பாழ். எல்லாம் பாழ். தேன் துளிர்க்கும் பருவத்தில் பிணநாற்றம் வீசுகின்ற மலர்....வேகின்ற வேளையில் படீர் என்று வெடித்து விட்ட மண்குடம்..விழுதென்று பிடிக்கப் பாம்பாகப் பயமுறுத்தும் உறவுகள்..."
"காரட்டைக் கண்ட ஒட்டகமாக கிடைக்கும் கிடைக்கும் என்று, அகப்படும் அகப்படும் என்று பிடித்துவிட ஓடிய ஓட்டம். முடிவில் நயவஞ்சகக் கும்பல்."

மேலும் தன் பாட்டியின் இறப்பின் போது சிவதாணுவின் நினைவுகள்,காந்திமதி, ராமநாதன் (வேலை செய்யும் இடத்தில கிடைத்த நல்ல நண்பர்கள்)பார்வதி வீட்டிற்கு சென்று வந்த விபரத்தை வாசகனின் கற்பனைக்கு விடுவது, பாத்திரப் படைப்புக்களில் சிறிதும் சுருதி பிசகாத ராக ஆலாபனை போன்ற சித்தரிப்பு மற்றும் சுகமான நாஞ்சில் நடை என்று பல சிறப்புகள் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நாவலை கட்டாயம் படிக்க சிபாரிசு செய்கிறேன்.(நீ என்ன கா.நா.சு வா, ஜெமோவா,எஸ்ராவா என்று கேட்காதீர்கள்?). நான் படித்தவரை தமிழில் இது ஒரு முக்கியப் படைப்பு என்பதில் எனக்கு சிறுதும் சந்தேகமில்லை.

இப்போது சில கருத்துகள்: ஒன்று, இந்தக் கதையை முடித்த விதம்(முடிவல்ல) சிறிது செயற்கையாக இருக்கிறது. இரண்டாவது, கதை நடந்த கால கட்டத்தில் இருந்த வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் வரதட்சணை பற்றி சிறிது விரிவாக எழுதி இருக்கலாம். ஆனால் 30 வருடங்களுக்குப் பிறகும் இந்த ஆக்கம் படிக்கப் படுவதற்கு முக்கியக் காரணம் மனித உறவுகளில் உள்ள சிக்கல்கள், தவறானக் கணக்குகள் விவரிக்கப் படும் விதம் மற்றும் எழுத்து நடை என்று கூறலாம்.

இந்த நாவல் "சொல்ல மறந்த கதை" என்று சினிமாவாக வந்துள்ளது. ஆனால் இந்த நாவல் சினிமாவை விடவும் பலமடங்கு சிறப்பாக இருக்கிறது. படமும் அப்படி ஒன்றும் மோசமில்லை

இந்த ஆக்கம் ஜெயமோகன் மற்றும் எஸ்.ரா பட்டியல்களில் இடம் பெறுகிறது என்பதையும் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த நேரத்தில் நாஞ்சில் நாடனுக்காக வலைத்தளம் நடத்தி வரும் சுல்தான் அவர்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பி.கு. நாஞ்சில் நாடன் ஒருவேளை நன்றாக சமைக்கத் தெரிந்தவராக அல்லது நன்கு ரசித்துச் சாப்பிடக் கூடியவராக இல்லை இரண்டும் கலந்த கலவையாக இருக்க வேண்டும். 2010 ஆம் ஆண்டில் தமிழில் நடைபெற்ற மிகப் பெரிய இலக்கிய நிகழ்வாக இவருக்குக் கிடைத்த "சாகித்ய அகாடமி" பரிசைக் குறிப்பிடலாம். வாழ்த்துக்கள்.

புதன், 22 டிசம்பர், 2010

ஹைக்கூ முயற்சி

இணையம் இருப்பதில் தான் எத்தனை வசதி. நாம் என்ன எழுதினாலும் பதிவிடலாம். புதிய முயற்சி செய்து பார்க்கலாம்.

அதைத் தான் இங்கு நான் செய்திருக்கிறேன். ஹைக்கூ கவிதைகள் எழுதிப் பார்க்கலாம் என்று ஒரு பேராசை. பார்க்கலாம் எப்படிப் போகிறது என்று. படிப்பவர்களுக்கு மிக்க நன்றி.



*****************************************

நின்று கொண்டேயிருக்கிறது

கேள்விகளுக்கு விடை அறியாமல்

மரம்

**************************************************

தேடுகிறேன்

தொலைத்த காதலை

கடற்கரை மணலில்

*****************************************************





திரும்பப் போகத் தானா

அடித்துக் கொண்டு வருகிறது

அலை

********************************************************

இழந்த பிறகு

இழக்க என்ன இருக்கிறது

தாய்

********************************************************




தூய்மையான தழுவல்

வருடம் தவறாமல் பூமிக்கு

பனிமழை

***********************************************************

நினைவுகளில் மூழ்கிய தாத்தா

பேரென்ன குழந்தே

பத்மஜா

*************************************************************



எல்லோரும் சமம்

வட்டத்தின்

முதற்புள்ளி

****************************************************************

பிரசாதம்

கடவுள் போட்ட

பிச்சை

*****************************************************************

செவ்வாய், 21 டிசம்பர், 2010

நகுலனின் இரண்டு கவிதைகள்



நகுலனின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆழ்மனதில் இருந்து வருபவைகள் அவர் கவிதைகள்.தனிமையையும், யதார்தத்தையும் அழகாக சித்தரிக்கும் இரண்டு கவிதைகள் இங்கே: படித்து மகிழுங்கள்.


காத்திருந்தேன்


மீண்டும் வீதியில் யாருமில்லை

வெறும் தனிமை

வெகு துலைவில்

வேகம் குறைந்து வரும்

டாக்ஸி என் வீடும் வரும் என்று

நம்பிக்கையின்

வேதனை தாங்கி,

நான் வாழ மனந்தூண்ட

நான் வறிதே வீற்றிருக்க

வந்த வண்டி

என் வீடு தாண்டிப் போகும்.


இவர்கள்


உதட்டளவில் பேசுகிறார்கள். மனமறிந்து

பொய் சொல்கிறார்கள். ஒரு கணத்தில்

சொன்னதை அடுத்த கணத்தில் மறந்து

விடுகிறார்கள். எதிரில் இருப்பவன்

பிரக்ஞையின்றி தங்களைப் பற்றியே

பேசிக்கொண்டிருக்கிறார்கள். வயிறு

காலியானாலும் வீடு நிறைய சாமான்

களை வாங்கி வைக்கிறார்கள். உடமை

கருதி செத்துக் கொண்டிருக்கும் ஒருவன்

முன், "இவன் ஏன் இன்னும் சாகமாட்

டேன்" என்கிறான் என்று பொறுமை

இழந்து நிறகிறார்கள். எல்லாவற்றிலும்

அதிசயம் என்ன வென்றால் இவர்கள்

தங்களைப் போல் நல்லவர்கள் இல்லை

என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்


இவர்களுடன் தான் உறவுகளை

வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது

நாம் வாழும் உலகில் தான் இவர்களும்

வாழ்கிறார்கள். ...

திங்கள், 20 டிசம்பர், 2010

அன்னை தெரசாவின் கவிதை



வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம், அதிலிருந்து ஆதாயமடை.
வாழ்க்கை ஒரு அழகு, அதைப் பாராட்டு.
வாழ்க்கை ஒரு பேரின்பம், அதை ருசி.
வாழ்க்கை ஒரு கனவு, அதை உணர்.

வாழ்க்கை ஒரு சவால், அதைச் சந்தி.
வாழ்க்கை ஒரு கடமை, அதை முடி.
வாழ்க்கை ஓர் ஆட்டம், அதை விளையாடு.
வாழ்க்கை விலை உயர்ந்தது, அதன் மீது கவனமாயிரு.

வாழ்க்கை ஒரு சொத்து, அதைப் பேணு.
வாழ்க்கை அன்பாலானது, அதை அனுபவி.
வாழ்க்கை புதிரானது, அதை அறிந்து கொள்.
வாழ்க்கை ஒரு சத்தியம், அதை நிறைவேற்று.

வாழ்க்கை துன்பமானது, அதைச் சமாளி.
வாழ்க்கை ஒரு பாடல், அதைப் பாடு.
வாழ்க்கை ஒரு போராட்டம், அதை ஒத்துக் கொள்.
வாழ்க்கை ஒரு துன்பியல், அதை எதிர் கொள்.

வாழ்க்கை ஒரு சாகசம், அதை எதிர்த்து நில்.
வாழ்க்கை அதிர்ஷ்டமானது, உபயோகித்துக் கொள்.
வாழ்க்கை மிகவும் மதிப்புள்ளது, அதை அழித்து விடாதே.
வாழ்க்கை வாழ்க்கை தான், அதற்காகப் போராடு.

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

விமானத் தாக்குதல் ஆன ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு - Miroslav Holub கவிதை



இந்தக் கவிதையைப் பற்றி என்ன சொல்ல? சென்ற வருட இலங்கைப் போர் தான் கண் முன் தெரிகிறது. நீங்களே படித்து உணருங்கள்.
பில்சென் Holub வாழ்ந்த ஊர்.

விமானத் தாக்குதல் ஆன ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு

பில்சனில்,
இருபத்தியாறு ஸ்டேஷன் தெரு,
அவள் மூன்றாவது மாடிக்கு ஏறினாள்,
மேல் மாடியில், முழு இல்லத்தில் மீதமிருந்தது அதுவே.
கதவைத் திறந்தாள்,
அது வானத்திற்கு இட்டுச் சென்றது,
பாதளத்திலிருந்து ஆரம்பித்தது.

ஏனென்றால் இங்கு
உலகம் முடிவடைந்தது.

பிறகு அவள் கதவை அழுத்தமாக மூடினாள்
அப்போது தான்
சிரியாசோ
இல்லை அல்டேபறேனோ
அவளை சமையலறையிலிருந்து கூப்பிட முடியாது,
படிகளில் இறங்கினாள்
அவள் இடத்தை எடுத்துக் கொண்டாள்,
காத்திருந்தாள்
வீடு மீண்டும் உருவாகி வர
அவள் கணவன் வீட்டிற்கு மீண்டு வர
சாம்பலிலிருந்து,
குழந்தைகளின் கால்கள்
மீண்டும் சிக்கென ஊன்ற.

காலையில் கண்டறிந்தார்கள்
அவள் கல்லாக மாறியதை.
சிட்டுக்குருவிகள் அவள் கைகளில் கொத்தின.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

Miroslav Holub - உற்சாகமூட்டும் ஒரு கவிதை


Miroslav Holub செக்கஸ்லோவாகிய நாட்டைச் சேர்ந்த கவிஞர். மேலும் இவர் ஒரு விஞ்ஞானியும் கூட. சுவையான கவிதைகளுக்குச் சொந்தக்காரர். கவிதையில் அறிவியல் கலந்தும் எழுதியுள்ளார். அதைப் பிறகு பார்ப்போம். இந்தக் கவிதை ஒரு நம்பிக்கைக் கொடுக்கும் தோரணையிலும், "சும்மா இருப்பதே சுகம்" என்று இருக்காமல் முடிந்த வரை புது முயற்சிகளை செய்யத் தூண்டுவதாகவும், அதனால் இழப்பு இல்லை என்பதையும் கூறும் வகையில் அமைந்துள்ளது. நீங்கள் படிக்கும் போது உங்களுக்குப் பல சிந்தனைகளை கட்டாயம் கொடுக்கும். அதைப் பகிர்ந்து கொள்ளவும்.
இந்தக் கவிதை

போ அந்தக் கதவைத் திற.
பனி மூட்டம் வெளியில் இருந்தாலும்
அது போய் விடும்.

என்ற இடத்தில உச்சத்தை அடைகிறது என்று கருதுகிறேன்

அந்தக் கதவுகள்

போ அந்தக் கதவைத் திற.
ஒரு வேளை வெளியில்
ஒரு மரம் , இல்லை ஒரு மரத்துண்டு,
இல்லை ஒரு தோட்டம்
இல்லை ஒரு மந்திர நகரம் இருக்கலாம்.

போ அந்தக் கதவைத் திற.
ஒரு வேளை வெளியில்
சொரிந்து கொண்டிருக்கும் நாய் இருக்கலாம்.
ஒரு வேளை வெளியில் ஒரு முகம்,
இல்லை ஒரு விழி
இல்லை ஒரு சித்திரத்தின்
சித்திரம் இருக்கலாம்.

போ அந்தக் கதவைத் திற.
பனி மூட்டம் வெளியில் இருந்தாலும்
அது போய் விடும்.

போ அந்தக் கதவைத் திற.
வெளியில் இருளின் கானம் இருக்கக் கூடும்,
மேலும் வெளியில் ஆழமான காற்றின் மூச்சிருக்கலாம்
இல்லை ஒன்றுமே இல்லாமல் கூட போகலாம்
போ அந்தக் கதவைத் திற.

குறைந்த பட்சம்
காற்றோட்டமாவதுஇருக்கக் கூடும்.




மேலும் இவருடைய சில கவிதைகளின் மொழி பெயர்ப்பைத் தொடர்ந்து பார்க்கலாம்.

புதன், 15 டிசம்பர், 2010

கிரிக்கெட் வீரர் T.E. Srinivasan நினைவாக - ஆற்றலின் இயலாமை


T.E. Srinivasan என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரை நினைவிருக்கலாம்.இவர்

ஒரே ஒரு டெஸ்டில் தான் இந்தியாவிற்காக விளையாடி இருக்கிறார். ஆனால் மிகச் சிறந்த

மட்டையாளர். அந்த காலத்தில் இருந்த "கோட்டா" முறையினால் இந்திய அணியில்

தொடர்ந்து இடம் பெற முடியாமல் தன் இடத்தை கோட்டை விட்டவர். மிகவும்

தன்னம்பிக்கை உடையவர்.இவரைப் பற்றி இங்கிலாந்தின் முன்னால் கேப்டன் அர்த்ரடன் தன்

புத்தகத்தில் மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார். இவர் விளையாடி நான் நேரில் பார்க்கும் வாய்ப்பு

இரண்டு முறை கிடைத்தது. இவர் சென்ற வாரம் மூளைத் தொற்று நோயால் காலமானார்.

ஏதோ ஒரு விதத்தில் என் வாழ்கையில் சிறிது நேரமாவது ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்திய

இவரின் மரணச் செய்தி மனதை மிகவும் வருத்தியது. அவர் ஆத்மா சாந்தியடைய

வேண்டுவோம். அவரைப் பிரிந்து தவிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கு மனமார்ந்த

ஆறுதல்கள்.

T.E. Srinivasan நினைவாக சுரேஷ் மேனன் என்ற பத்திரிகையாளர் எழுதிய ஒரு சிறப்பான

அஞ்சலியை இங்கு படிக்கலாம்.

வெள்ளி, 10 டிசம்பர், 2010

பாரதியின் நினைவில் ..மன்மோஹன்சிங் கேட்க வேண்டிய கவிதை

இன்று பாரதியின் பிறந்த நாள். பாரதியின் பல கவிதைகள் சுகமானவைகள். அதில் இன்று பிரதமர் மன்மோஹனுக்கு மிகவும் தேவையான கவிதை இது தான்.




இதைப் படித்து மன்மோகன் இப்படி எழுதினால் எப்படி இருக்கும்?

அச்சமில்லை அச்சமில்லை ஸ்பெக்ட்ரமென்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை சோனியாவென்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை ஜேபிசி என்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை பிரதமர் பதவி போன போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை ஆட்சி போன போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே


எல்லாம் ஒரு கனவு தான்.

திங்கள், 6 டிசம்பர், 2010

அல்ஜீப்ரா பிடிக்காதா.. இந்தக் கவிதை பிடிக்கும்

பள்ளியில் படிக்கும் காலத்தில் கணிதம், குறிப்பாக, அல்ஜீப்ரா என்றால் அலறி அடித்து ஓடுபவர்களைக் காணலாம். இல்லை ஆசிரியர் சரியாக அமையாததால் கணிதத்தில் ஈடுபாடு இல்லாமல் போகலாம். எப்படி இருந்தாலும் அல்ஜீப்ரா பற்றிய இந்தப் பகடியான கவிதையை கட்டாயம் நீங்கள் ரசிக்க முடியும். படித்து உங்கள் கருத்துக்களை உதிர்த்துச் செல்லுங்களேன்? இதைத் தமிழில் மொழி பெயர்க்க முயன்றேன். ஆனால் அந்தப் பகடியை என் மொழிபெயர்ப்பில் முழுவதும் கொண்டு வர முடியவில்லை. அதனால் ஆங்கிலத்தில் கவிதை இங்கே:

Life as Junior High School by Robert Hershon

You don’t think algebra is important
Mrs. Masterson said
but the day will come when you really need algebra
You’ll be terribly sorry you didn’t pay attention
When your life is in ruins and you are a laughing stock

Ha! The joke’s on you, lady
Decades have come and gone and
never once, not for a second, did I ever think:
Damn, if I only knew some algebra! Never once,
not for an instant. My hair’s turned white and never a
single regret -- ha ha ha ha ha

Unless -- that moment is still waiting up ahead,
when I’m 92 and trying to remember my shoe size,
my middle name, how many children I have . . .
And algebra might be the only answer!
I stand in the road, drooling and baffled --
and what’s that moving in the fog? Oh god,
it’s Mr, Gorman, wearing his devil suit and
waving a chemistry textbook

செவ்வாய், 30 நவம்பர், 2010

சுஜாதாவின் ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

சுஜாதாவைப் பற்றி இன்று பலவித விமர்சனங்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவருடைய இலக்கிய இடம் குறித்து பல சர்ச்சைகள். ஆனால் காலம் எல்லோரையும் ஏமாற்றி தனக்கே உரிய தீர்ப்பை வழங்கும். அவருடைய பன்முக ஆளுமையால் சுஜாதா தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக என்றும் இருப்பார் என்பது தான் என் கணிப்பு. இதற்கான என் காரணங்களை தனிப் பதிவாகத் தான் போட வேண்டும்.

சுஜாதா வைணவத்தின் மீது தீராத பற்றும், ஆழ்வார்கள் மீது, குறிப்பாக நம்மாழ்வார் மேல், தணியாத காதலும் கொண்டிருந்தார் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. இந்த அறிமுக நூலை அருமையாகவும், தனக்கே உரிய எளிமையுடனும் எழுதி இருக்கிறார். வைணவத்தைப் பற்றி நன்கு தெரிந்தவகள் அறிமுக நூல் படிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் வைணவத்தைப் பற்றியும் ஆழ்வார்கள் குறித்தும் அறிய விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டய நூல் இது. கடவுள் மற்றும் வைணவ நம்பிக்கை இல்லை என்றாலும் தமிழின் சுவைக்காக படித்து பருக வேண்டிய ஒன்று. இதில் உள்ள சில முக்கிய விஷயங்கள்.

1. ஆழ்வார்கள் என்றால் ஆழ்ந்து ஈடுபடுபவர்கள் என்று பொருள்.

2. மொத்தம் 10 ஆழ்வார்கள்.அவர்கள் பெயர்கள்:
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார்.
நம்மாழ்வாரைப் பற்றிப் பதினோரு பாடல்கள் பாடிய மதுரகவியாழ்வாரையும் திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் பாடிய பெண்பாற் புலவரான ஆண்டாளையும் சேர்த்துக் கொண்டு ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேர் என்று கூறுகிறார்கள்.

3. ஆழ்வார்கள் எல்லோரும் சேர்ந்து மொத்தம் 4000 பாடல்கள் எழுதியுள்ளார்கள். இதற்கு நாலாயர திவ்யப் பிரபந்தம் என்று பெயர்.

4. இந்தப் பாடல்கள் எல்லாவற்றையும் தொகுத்தவர் நாதமுனி.

5. ஆழ்வார்கள் பல ஜாதியைச் சேர்ந்தவர்கள்.

6. 4000 பாடல்களும் அவர்கள் எழுதிய வரிசையில் தொகுக்கப் படவில்லை. பெரியாழ்வார் இயற்றிய "திருப்பல்லாண்டு" நாலாயர திவ்யப் பிரபந்தந்தின் தொடக்கமாக உள்ளது.

7. மதுரகவியாரின் நம்மாழ்வாரைப் பற்றி பாடிய 11 பாடல்கள் நாலாயர திவ்யப் பிரபந்தந்தின் மத்தியில் அமைக்கப் பட்டுள்ளது.

8. நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பாடிய விதத்தை வைத்து சுஜாதா இவ்வாறு கூறுகிறார் "வாலண்டைன்ஸ் டே-காதலர் தினம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள். அதற்கு ஆண்டாள் தினம் என்று பெயர் மாற்றலாம்"

9. இதை எழுதும் போது தீவிர வைணவர்களிடம் இருந்து கடுமையான ஆட்சேபணைகள் மற்றும் எதிர்ப்பு வந்திருக்கிறது. அதற்கு சுஜாதா விளக்கமும் கொடுத்திருக்கிறார்.

10. ஆழ்வார்களில் முதன்மையானவர், மிகச் சிறந்தவர் நம்மாழ்வார் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என்கிறார் சுஜாதா.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதைப் படித்து ஓரிருவராவது இந்த புத்தகத்தை படித்தால் எனக்கு சந்தோசம் தான்
இந்த அறிமுக நூலைப் படித்தால் நிச்சியம் 4000 பாடல்களையும் படிக்கும் ஆர்வம் வரும். எனக்கு பிடித்த பாடல்களில் சில இங்கே.

கண்ணன் பிறந்ததை பெரியாழ்வார் கொண்டாடும் விதம்:

''ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே''


அதற்கு பிறகு சுகமான தாலாட்டு

''மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையமளந்தானே தாலேலோ''


ஆண்டாளின் சிறப்பான பாடல்.

'வானிடை வாழும் அவ்வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்த என்தட முலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே'


சில பொய்கையாழ்வார் கொடுக்கும் கடவுளின் 'பயோடேட்டா''

'அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி
உரைநூல்மறை உறையும் கோயில் - வரைநீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரிகார் மேனி ஒன்று'


இறுதியாக நம்மாழ்வாரின் மாஸ்டர் பீஸ்.

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே


இதை இணையத்தில் தேசிகனின் பக்கங்களில் படிக்கலாம்.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

தொலைத்த தலைமுறை - வித்தியாசமான கவிதை


ஜோனதன் ரீட் (Jonathan Reed) என்கிற ஒரு பல்கலைக் கழக மாணவர் எழுதிய ஒரு ரசிக்கத்தக்க கவிதை இதன் சிறப்பு என்னவென்றால் கிட்டத்தட்ட இது ஒரு முன்பின் இருவழியும் ஒத்த எழுத்துக்கோப்புடைய செய்யுள் (palindrome) எனலாம். இதை மேலிருந்து கீழே படித்தால் ஒரு பொருளும், தலை கீழாக படித்தால் தலை கீழான பொருள் கிடைக்கிறது. இதைப் படித்து விட்டு நீங்கள் நம்பிக்கையானவரா இல்லை நம்பிக்கை அற்றவரா என்றும் எந்த தலை முறையைச் சேர்த்தவர் என்றும் கூறுங்களேன்.

முதலில் என் தமிழ் மொழி பெயர்ப்பு. பிறகு இதனுடைய ஆங்கில மூல வடிவம்

தொலைத்த தலைமுறை

நான் ஒரு தொலைத்த தலைமுறையின் அங்கம் என

நம்ப மறுக்கிறேன்.

இந்த உலகை என்னால் மாற்றி அமைக்க முடியும்

இதை ஓர் அதிர்ச்சியாக உணர்கிறேன் ஆனால்

"சந்தோசம் உள்ளிருந்து வருகிறது."

என்பது ஒரு பொய், மேலும்

"பணம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்"

அதனால் முப்பது வருடங்களில் என் குழந்தைகளிடம் கூறுவேன்

என் வாழ்க்கையில் அவர்கள் தான் மிகவும் முக்கியமானவர்கள் இல்லை என்று

என் வேலை அமர்த்துநர்களுக்குக் கூடத் தெரியும்

என்னுடைய முன்னுரிமைகள் நேர்மையானது அதனால்

வேலை

முக்கியமானது அதை விட முக்கியமானது இல்லை

குடும்பம்

நான் உங்களுக்கு சொல்கிறேன்

ஒரு காலத்தில்

குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்களாக இருந்தன

ஆனால் என் காலத்தில் இது உண்மையாக இருக்கப் போவதில்லை

இது ஓர் அவசரத்தில் ஒட்டி வைக்கப்பட்ட சமூகமென

வல்லுனர்கள் சொல்கிறார்கள்

இப்போதிலிருந்து 30 வருடத்தில், நான் என்னுடைய 10 வது திருமண முறிவு நாளைகொண்டாடிக் கொண்டிருப்பேன் என்று

நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்

நான் என்னால் உருவாக்கப்பட்ட நாட்டில் வாழ்வேன்

எதிர் காலத்தில்

சுற்றுப்புற நாசம் ஒரு நெறிமிறையாகும் என

இனி எப்போதும் சொல்ல முடியக் கூடியதில்லை

என்னை ஒத்தவர்களும் நானும் புவியின் மீது அக்கறை கொண்டுள்ளோம் என்று

அது தெளிவாகத் தெரியும்

என்னுடைய தலைமுறை ஒரு விளக்கஇயலா அசட்டை மனப்பான்மையுள்ள ஒன்று என்று

அதை ஊகிப்பது முட்டாள்தனமானது

நம்பிக்கை இருக்கிறது.


Lost Generation by Jonathan Reed

I am part of a lost generation
and I refuse to believe that
I can change the world
I realize this may be a shock but
“Happiness comes from within.”
is a lie, and
“Money will make me happy.”
So in 30 years I will tell my children
they are not the most important thing in my life
My employer will know that
I have my priorities straight because
work
is more important than
family
I tell you this
Once upon a time
Families stayed together
but this will not be true in my era
This is a quick fix society
Experts tell me
30 years from now, I will be celebrating the 10th anniversary of my divorce
I do not concede that
I will live in a country of my own making
In the future
Environmental destruction will be the norm
No longer can it be said that
My peers and I care about this earth
It will be evident that
My generation is apathetic and lethargic
It is foolish to presume that
There is hope.




இதனுடைய காணொளி (video) இங்கு பார்க்க கிடைக்கிறது.

செவ்வாய், 23 நவம்பர், 2010

எந்திரனில் ஜெனோவின் முரண்படு மெய்ம்மை (paradox) மற்றும் குவிகிற தொடரும்



எந்திரன் சினிமாவில் ரோபோவிடம் பல கேள்விகள் கேட்கப்படும். அதில் ஒன்று இந்த ஜெனோவின் முரண்படு மெய்ம்மை. அதாவது ஒரு ஆமை இரண்டு மைல்கள் செல்ல வேண்டும். முதலில் அது செல்ல வேண்டிய தூரத்தில் பாதியைக் கடக்கிறது. பின்பு மீதுள்ள தூரத்தில் பாதியைக் கடக்கிறது. மீண்டும் அதில் பாதி. மீண்டும் அதில் பாதி.....இப்படியே தொடர்ந்தால் அது தன் இலக்கை அடையவே முடியாது என்பது.

ஆனால் ஆமை கட்டாயம் அதன் இலக்கைச் சென்று அடைய முடியும் என்பது தான் உண்மை. இந்த முரண்பாட்டைத் தான் ஜெனோவின் முரண்படு மெய்ம்மை என்று கூறுகிறோம்.

இந்தக் கேள்விக்கு பதிலாக ரோபோ "அது ஒரு குவிகிற தொடர் (convergent series)" என்ற பதிலைக் கொடுக்கும்.

குவிகிற தொடர் என்றால் என்ன?

சரி. இது எப்படி சாத்தியம் என்று பார்ப்போம். ஆமை முதலில் செல்வது ஒரு மைல்,பிறகு 1/2 மைல், பின்பு 1 /4 ......என்று செல்ல வேண்டும்.

அதாவது

1+ 1/2+1/4+1/8+1/16+1/32+......

என்பதின் கூட்டுத் தொகையைக் கண்டறிய வேண்டும்.

S1 = 1 <2
S2 = 1+1/2 < 2
S3 = 1+1/2+1/4 < 2
S4 = 1+1/2+1/4+1/8 < 2
...
.
.
S10 = 1+1/2+1/4+.........1/512 < 2

...என்று தொடரும். .

எனவே இந்த தொடரில் உள்ள எத்தனை எண்களைக் கூட்டினாலும் அந்த கூட்டுத் தொகை 2 என்ற எண்ணிற்கு அருகில் செல்லுமே தவிர அது 2 டை விட அதிகமாகாது. அதனால் இந்த தொடர் இரண்டை நோக்கிக் குவிகிறது என்கிறோம்.

இந்தத் தொடரை ஒரு பெருக்குத் தொடர் (Geometrc series) என்கிறோம்.

அதாவது

1+ 1/2+1/4+1/8+1/16+1/32+...... = 2
.

அந்த = என்பதற்கு இங்கு சிறிது வித்தியாசமான பொருள். இந்தத் தொடர் 2 டை நோக்கிக் குவிகிறது என்று பொருள். இது எப்போதும் இரண்டிற்கு சமமாகாது.

கண்ணதாசனும் குவியும் தொடரும்




கண்ணதாசன் இருவர் உள்ளம் படத்திலேயே "குவியும் தொடர்" பற்றி அழகாக எழுதி உள்ளார்.

நதி எங்கே போகிறது கடலைத் தேடி
நாளெங்கே போகிறது இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது உறவைத் தேடி

வெள்ளி, 19 நவம்பர், 2010

இளைப்பாற கொஞ்சம் கணிதமும் புதிரும்


புதிர் 1: அண்ணாச்சிக்கு மூன்று மகன்கள். அவருக்கு நெல்லையில் சொத்தாக சொந்தமாக 17 வீடுகள். அவருடைய உயிலில் சொத்தில் மூத்த மகனுக்கு 1 /2 பங்கும், இரண்டாவது மகனுக்கு 1 /3 பங்கும் மற்றும் மூன்றாவது மகனுக்கு 1 /9 பங்கும் கொடுப்பதாக எழுதி வைத்தார். முழு வீடுகளாக வேறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு நிபந்தனை. மகன்களுக்கு ஒரே குழப்பம். அப்பாவிற்கு இருந்த கணித அறிவு நமக்கு இல்லையே என்று.உங்களைக் கூப்பிட்டு இந்த பிரச்சனையைத் தீர்க்கச் சொன்னால் எப்படி தீர்த்து வைப்பீர்கள்?



புதிர் 2: முப்பது ஆடுகளும், முப்பது மாடுகளும் ஒரு புல்வெளி மைதானத்தை மேய்ந்து முடிக்க 60 நாட்கள் ஆகிறது.
அதே மைதானத்தை எழுபது மாடுகளும், எழுபது ஆடுகளும் மேய 24 நாட்கள் பிடிக்கிறது. ஒவ்வொரு நாளும் புற்கள் ஒரே மாதிரி அளவில் வளருகிறது. அதே புல்வெளியை 96 நாட்களில் மேய்ந்து முடிக்க எத்தனை ஆடுகளும், மாடுகளும் தேவைப்படுகின்றன?

வியாழன், 18 நவம்பர், 2010

Piet Hein - இரண்டு கவிதைகள்


டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிட் ஹீன் (Piet Hein ) ஒரு கணிதவியலாளர்,தத்துவஞானி மற்றும் கவிஞர். அவர் கவிதைகளில் இரண்டு மொழி பெயர்ப்புடன் கீழே. மேலும் படிக்க விருப்பமென்றால் இங்கே கிளிக்கவும்.ஏனோ இவர் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கிறது.

Parallelism


"Lines that are parallel
meet at Infinity!"
Euclid repeatedly,
heatedly,
urged.
Until he died
and so reaching that vicinity
in it he
found that the damned things diverged.

ஒருவழி இணைவுநிலை


"இணை கோடுகள் சந்திக்கின்றன
முடிவிலியில்!" என யுக்லிட்
மீண்டும் மீண்டும்
தீவிரமாக வலியுறுத்தினார்
அவர் சாகும் வரை.
ஆனால் அதன் அணிமையில்
சென்ற போது கண்டறிந்தார்
சபிக்கப்பட்ட அவைகள்
விலகிச் செல்கின்றன என்று.

Constitutional Point


Power corrupts,
whereas sound opposition
builds up our free
democratic tradition.
One thing would make
a democracy flower:
having a strong opposition-
in power.


அரசியலமைப்பு கருத்து


அதிகாரம் சீரழிக்கிறது,
அதே வேளையில் வலுவான எதிர்ப்பு
கட்டமைக்கிறது நம்முடைய சுதந்திரமான
ஜனநாயக மரபை.
பயனுள்ள காரியம் ஒன்று முடியுமானால்
ஒரு ஜனநாயகத்தை மலர வைக்க:
வலுவான ஓர் எதிர்க்கட்சி இருந்தால்-
ஆட்சி பீடத்தில்.

என் மொழி பெயர்ப்பில் தவறு இருந்தாலோ அல்லது நல்ல மொழிபெயர்ப்பு கொடுக்க முடிந்தாலோ தவறாமல் மறு மொழியில் குறிப்பிடவும். நன்றி.

வெள்ளி, 12 நவம்பர், 2010

பிடித்த சிறுகதைகள் - கு.ப.ரா. வின் விடியுமா?


1986 ஆம் வருடம். மே மாதம் இரண்டாம் நாள். மதியம் மூன்று மணி அளவில் சேப்பாக் கிரிக்கெட் மைதானத்திற்கு பின்புறம் அமைந்துள்ள ராமானுஜன் இன்ஸ்டிடுட்யில் படிக்கும் மாணவனைப் பார்க்க அவன் அக்காவின் கணவர் (அத்திம்பேர்) வருகிறார். அவரை அதிசியத்துப் பார்த்து

"என்ன இப்போ இங்கே?" என்று மாணவன் கேட்க

"ஒண்ணுமில்லை அப்பாவுக்கு திடீர்ன்னு கொஞ்சம் மார்வலின்னு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கா? போன் வந்தது".

" ஏன் என்னாச்சு ரொம்ப சீரியஸா?".

"நீ உடனே மதுரைக்குக் கிளம்பு".

"மதுரைலையா?

"ஆமாம் மதுரையில தான் எதோ பாண்டியன் நர்சிங் ஹோமாம்"

மதுரை செல்லும் திருவள்ளுவர் பேரூந்து. இப்ப தான பதினைந்து நாட்களுக்கு முன் பார்த்து வந்தோம்.நெல்லை ஜங்ஷன் ஒரு சுற்று வந்தோமே? நல்லாத்தான இருந்தார். அம்மா பதறிப் போயிருப்பாலே? தம்பியும், தங்கையும் திருநெல்வேலியில் இருக்கா. அம்மா மட்டும் மதுரைக்கு வந்திருக்கா. அப்படீன்னு ரொம்ப பெருசா ஒன்னும் இருக்காது. அடுத்த நொடி ஒருவேளை அப்பாவுக்கு எதாவது ஆயிட்டா? ஐயோ அம்மாவை நினைத்தாலே பதறுகிறதே. ஒன்னும் ஆயிடாது. தங்கை கல்யாணம்? தம்பி படிப்பு? கொஞ்சம் தூக்கம் நடுவில். மீண்டும் பல என ஓட்டங்கள். விடியும் வேளையில் மதுரை ஆஸ்பத்திரியில் நுழையும் போது அம்மா நிற்பது தெரிந்தது. சரி அப்பா இருக்கிறார்.
கண்ணீருடன் என்னைப் (ஆமாம் இது சொந்த அனுபவம் என் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது நிகழ்ந்தது) பார்த்து அம்மா "அப்பாவைப் பாத்துட்டு வா" என்றாள். பொழுது விடிந்தது.

இப்படி பலருக்கு பல விதமான அனுபவங்கள். இதே போன்ற ஒரு நிகழ்ச்சியைத் தான் கு.ப.ரா. மிக நேர்த்தியாகப் படம் பிடித்திருக்கிறார் "விடியுமா" என்ற சிறுகதையில்.
"சிவராமையர் - டேஞ்சரஸ்" என்ற தந்தி வருகை. மொத்த குடும்பத்தையும் ஒரு ஆட்டு ஆட்டி விடுகிறது. அக்கா குஞ்சம்மாவைக் கூட்டிக் கொண்டு கும்பகோணத்திலிருந்து சென்னை செல்கிறார் கதை சொல்லி. தந்தி கிடைத்தவுடன் ஏற்படும் மனநிலை, பிரயாணத்திற்கு எடுத்துக் கொள்ளும் சகுனங்கள், ஆழ் மனதில் உண்மை உறுமிக் கொண்டிருக்கையில் புறச் செய்கைகளில் நம்பிக்கையுடன் இருப்பது போல் காட்டிக்கொள்வது, இறைவனிடம் தஞ்சம் அடைவது, பூவும் பொட்டும் பெறுகின்ற பிரதானம், தொடர்ந்து மனநிலை சோகத்தோடு இருக்க முடியாது என்ற சித்தரிப்பு என்று அழகாக வடிவமைத்திருக்கிறார். தினமும் தான் விடிகிறது. ஆனால் வாழ்க்கையில்ஒரு சில நாட்களே மிகவும் மகிழ்ச்சியாகவோ, மனத் துயரத்துடனோ விடிகிறது. குஞ்சம்மாளுக்கு துயரமாக முடிகிறது அந்த விடியல். இத்தனை மனச் சிக்கல்களும் அத்திம்பேர் இறப்பதில் ஒரு முடிவுக்கு வருகிறது. சம்பவங்களை தன் போக்கில் போக விட்டு, பயணிக்கும் இரயிலுடனே படிப்பவரின் மனதையும் பல திசைகளில் பயணிக்கச் செய்திருக்கிறார் கு.ப.ரா. தினமும் தவறாமல் நடைபெறும் விடியலில் தான் எத்தனை உணர்ச்சிகள் ஒளிந்திருக்கின்றன?

கட்டாயம் படித்து பாருங்கள். இந்தக் கதையை அழியாச்சுடர் ராமின் தளத்தில் இங்கே படிக்கலாம். மேலும் இந்தக் கதை இவர்களின் சுஜாதா, எஸ்ரா.ஜெமோ பரிந்துரைகளில் ஒன்று.

செவ்வாய், 9 நவம்பர், 2010

புதுமைப்பித்தனின் கொடுக்காய்ப்புளி மரம்



விசா பதிப்பகம் வெளியீட்டில் புதுமைப்பித்தனின் 16 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு தான் கொடுக்காய்ப்புளி மரம். நல்ல அருமையான கதைகள்.

புதுமைப்பித்தனுக்கு தமிழ் உரைநடை கையைக் கட்டிக் கொண்டு சேவகம் செய்திருக்கிறது. எந்த அளவுக்கு புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற இத்யாதிகளை நினைத்து தமிழர்கள் பெருமைப் படுகிறோமோ அதே அளவு புதுமைப்பித்தன் எழுத்துக்களும் தமிழின் ஓர் உச்சம் தான் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து (வாசகன் என்ற ஒரே தகுதி தான்).

தொகுப்பில் முதல் கதை - கொடுக்காய்ப்புளி மரம். பணக்கார கிறிஸ்துவர் தான தருமம் செய்கிறார் மோட்ச சாம்ராஜ்யத்தை எதிர் பார்த்து. அவர் வீட்டில் உள்ள கொடுக்காய்ப்புளி எடுத்து உண்ணும் பிச்சைக்காரனின் நான்கு வயது பெண்ணை அடித்துக் கொல்கிறார். பதிலுக்கு பிச்சைக்காரனும் பணக்காரரை கொன்று விடுகிறார். நன்றாக எழுதியுள்ளார்.மணிக்கொடியில் 1934 ஆம் ஆண்டு பிரசுரமான கதை.

நியாயந்தான் - வடலூர் குமாரப் பிள்ளை நேர்மையாக இருந்த போது கஷ்டப் பட்டு கொழும்பு சென்று நேர்மையற்ற செயல்களால் வாழ்வில் சுகமாக இருப்பது தான் கதை. ஜோதி இதழில் 1938 ஆம் ஆண்டு வெளியானது.

சாமியாரும், குழந்தையும், சீடரும் இது ஒரு சூப்பர் கதை. உன்னிகிருஷ்ணன்  குரல் நன்றாக  இருக்கும்.கேட்டால் சுகம் தெரியும். இந்தக் கதையைப் படித்தால் தான் அருமை புரியும். படித்துப் பாருங்கள்.

நினைவுப் பாதை : வள்ளியம்மையாச்சி மரணத்தைப் பற்றிய அருமையான சித்தரிப்பு.வைரவன் பிள்ளை மன ஓட்டம் சிறப்பாகப் சித்தரிக்கப் பட்டுள்ளது. (உ-ம்) "ஏறக்குறைய இந்த ஐம்பது வருஷ காலத்தில் அவர் வள்ளியம்மையாச்சியைப் பற்றி அவ்வளவாக - முதல் பிரசவத்தில் தவிர - பிரமாதமாக நினைத்தது கிடையாது.....மனைவி என்பது நூதன வஸ்துவாக இருந்து, பழகிய பொருளாகி, உடலோடு ஒட்டின உறுப்பாகி விட்டது. ஒவ்வொருவரும் தமக்கு ஐந்து விரல் இருப்பதை ஒவ்வொரு நிமிஷமும் நினைத்துக் கொண்ட இருக்கிறார்கள்?...விரல் ஒன்று போனால் ஐந்தென்ற நினைப்பு பிறக்கும்....."

மகாமசானம்: நெருக்கடியான சென்னையில் இறந்து போகும் பிச்சைக்காரன். இது ஒரு மாஸ்டர் பீஸ். இந்தக் கதைக்கு எப்படித்தான் இப்படி ஒரு தலைப்பு தோன்றியதோ? இன்று சென்னை அல்ல உலகமே அப்படி இருப்பதாகக் கொள்ளலாம் போல. தலைப்புக்கு பரிசு உண்டென்றால், இந்தத் தலைப்பு பரிசு பெற மிகவும் தகுதியான ஒன்று. உலகம் உள்ள வரை வாழும் இந்த சிறுகதை. இதை படித்த போது வண்ண நிலவனின் எஸ்தர் மற்றும் லா.ச.ரா.வின் பச்சைக் கனவு கதைகள் நினைவிற்கு வந்தது. இந்தக் கதை ஜெமோ,எஸ்ரா,சுஜாதா என்று யாருடைய பரிந்துரையிலும் இல்லாமல் இருப்பது ஆச்சிரியமாக இருக்கிறது. இதை வேறு யாராவது இன்ப அனுபவமாக படித்தது உண்டா?

காலனும் கிழவியும் மற்றும் அபினவ் ஸ்நாப் சுமாராகத் தான் இருந்தன.

வேதாளம் சொன்ன கதை: மிகவும் பிடித்திருந்தது. ஒரு பறவையின் மூலம் கதையை நகர்த்தியிருக்கிறார். கட்டாயம் படிக்க வேண்டிய கதை.

விநாயகர் சதுர்த்தி: கடவுள் நம்பிக்கை, மறுப்பு வைத்து பின்னப்பட்ட சூப்பர் கதை.

ஒரு நாள் கழிந்தது எழுத்தாளளின் வறுமை கதைக் கரு. அவர் வாழ்க்கை அனுபவமா?

மனித இயந்திரம்: 45 வருட ஒரே மாதிரி வாழ்க்கை வாழ்ந்து வரும் ஸ்டோர் குமாஸ்தா மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒரு கணப் பிழை பற்றிய விவரிப்பு தான் கதை. மற்றுமொரு மாஸ்டர் பீஸ்.

நாசக்கார கும்பல்: அந்த கால கட்டத்தில் இருந்த ஜாதி வித்தியாசங்கள் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கதையை தமிழ் நடைக்காகவே படிக்கலாம். புதுமைப் பித்தனின் எழுத்து நடையின் உச்சம் (நான் படித்த வரை) என்று இதைக் கூறலாம்.

உபதேசம், புரட்சி மனப்பான்மை எனக்கு ரொம்ப ரசிக்கவில்லை.

மனக்குகை ஓவியங்கள் () : இதில் ஏசுவில் ஆரம்பித்து சிவன் வரை எல்லா கடவுளையும் ஒரு பிடி பிடித்துள்ளார். சுவையாக இருந்தது.

சாப விமோசனம் இராமாயணத்தில் வரும் அகலிகையை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறப்பான கற்பனை. இதில் கைகேயி - அகலிகை மற்றும் சீதை - அகலிகை விவாதங்கள் சிந்தனை தூண்டுவதாக உள்ளது. இதை வைத்து ஒரு நாவல் எழுதி இருக்கலாம்.இந்தத் தொகுப்பிலேயே மிகச் சிறந்த கதை என்று கூறலாம்.

இவர் கதைகளில் வறுமை, இழப்பு, கடவுள் நம்பிக்கை அல்லது மறுப்பு பற்றிய தேடல் மிக அழகாக, இயற்கையாகக் கை கூடி வருகிறது.

படிக்கவில்லை என்றால் கட்டாயம் படித்துப் பார்க்கவும்.

சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகளில் ஒன்று மனித இயந்திரம்.

ஜெயமோகன் சிபாரிசில் இடம் பெறும் கதைகள்:


ஒருநாள்கழிந்தது
சாமியாரும் குழந்தையும் சீடையும்
காலனும் கிழவியும்
சாபவிமோசனம்
வேதாளம் சொன்ன கதை

இங்கே கொடுக்கப்பட்டுள்ள சிறுகதைகள் இணைப்புக்களுக்கு அழியாச்சுடர் ராமுக்கும், சுஜாதா பரிந்துரைக்கு சிலிகான் ஷெல்ப் RV,chennailibrary.com க்கும் நன்றிகள்.

திங்கள், 8 நவம்பர், 2010

தொலைக் காட்சியில் தீபாவளி



என் தொழில் முறை குடும்ப உறவுகள் எல்லாம் சிங்காரச் சென்னையில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் போது, இங்கு அலுவலகத்தில் கடமை தவறாமல் வேலை. (யாருமே இல்லாத டீ கடைல யாருக்குடா டீ ஆத்தர? உன் கடமை உணர்ச்சிக்கு ஓர் அளவே இல்லையடா? - என்று விவேக் புலம்பல் நினைவுக்கு வருதா?). புலம் பெயர்ந்ததிலிருந்து தீபாவளி அப்படி ஒன்றும் மெய்சிலிர்க்கும் அனுபவமாக இல்லை. உறவினர்கள் இல்லாத தீபாவளி பெரிதாக ரசிக்காது. விடுமுறை இல்லை. நான்கு மணிக்கு எழுந்து வீடு முழுவதும் விளக்கைப் போட்டு, என்னை தேய்த்து குளித்து, பட்டாசுகளை பங்கு போட்டு - ஒரு முறைக்கு நூறு முறை சரி பார்த்து - தனி சுகம். நினைவில் வாழ்வதை யார் தான் தடுக்க முடியும்.

தொலைக் காட்சி மூலம் தீபாவளி தமிழகத்தை காணுவது தான் சிறந்த வழி. விடுமுறை இல்லாததால் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் DVR - இல் பதிவு செய்து பார்த்தேன். எல்லா நிகழ்ச்சிகளும் ஏதோ ஒரு விதத்தில் சினிமா தொடர்பு கொண்டவைகள்.

சன் தொலைக் காட்சியில் "சூப்பர் ஹிட்" (அப்படின்னா சன்னின் விளக்கம் என்ன என்று கேட்க வேண்டும்) முதன் முறையாக (கடைசியாகவும் இருந்தால் நன்றாக இருக்கும்) "தீராத விளையாட்டுப் பிள்ளை" சினிமா. சகிக்கவில்லை. பத்து நிமிடம் கூட பார்க்க முடியவில்லை.அடுத்த படம் "சுறா புகழ்" விஜய் நடித்தது. சுறா வந்த பிறகு இணையத்தில் வெளிவந்த ஜோக்குகள் படித்ததிலிருந்து சுறா விஜய் தான் கண் முன் வந்துத் தொலைக்கிறார். விஜய் படமும் ruled out.



பிறகு ஒரே எந்திரன் மயம் தான். எந்திரன் உருவான விதம் கொஞ்சம் பார்த்தேன்.நிறைய உழைப்பு தெரிந்தது. விளம்பர இடை வேளையின் போது ஜெயாமாக்ஸ் (கொஞ்ச நாட்களுக்கு இலவசம்) பார்த்தால், யாரோ ராகவேந்திரர் (புதிய பாடகர் போல) பேட்டி. சிரமப்பட்டு பழைய யேசுதாஸ் பாடலை பாட முயற்சித்துக் கொண்டிருந்தார். சிரமப்பரிகாரம் செய்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன். ரஜினியின் பேட்டி சொதப்பல். பேசாமல் ரஜினியே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லி இருக்கலாம். புதிதாக ஒன்றும் இல்லை. ஆக மொத்தம் "ஒரு நட்சத்திர" தீபாவளி கொண்டாட்டம் தான் சன்னுக்கு.



ஜெயாவில் விவேக் எப்போதும் போல வந்து போனார். சுமார் தான். கார்த்திக் நிகழ்ச்சியை விட பிரபு பேட்டி பரவாயில்லை.கமலஹாசன் கலந்துரையாடலில் தமிழைக் காப்பாற்ற அறைகூவல் விடுத்தார். அதை இன்று யாரெல்லாம் காப்பாற்றி வருகிறார்கள் என்று அடையாளம் வேறு காட்டினார். சுகாசினியின் சித்தப்பா சந்தேகமில்லாமல். நல்ல நடிகர். இவர் நடிப்பு ரசிக்கக் கூடியது.

"Kings in Concert" என்ற ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் இணைந்து வழங்கிய இசை நிகழ்ச்சி தான் எனக்கு மிகவும் பிடித்த உருப்படியான ஒன்று. இருவரும் பின்னி எடுத்து விட்டார்கள். ஹிந்துஸ்தானி வேறு தெரிந்ததால் சங்கதிகள் வந்து விழுகின்றன. சங்கரின் "பெஹாக்" மற்றும் ஹரியின் "சுட்டும் சுடர் விழி" (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) அமர்க்களம். இறுதியில் இருவரும் சேர்ந்து "சிந்து பைரவியில்"(ஹிந்துஸ்தானியில் "பைரவியா"?) பாடியது ஆனந்தம் ஆனந்தம் தான். இந்த இசை மழையை தவற விட்டிருந்தால் இங்கே கிளிக்கவும்.

ஒன்றிரண்டு சினிமா தொடர்புள்ள தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுடன் தீபாவளி கொண்டாடும் நாள் வருமா?

செவ்வாய், 5 அக்டோபர், 2010

எந்திர(ன்) மயமான வாழ்வில் ஒரு வயலின் கச்சேரி


எந்திரன் மேனியா பிடித்திருக்கும் தமிழ் கூறும் நல்லுலகத்தில் எந்திரன் இல்லாமல் பதிவு எழுதுவது பொலிடிகலி சரியாக இருக்காது என்பதால் இந்த தலைப்பு. சரி. விஷயத்திற்கு வருவோம். வயலின் வித்வான்கள் கன்னியாகுமரி மற்றும் அவருடைய மாணவர் எம்பார் கண்ணன் அவர்கள் இணைந்து டேடிராய்டில் அக்டோபர் ஒன்றாம் நாள் வழங்கிய இசை விருந்தைப் பற்றிய என் அனுபவங்கள்.

என் கர்நாடக இசை அறிவு என்பது அனுபவப் பூரணமானது. கிட்டத்தட்ட 35 வருடங்களாக இசை கேட்டதில் பெற்ற ஞானம் (ஞானமெல்லாம் கொஞ்சம் ஓவர்?). கச்சேரிக்கு வரும் பாதி பேருக்கு மேல் இதே கதை தான். சில பேர் வர்ணம் வரைக்கும் கற்றேன், கீர்த்தனை வரும் போது கல்லூரி படிப்பு, கல்யாணம், வேலை, குழந்தை என்று ஏதாவது காரணத்தைச் சொல்லி மேலே கற்க முடியாமல் போன (சேஷ கோபாலனுக்கு போட்டியாக வந்திருக்கலாம் போல) பழைய நினைவுகளில் மூழ்குவதைப் பார்க்கலாம்.

ஒரு முறை கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் நிற்கும் போது பக்கத்தில் நின்ற வயதான பெண்மணி ஒரு பச்சை நிற பஸ் வந்த உடன் திருவேங்கடம் செல்லும் பஸ் வந்து விட்டது என்றார். நான் வியந்து பார்த்த போது அந்த அம்மாள் எனக்குப் படிக்கத் தெரியாது ஆனால் பஸ்சின் நிறத்தை வைத்து எங்கு செல்லும் என கண்டறிவேன் என்று ஒரு போடு போட்டார்.

அது போல் ராகம் கண்டறிய "pattern matching" தான். இதில் பெரிய பிரச்சனை வித்வான்கள் அந்த மதி, இந்த நிதி என்று ஏதாவது ராகத்தை எடுத்து தங்கள் திறமையைக் காட்ட ஆரம்பித்தால் ஆட்டம் க்ளோஸ். சுற்றி முற்றி பார்த்து பிரம்மா படைப்பின் பிரமிப்பை ஆராய்ந்து அழகை ஆராதிக்க வேண்டியது தான்.

ஆனால் இந்த இசை விருந்து அப்படி இருக்கவில்லை. மிகவும் ரசிக்கும் படி அமைந்தது குறிப்பிடத்தக்கது.நாட்டக் குறிஞ்சி வர்ணத்தில் ஆரம்பித்த கச்சேரி விறுவிறுப்பான "மஹாகணபதிம்" நாட்டையில் பயணித்து ரசிகர்களை நிமிர்ந்து உட்காரச் செய்தது. அடுத்து தேவ காந்தரியில் "ஷீரசாகர சயன" தென்றலாக வந்து மனதை வருடிச் சென்றது.

கச்சேரியின் உச்சகட்டமாக அமைந்தது சங்கராபரணத்தில் "ஸ்வரராக சுதாவும்" மற்றும் நட பைரவியில் MLV யின் மிகவும் பிரபலமான "ஸ்ரீ வள்ளி தேவ சேனாபதே" என்ற கீர்த்தனைகள். ஸ்வரராக சுதா கேட்க மிகவும் இன்பமாக இருக்கும். அதை வாசித்த விதம் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது



நட பைரவியில் கன்னியாகுமரியும் அதுவரை அடக்கி வாசித்த எம்பார் கண்ணனும் ஸ்வரப் பிரஸ்தாரத்தில் மிக மிக அருமையாக வாசித்து ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சத்திற்கே இட்டுச் சென்றார்கள் என்றால் மிகையாகாது.



ஸ்ரீ முஷ்ணம் ராஜாராவ் அவர்கள் தான் மிருதங்கத்தில். தனியில் பின்னி எடுத்துவிட்டார். சில இடங்களில் "அதுருதில்லே" என்று இருந்தாலும் ரசிக்கும் படியாக இருந்தது.நல்ல கலைஞரான கஞ்சீரா கார்த்திக் அதிக வாய்ப்பில்லாமல் மேடையில் அமர்ந்திருந்தது வருத்தமாக இருந்தது.

துக்கடாவில் துஜாவந்தியில் ராமச்சந்திர வாசித்த பிறகு மனதிற்கு இதமான "மானச சஞ்சரரே" காற்றில் மிதந்து வந்தது. அடுத்து ராகமாலிகையில் "வெங்கடேச கோவிந்தா" தொடர்ந்த போது ஸ்ரீ முஷ்ணம் அவர்கள் ரசிகர்கள் எல்லோரையும் கைதட்டும் படி செய்ததில் ஏதோ கோவிந்தபுரம் விட்டல் தாஸ் நாம சங்கீர்த்தனத்தில் அமர்ந்து இருந்த உணர்வு ஏற்பட்டது.

இறுதியில் "மிஸ்ர சிவரஞ்சனி" தில்லானா எண்பதுகளில் மகாராஜபுரம் சந்தானம் மற்றும் சந்திரசேகரன் அவர்களின் வயலினுடன் கேட்டு ரசித்த நாட்களை நினைவில் கொண்டு வந்தது. ஆக மொத்தம் இனிமையான மாலைப் பொழுதாகக் கழிந்தது.

இந்த நிகழ்ச்சியை இணைந்து ஏற்பாடு செய்த நண்பர் கிருஷ்ணன் அவர்கள் நடத்தும் "iCarnatic.org" மற்றும் "Michigan Sahana" அமைப்புகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

புதன், 22 செப்டம்பர், 2010

சா.கந்தசாமியின் சாயாவனம் - அழிவைச் சித்தரிக்கும் அழியாத ஆக்கம்


சுமார் நாற்பத்தைன்பது வருடங்களுக்கு முன் சுற்றுச் சூழலை சமூக மாற்றங்களுடன் ஒருங்கிணைத்து ஓர் உயர்வான ஆக்கத்தை உருவாக்கும் எண்ணம் சா.கந்தசாமி அவர்களுக்கு எப்படித் தான் தோன்றியதோ? அதிலும் அவருடைய இருபத்தைந்து வயதில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். சமூகத்தில் அன்று நிலவிய ஏற்றத் தாழ்வுகள் மற்றும் மரபான பண்ட மாற்று முறையிலிருந்து பணம் என்ற பேய் எப்படி மெதுவாக தன் பலத்தை பரப்ப ஆரம்பித்தது என்பதை சாயாவனம் துல்லியமாக படம் பிடித்து காட்டியிருக்கிறது.ஓர் அழிவை அழியாத சித்திரம் ஆக்கிக் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

"ஒரு புளியன் தோப்பை அழித்து சர்க்கரை ஆலை கட்டப்படுகிறது" என்று கதையை ஒரு வரியில் சொல்லி விடலாம். ஆனால் அதன் பின்னால் இருக்கும் மனிதனின் பேராசை, அகங்காரம், இலக்கை அடைந்தே தீரும் வெறி, அப்பாவி மக்களின் எண்ண ஓட்டங்கள், மனிதர்களுக்குள் நடக்கும் சண்டைகள் மற்றும் ஏற்ற தாழ்வுகள் என்ற பல விசயங்களை மனதில் ஒருவிதமான நெருடலோடு படிக்கும் படி கதையை கட்டமைத்துள்ளார் நாவலாசிரியர் என்றால் மிகையாகாது.

வெளிநாட்டில் இருந்து சாயவனத்திற்கு வரும் சிதம்பரம் தான் புளியன் தோப்பை வாங்கி சர்க்கரை ஆலை கட்ட முற்படும் கதையின் நாயகன். அதற்காக அவன் மேற்கொள்ளும் சமாதானங்கள், அவனுக்குள் நிகழும் அற வீழ்ச்சி, அவனுடைய எண்ணங்கள் நிறைவேற, நிறைவேற முற்றிலும் மறந்து போகும் மனிதாபிமானம் என்று கதைப் பின்னப்பட்டுள்ளது. இதில் சிவனாண்டித்தேவர் சிதம்பரத்திற்கு பெரிதும் உதுவுகிறார். காடு எரியூட்டப் படுவதை சிறிது கூட ஆர்வம் குறையாமல் படிக்கும் படி எழுதியுள்ளார். சிதம்பரத்தின் மன நிலையையும், அற வீழ்ச்சியையும் அணையில் நீர்மட்டம் போன்ற சித்தரிப்புக்கு ஒப்பிடலாம்.

செட்டியார் வீட்டிற்க்குச் சென்று நெய்த புடவையை எடுத்து வந்து நெல் விளையும் போது கொடுக்கும் ஓர் இணக்கம், "பெண்ணிற்கு ஒரு தங்கக் கூண்டிலிருந்து மற்றொரு தங்கக் கூண்டிற்கு செல்லும்" நிகழ்ச்சியாக அந்தக் காலத்துக் கல்யாணத்தை பற்றிய விவரிப்பு, காங்கிரஸ் மாநாடு பற்றிய செய்தி, பண்ட மாற்று முறைக்கு பதிலாக பணப் புழக்கத்தை கையாளத் தெரியாத மற்றும் விரும்பாத ஊர் மக்கள், ஆலைக்கு கரும்பு வேண்டும் என்பதற்காக கரும்பைப் பயிரிட ஊக்குவிக்கும் சிதம்பரத்தின் செயல்பாடுகள், தன் இறந்த தாயைப் பற்றி அவளுடைய பால்ய சிநேகிதி பேசும் போது கூட சிறுதும் உணர்ச்சி காட்டாத சிதம்பரத்தின் மன ஓட்டம் என்று பல நிகழ்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த நாவலின் சிறப்பே ஆசிரியர் எந்த இடத்திலும் ஒரு முடிவைச் சொல்லாமல், வாசகர்களின் கற்பனையில் காட்சிகளை விரிவடையச் செய்வது மற்றும் நாவல் முழுவதும் மறைத்து கிடக்கும் படிமங்கள் என்று சொல்லலாம்.

தமிழ் இலக்கியத்தில் ஆவல் இருப்பவர்கள் எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல் இது. தமிழின் தலை சிறந்த படைப்புகளில் ஒன்றாக எந்தக் காலத்திலும் இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

காலச்சுவடின் கிளாசிக் பதிப்பில் அழகாக நாவல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு சிகரம் வைத்தார் போல் பாவண்ணன் அவர்களின் முகவுரை அற்புதம்.
மீண்டும் மீண்டும் படிக்கும் ஆவலைத் தூண்டும் ஒரு நாவல் சாயவனம்.

சனி, 4 செப்டம்பர், 2010

ஓர் ஆசிரியரின் நினைவாக.... II

வாழ்க்கையில் கடந்து போகும் ஒரு நிமிட அனுபவம் மறக்க முடியாத சுவையான இன்பத்தை நோக்கி இட்டுச் செல்லும் வலிமையுள்ளது. எனக்கு அப்படி ஓர் அனுபவம் ஓர் ஆசிரியரின் மூலம் கிடைத்தது. அவரின் நினைவாகத் தான் இந்த இடுகை.

நான் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலையில் கணிதத்தை சிறப்புப் படமாக எடுத்து படித்துக் கொண்டிருந்தேன். தமிழும், ஆங்கிலமும் கட்டாயம் முதல் இரண்டு ஆண்டுகள் படித்தாக வேண்டும். அந்த வகுப்புகளில் ஐம்பது மாணவர்கள் இருப்பார்கள். அதில் எடுக்கும் மதிப்பெண்கள் பெரிய அளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். எனவே பெரிய ஈடுபாடுடன் தமிழும், ஆங்கிலமும் கற்றோம் என்று சொல்ல முடியாது. ஆனால் அது பெரிய தவறு என்று உணர்ந்த போது காலம் கடந்து விட்டது. அதிலும் ஆங்கிலத்தை விட தமிழ் கற்பதில் ஓர் அக்கறையின்மை இயல்பாகவே மாணவர்களிடையே இருந்தது என்றால் மிகையாகாது.

இரண்டாம் ஆண்டில் பேராசிரியர் லூர்து அவர்கள் தமிழ் பாடம் கற்றுக் கொடுத்தார்கள். அவர் புத்தகங்கள் வாங்குவதிலும், படிப்பதிலும் நிகரில்லாதவர். அவருடைய வருமானத்தில் கணிசமான தொகையை புத்தகங்கள் வாங்குவதில் செலவழிப்பதாகக் கூறுவார். பட்டிமன்றங்களில் விருப்பமில்லாமல் அவர் கலந்து கொண்டது கூட இதற்குத் தான் என்ற பேச்சு உண்டு. ஒரு முறை "Future Shock" என்ற புதிதாக வாங்கிய புத்தகத்தைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார். ஒரு நாள் வகுப்பில் புதுமைப் பித்தனைப் பற்றிக் கூறினார். ஒரு கதையின் முடிவில் புதுமைப்பித்தன் "அங்கே சிருஷ்டித் தொழில் நடக்கிறது" என்று முடித்ததைப் பற்றி சிலாகித்தார். அப்போதெல்லாம் குமுதம், கல்கி,விகடன் வாசிப்புத் தான் இருந்தது. லூர்து அவர்கள் அறிமுகப்படுத்தலில் நூலகத்திலிருந்து புதுமைப்பித்தனைப் படித்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தி.ஜா,வண்ணநிலவன், ல.ச.ரா என்று அருமையான இலக்கியத்தை நோக்கிச் செல்லும் அனுபவம் வாய்த்தது. அது தொடர்ந்து இன்று ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன் வரை கொண்டு சேர்த்திருக்கிறது. உண்மையான இலக்கிய அனுபவம் எது என்பதும் லூர்து அவர்கள் திறந்து வைத்த வாசல் மூலம் அறிய முடிந்தது. பேராசிரியர் லூர்து அவர்கள் இன்று நம்முடன் இல்லை எனினும், அவருக்கு என் நன்றியைச் செலுத்தாமல் இருக்க முடியவில்லை. உண்மையாக அவர் பாடத்திட்டத்தில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் பெரிய அளவில் மனதில் நிற்கவில்லை (அதற்கு முழு பொறுப்பு நான் தான்). ஆனால் இன்று ஓரளவு இலக்கிய வாசகனாக இருப்பதற்கு வழிகாட்டி பேராசிரியர் லூர்து அவர்கள் என்பதை இந்த ஆசிரியர் தினத்தில் தெரிவித்துக் கொள்வதில் பெறு மகிழ்ச்சி அடைகிறேன்.

புதன், 25 ஆகஸ்ட், 2010

பலாச்சுளைக் கணக்கு - கணக்கதிகாரம்


கணக்கதிகாரம் என்ற 19- ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கணிதப் புத்தகம் இணையத்தில் படிக்கக் கிடைத்தது. அதை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. என் சந்தோஷத்திற்காக புரிந்த வரை அதைப் பற்றி எழுதலாம் என்று உள்ளேன். இதை தமிழ் நன்கு அறிந்த நண்பர்கள் ஏற்கனவே படித்து ரசித்திருப்பார்கள். இருந்தாலும் இதை மீண்டும் படிக்க நிச்சியம் கசக்காது. சரி. ஒரு பலாப் பழக் கணக்குடன் ஆரம்பிப்போம்.

ஒரு பலாப் பழத்தை அறுக்காமலே அதில் எத்தனை சுளை இருக்கிறது என்பதைக் கண்டறியும் வழி கொடுக்கப் பட்டுள்ளது.

பலவின் சுளையறிய வேண்டிதிரேலாங்கு
சிறுமுள்ளுக்காம்பருக்கெண்ணி - யறுகாக
ஆறிற்பெருக்கியே யைந்தினுகீந்திடவே
வேறென்ன வேண்டாஞ்ச்சுளை


அதாவது பலாப்பழத்தின் காம்பைச் சுற்றயுள்ள முற்களை எண்ணி அதனை ஆறால் பெருக்கினால் வரும் விடையை ஐந்தால் வகுத்தல் கிடக்கும் ஈவு தான் அந்தப் பலாவில் இருக்கிற மொத்த சுளையாகும்.

உதாரணமாக காம்பைச் சுற்றி 100 முட்கள் இருந்தால் அதை ஆறால் பெருக்கி ஐந்தால் வகுத்தால் கிடைக்கும் சுளையின் எண்ணிக்கை 120 ஆகும்.

பாலாவே இனிக்கும் என்றால் அதனுடன் கணிதக் கற்கண்டு மற்றும் தமிழ்த் தேன் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்.
ருசித்து மகிழுங்கள்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

பீப்ளி லைவ் (Peepli Live) - காட்சி ஊடகங்களின் உல்லாசம்



ஒரு விவசாயின் சாவின் அறிவிப்பை இந்தியாவும், அதன் அரசியல் வாதிகள் மற்றும் ஊடகங்கள் - குறிப்பாக தொலைக் காட்சிகள் - எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது தான் படத்தின் கதை. இதை அருமையான நக்கலுடன் படமாக்கப் பட்டுள்ளது.

இந்தப் படத்தில் எந்த மசாலாவும் இல்லை. அரசியல்வாதிகள் எப்படி செயல்படுவார்கள் என்பது பல படங்களில் பார்த்தது தான். அதில் பெரிய புதுமை இல்லை. ஆனால் தொலைக் காட்சிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. மலத்தைக் கூட விடாமல் காட்டி கொண்டாடுகிறது ஒரு தொலைக்காட்சி.



படம் முழுவதும் ஒரு பகடி. அதனால் எந்த உணர்ச்சிகளுக்கும் இடமே இல்லை. படம் பார்க்கும் போது ஒரு விவசாயியின் துன்பம் பற்றிய எண்ணம் சிறிது கூட மனதில் உருவாகவில்லை. இதை ஒரு வருத்தம் அளிக்கும் விஷயமாக இந்திய சமுதாயத்தின் ஒரு பகுதி கூட காணவில்லை என்பது கொடுமை தான். பகடி மூலம் விருதுகளும், நிறைய பணமும் இந்த படம் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒட்டு மொத்த இந்திய சமூகத்தை இப்படி உணர்ச்சியற்ற கும்பலாகக் காட்டியுள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது.

ஆக மொத்தம் இந்தப் படம் பிடிச்சிருக்கு ஆனால் பிடிக்கவில்லை.

இந்தப் படம் நல்லாயிருக்கு ஆனால் நல்லாயில்லை.

ஞாயிறு, 27 ஜூன், 2010

இராவணன் - ரிப்போர்ட் கார்ட்




திரைக்கதை - 40% ரொம்ப சுமார் மணிரத்னமா இப்படி?

வசனம் - 20% படு மட்டம் சுஹாசினி - இது தான் சொந்த வீட்டில் சூனியம் வைப்பது என்பதா?

இயக்கம் - 50% மணியின் முத்திரை நிறைய இடங்களில்.

ஒளிப்பதிவு - 80% அருமையோ அருமை இதற்காகத் தான் படத்தைத் திரை அரங்கில் பார்க்க வேண்டும்.

இசை - 70% பாடல்கள் நன்றாக உள்ளது.பின்னணி இசையும் குறை சொல்ல முடியாது



நடிப்பு - விக்ரம் 75% .ஐஸ் - 70% மற்றவர்கள் சுமார் தான்.


ஆக மொத்தம் 35%. ஒருமுறை திரை அரங்கு சென்று பார்க்கலாம்.

ராமாயணக் கதைத் தழுவல் போலவும், சற்று வேறு மாதிரியும்
எடுத்து குழப்பத்திற்கும், விளம்பரத்திற்கும் வழிதேடி உள்ளார் மணி.

இத்தனை நாட்கள் காத்திருந்து சற்று ஏமாற்றம் தான்.

அடுத்தப் படத்தை எதிர்பார்த்து காத்திருப்போம்.

இராவணன் - தலை இல்லாதவன்.

புதன், 23 ஜூன், 2010

சிங்கப்பூர் பயணம்



நீண்ட விடுப்புப் பயணம் செய்வதற்கு முன் பல சொந்த ஏற்பாடுகள், அலுவலக நெருக்கடிகள் என்று சில தொல்லைகள் இருந்தாலும் பயணத்தில் கிடைக்கும் அனுபவங்கள் சுவையானவை. டேடிராய்டிலிருந்து ஹூச்டனுடன் பயணம் தொடக்கம்.

அருகில் அமர்ந்தவருடன் ஒரு புன்சிரிப்பு. சில நிமிடங்களில் சகஜமாக உரையாடல். அசீட்டர் (Aceter) என்ற பெயர் கொண்ட அவர் "plant breeding" என்ற பிரிவில் ஆராய்ச்சி செய்து வருகிறார். அவர் பேசிய விதம் இங்கிலாந்துக்காரர் போல இருந்தது. விசாரித்ததில் தென் ஆப்ரிகர் என தெரிய வந்தது. உடனே தென் ஆப்பரிக்க இன்றைய நிலைமை பற்றி கேட்டு அறிந்தேன்.

மண்டேலா இருந்த வரை மிகவும் நியாயமாக இருந்த அரசு இன்று அப்படியில்லை என்றார். இன்று"நேர்மாறான வித்தியாசப்படுத்துதல்" (reverse discrimination) நடந்து வருவதாக அசீட்டர் கூறினார். இதை தென்னாப்ரிகவைச் சேர்ந்த கறுப்பர்களிடம் பேசாமல் உண்மை அறிய முடியாது. எங்கள் முன்னோர்கள் செய்த தவறுகளுக்கு எங்களை பழிவாங்குவது முறையில்லை என்றார். அதனால் அவருக்கு சொந்த நாட்டில் படிக்க இடம் கிடைக்காமல் அமெரிக்காவில் படிக்க வேண்டிய நிலை என்றார். இன்னும் சிறிது ஆண்டுகளில் எல்லாம் சரியாகி விடும் என்று நம்புகிறார்.

பிறகு கிரிக்கெட் பக்கம் பேச்சு திரும்பியது. 2003 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்த்ததாகக் கூறினார். அந்த விளையாட்டில் டெண்டுல்கரின் விளையாட்டைப் பற்றி நினைவு கூர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.



ஸ்மித் ஒரு நல்ல கேப்டன் இல்லை என்றும் அமெரிக்காவில் அதிகம் கிரிக்கெட் விளையாட முடியவில்லை என்றும் இருவரும் நினைத்தோம். பழைய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களை (Barry Richards, Pollock) பற்றி நான் பல தகவல்களை பகிர்ந்து கொண்டேன்.

பிறகு நானும் ஒரு ஆராய்ச்சி மாணவனாக இருந்ததால் பொதுவாக ஆராய்ச்சியைப் பற்றி பேசினோம். கணிதத்தை எப்படி அவர் ஆராய்ச்சியில் பயன்படுத்தலாம் என்று சில கருத்துப் பரிமாற்றம். கணிதத்தை எப்படி அவர் ஆராய்ச்சியில் பயன்படுத்தலாம் என்று சில கருத்துப் பரிமாற்றம். எல்லா நாட்டிலும் பிரச்சனைகள். இந்தியாவில் ஜாதி மற்றும் மொழி.
தென்னாப்ரிக்காவில் நிற வெறி.

ஆனால் இயற்கைச் செல்வங்கள் எங்கு இருக்கிறதோ அந்த நாட்டின் விவகாரங்களில் மற்ற நாடுகள் குறிப்பாக அமெரிக்கா தலையீடு உள்ளது. இறுதியில் எல்லாம் பணம் படுத்தும் பாடு தான். உதாரணத்திற்கு தென்னாப்ரிக்காவில் கிடைக்கும் வைரம் இங்கிலாந்து மூலம் தான் விற்பனையாகிறது.

இன்றுள்ள ஜிம்பாபுவே நிலைமையைப் பாருங்கள். எத்தனை பட்டினிச் சாவுகள். துயரம் ஒரு தொடர் கதை தான்.


ஒருபுறம் தமிழுக்கு செம்மொழி மாநாடு. மறுபுறம் மலேசியா மற்றும் இலங்கையில் தமிழர்களின் தீராத அல்லல்கள்.

கனமான மனதோடு ஹூஸ்டன் விமான நிலையத்தில் இறங்கினேன்.

திங்கள், 21 ஜூன், 2010

இந்த வாரக் கணக்கு - 26


ஒரு பில்லியர்ட் பந்தை 4 அடிக்கு 9 அடி உள்ள ஒரு பில்லியர்ட் போர்டின் ஒரு மூலையிலிருந்து 45 பாகை(degree) கோணத்தில் அடித்தால், அது ஒரு மூலையில் சென்று விழுவதற்கு முன் எத்தனை முறை அதன் விளிம்புகளில்(edges) மோதி வெளிவரும் (rebound)?

வெள்ளி, 11 ஜூன், 2010

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகை..




ஒவ்வொரு நாட்டில் வாழும் போதும் வெவ்வேறு பிரச்சனைகள். சில நன்மைகள்.சில கஷ்டங்கள்.சில இழப்புக்கள்.தேடிராயிடின் (Detroit) பிரச்சனைகள் உலகப் பிரசித்தம். வேலை இழப்புக்கள். வீட்டின் விலைகள் படு வேகமாக சரிதல். பள்ளிகள் மூடுதல். இன்று வேலை இருக்கும். நாளை என்னவாகுமோ என்ற கவலை. பல நண்பர்கள் இந்த ஊரை விட்டுப் போதல். சம்பளக் குறைப்பு. அதே நேரத்தில் விலைவாசி ஏறிக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் முதல் முதலாக இந்த ஊருக்கு வந்த போது நிலைமை இதற்கு நேர்மாறாக இருந்தது.

இந்த பத்து வருடத்தில் பல சொந்த நன்மைகளும் நானும் என் குடும்பத்தாரும் அடைந்துள்ளோம். குறிப்பாக சில மறக்கவே முடியாத நண்பர்கள் கிடைத்தார்கள். என் பெரிய மகனுக்கு ஒரு சிறந்த, உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் படிக்க இடம் கிடைத்துள்ளது. அவன் பாஸ்டன் செல்வதற்கு முன் இந்தியா சென்று உறவினர்களையும் சந்தித்து, நாம் வசித்து வளர்ந்த ஊரை எல்லாம் பார்த்து வரலாம் என்று முடிவு செய்தோம்.

இதற்கிடையில் சிங்கப்பூரில் என் மச்சினன் குடும்பம் மற்றும் மாமியார், மாமானார் அவர்களின் அன்பான அழைப்பை மறுக்க முடியவில்லை. எங்களுக்கும் அவர்களைப் பார்த்துச் செல்ல வேண்டும் என்ற ஆசை. அவர்களைப் பார்த்து சில நாட்கள் தங்கிச் செல்லலாம் என்று ஒரு திருப்பம். ஆகா சிங்கப்பூரில் ஆறு நாட்கள் வாசம். பிறகு சிங்காரச் சென்னைக்கு ஜூன் 24 ஆம் தேதி வருகை.

ஐந்து வருடத்திற்குப் பின் உறவினர்களை பார்ப்பதற்கு மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி.
சென்னை எப்படி இருக்கும்? விலைவாசி மிகமிக ஏறிவிட்டதாக என் அம்மா கூறினார்கள். மற்ற படியுள்ள மாறுதல்களைக் கண்டுகொள்ள ஆவலாக் உள்ளது. சென்னையைத் தவிர தாராபுரம் (ஈரோடு), கொடைக்கானல் மற்றும் திருநெல்வேலி சென்று வர உத்தேசம். சில பதிவர்களைக் கூட பார்க்க ஆவல் தான். ஆனால் நான் ஒன்றும் பிரபல பதிவர் அல்ல. ஏதோ நேரம் கிடைத்தால் எழுத வேண்டும் என்ற ஆவலை பூர்த்தி செய்து கொள்கிறேன்.



எழுபதிகளில் நெல்லைக்கு புகை வண்டி ரயில் தான். ஒரேயொரு வண்டிதான். ஐந்து மணி வாக்கில் சென்னையில் கிளம்பினால் மறு நாள் காலை 11:30 மணிக்கு புகைவண்டி நெல்லையை அடையும். இன்று எத்தனை மாறுதல்கள். பேருந்து நிலையம் கூட இடம் மாறிவிட்டது என்று கூறுகிறார்கள். பள்ளியில் படிக்கும் போது ஊசி கோபுரத்தில் இருந்து சுலோச்சனா பாலம் வரை இரு பக்கமும் பெரிய பெரிய மரங்கள். பகலில் வெயிலே தெரியாமல் சைக்கிளில் சுகமாக பயணம் செய்ய முடியும்.



தாராபுரம் இன்றும் ரயில் வண்டி இல்லாத ஓர் ஊர் தான். ஆனால் மற்றபடி முன்னேறியிருக்கும் என்று நினைக்கிறன். தாரையிலிருந்து பழனிக்குப் போவது ஒரு சுகமான அனுபவம். அந்தப் படிக்கட்டில் ஏறுவது சுவையான அனுபவம். வேகமாக மேலே ஏறி வயதானவர்கள் வருவதற்கு காத்திருத்தல் ஒரு பெருமை கலந்த சந்தோஷம்.

எல்லா இடமும் சுற்றி மீண்டும் அமெரிக்கா வந்தவுடன் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று உள்ளேன்.

புதன், 9 ஜூன், 2010

என் பெயர் ராமசேஷன் - ஆதவனின் ஆக்கம்


மனிதனுக்கு மன நிலை மாறுதல்கள் ஒரு தொடர்கதை. அதிலும் கல்லூரியில் நுழையும் பருவத்திலும், அங்கு ஏற்படும் அனுபவங்களும், கவரும் நோக்கத்துடன் ஆணுக்காக பெண்ணும், பெண்ணுக்காக ஆணும் செய்து கொள்ளும் சமரசங்களும், போடும் போலி வேஷங்களும், அதனால் ஏற்படும் மன உளைச்சல்களையும் மிகத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஆதவன்.

ராமசேஷன் தான் கதை சொல்லி மற்றும் கதாநாயகன். கல்லூரி வாழ்க்கை முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவன் கல்லூரியில் சேரும் தருணத்தையும், அங்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது தான் கதை.

கதை ஆரம்பத்தில் அவன் குடும்பத்தில் அம்மா ஒருபுறமும், பாட்டி (அப்பாவின் அம்மா) மற்றும் விதவையாகி வீட்டில் இருக்கும் அத்தையும் சேர்ந்து அப்பாவை படுத்தும் பாட்டை லேசான நகைச்சுவையுடன் அழகாகக் கூறியிருக்கிறார். ராமுக்கு ஒரு தங்கை வேறு. அவன் கல்லூரியில் சேர்ந்தவுடன் அறிமுகமாகும் பணக்கார ராவ் மற்றும் மூர்த்தி பற்றிய சித்தரிப்பு கச்சிதம். ராவின் தங்கை மாலாவுடன் ராமுக்கு ஏற்படும் பரிச்சயம், அவர்கள் வயதின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு இட்டுச் செல்கிறது. அந்த உறவின் முறிவில் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சிறிது "இண்டேலேசுவல்" பெண்ணான பிரேமாவுடன் உண்டாகும் தொடர்பு மற்றும் பிரேமாவுக்கும், மாலாவுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்று கதையை மிக சுவாரசியமாக எடுத்துச் செல்கிறார் ஆசிரியர்.
வி.எஸ்.வி என்ற சினிமா இயக்குனரை அறிமுகம் செய்து அவர் மூலமாக படைப்பாளியைப் பற்றி பேச வைப்பது தான் கதையில் நான் மிகவும் ரசித்துப் படித்தது.

ஓர் இடத்தில வி.எஸ்.வி இப்படிக் கூறுகிறார் "கலைஞனின் ஹிபோக்ரசியைப் பற்றி பேசுகிறவர்கள், தாங்களும் ஹிபோக்ரசி இல்லாதவர்கள் தானா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். சொந்த வாழ்கையில் புரட்சிகரமாக எதையும் சாதித்திரதாவர்களும், சந்தித்திரதாவர்களும் தான் கலைப் படைப்புகளில் காரசாரமாக, புரட்சிகரமான அம்சங்களை நாடுகிறார்கள் - அப்போது தானே இவற்றை ஆரவாரமாகப் புகழ்வதன் மூலம் தனக்கென ஒரு புரட்சிகரமான பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்."

இது விமர்சிக்கும் பலருக்கும் எந்த காலத்திலும் பொருந்தும். இந்த நாவலில் ஒவ்வொருவரின் மனவோட்டங்களையும், அதற்கான காரணங்களையும் துல்லியமாக எழுதி உள்ளார். எந்த பாசாங்குகளும், தேவையில்லாத வர்ணனைகளும் எங்குமே காண முடியவில்லை. 1970-80 களில் மத்திய தர, குறிப்பாக பிராமண குடும்பத்தில், இருந்த எண்ணவோட்டங்களை சிறப்பாக அனுபவித்து எழுதி உள்ளார் ஆதவன்.

ஒரு கணிதப் பேராசிரியர், மற்றும் "out of the world" அறிவு ஜீவியாக ராமபத்திரன் என்ற மற்றுமொரு பேராசிரியர், ராமின் பெரியப்பா, ராவின் அம்மா, முக்கியமாக பங்கஜம் மாமி என்று ஒரு பட்டாளமே வந்த கதையை நகர்த்திச் செல்கிறது.

உறவின் சிக்கல்களை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம். மேலும் கல்லூரியில் தனிமனிதனாக மட்டுமில்லாமல் கூட்டமாக சேரும் போது உண்டாகும் குழு மனப்பான்மையை படம் பிடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இதுவரை படிக்காமல் இருந்தால் இந்த நாவல் நிச்சியம் படிக்கத் தகுந்தது.

பதிப்பகம்: உயிர்மை
புத்தகம் வாங்கியது: udumalai.com மூலமாக

நோபெலும், ஏபலும், கணிதமும் மற்றும் பரிசுகளும் - 3

சேரே (Serre) எண்கணித கோட்பாட்டில் (Number Thoery) நீள்வட்ட வரைவு (elliptic curve) என்ற பிரிவில் நிறைய கண்டுபிடிப்புகள் செய்துள்ளார். மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நீள்வட்ட வரைவுகள் Y^2 = X^3+aX^2+bX+c என்ற மூன்றுபடி (cubic) சமன்பாடுகளாக இருக்கும்.

கொடுக்கப்பட்ட விகிதமுறா எண் (rational numbers) கெழுக்களை (coefficiants) கொண்ட சமன்பாட்டுக்கு முழு எண்ணிலோ (integers) அல்லது விகிதமுறா எண்ணிலோ தீர்வு இருக்கிறதா என்று பார்ப்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக கணிதத்தில் உள்ளது. இதில் பல ஆராய்ச்சிகள் நடை பெறுகின்றன.

உதாரணமாக X^2+Y^2 = 1 என்ற வட்டத்தின் சமன்பாட்டை எடுத்துக் கொள்ளவும். இதற்கு (-1,0) என்பது ஒரு விகிதமுறா எண் தீர்வாகும்.இதிலிருந்து பல விகதமுறா எண் தீர்வுகளைக் கண்டறியமுடியும். (-1,0) என்ற புள்ளியில் இருந்து வட்டத்தை மற்றொரு புள்ளியில் வெட்டுமாறு ஒரு நேர்கோடு வரையவும். இந்த நேர்கோட்டின் சரிவு (slope) விகிதமுறா எண்ணாக இருந்தால், இந்த நேர்கோடு வட்டத்தை வெட்டும் புள்ளியும் விகதமுறா எண்ணாக இருக்கும். எனவே ஒரு விகிதமுறா தீர்வு இருந்தால் முடிவில்லா (infinite) விகிதமுறா எண் தீர்வுகளை கண்டறியமுடியும்.

இதேபோல் Y^2 = X^3+aX^2+bX+c என்ற நீள்வட்ட வளைவுகளுக்கு ஒரு விகதமுறா எண் தீர்வு இருந்தால், முடிவில்லா (infinite) விகிதமுறா எண் தீர்வுகளை கண்டறிய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இதில் என்ன அழகு என்றால், நீள் வட்ட வளைவில் உள்ள எல்லா புள்ளிகளும் ஒரு குலம் (group) ஆக இருக்கும்.

மூன்று படி நீள்வட்ட வளைவு y^2+y = x^3-x கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.



இதில் P = (a,b) என்ற புள்ளியை எடுத்துக் கொண்டு, இந்த புள்ளியில் ஒரு தொடுகோடு வரையவும். அது இந்த வரைவை Q புள்ளியில் சந்திக்கும். மீண்டும் Q வில் ஒரு தொடுகோடு வரைந்தால் அது R என்ற வேறு புள்ளியில் இந்த வரைவை வெட்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மீண்டும் முதலில் ஆரம்பித்த P என்ற புள்ளியை வந்து அடைந்தால் புள்ளி P ஒரு விகிதமுறா எண்ணாக இருக்கும். இந்த நீள் வட்ட வரைவுகள் புகழ்பெற்ற பெர்மாடின் இறுதி தேற்றத்தை (Fermat's Last Theorem) நிரூபிக்க உதவியது. மேலும் "Cryptography" என்ற இன்று மிகவும் பிரபலமான துறையில் நீள்வட்ட வரைவுகள் மிகவும் பயன்படுத்தப்படுகிறது.இதில் தான் சேரே (Serre) பல அருமையான கண்டுபிடிப்புகளை செய்துள்ளார். அவருக்கு முதல் ஏபல் விருது கொடுக்கப்பட்டது மிகவும் பொருத்தமானது..

செரெவைப் பற்றி மேலும் அறிய இந்த சுட்டியை சொடுக்கவும்.

நீள்வட்ட வரைவுகளைப் பற்றி மேலும் அறிய சொடுக்கவும்

இந்த இடுகை பிடித்திருந்தால் ஓட்டு போட்டுச் செல்லவும். பல பேர் படிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

வியாழன், 27 மே, 2010

வெண்ணிலா கபடிகுழு - வித்தியாசமான அனுபவம்


ஆஸ்திரேலியாவில் ஒரு பாட்டு. இஸ்தான்புல்லில் ஒரு குத்தாட்டம். நான்கு பஞ்ச வசனங்கள். தமிழக முதல்வருக்கும் பிடித்த நமீதா, கலாநிதி மாறன் வழங்கும் என்ற எந்த பெருமையும் இல்லாமல் இன்று ஒரு தமிழ் சினிமாவை வெற்றி ஆரத் தழுவிக் கொண்டது என்றால் அது வெண்ணிலா கபடி குழு என்று தைரியமாக சொல்ல முடியும்.

சமீபத்தில் தான் இந்த படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனம் பற்றி என்ன சொல்ல? இயக்குனர் சுசீந்தரனின் திரைக்கதை ஒரு மகுடம் என்றால், பாஸ்கர் சக்தியின் வசனம் அந்த மகுடத்தில் வைத்த வைரக்கல் போல் ஜொலிக்கிறது. வசனத்தில் இழையோடும் நகைச் சுவை மறக்க முடியாத ஒன்று தான். கபடி விளையாட்டில் உள்ள அரசியலும், வெற்றி பெற்ற விளையாட்டு வீரரின் மனநிலையில் ஏற்படும் மாறுதலும், ஜாதியை வைத்து கபடிக் குழுவை பிரிக்கப் பார்ப்பதும் மற்றும் வெற்றி அடைய என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வெறியையும் மிக அளவோடு அழகாகக் காட்டியுள்ள இயக்குனரை எத்தனை பாராட்டினாலும் தகும். எல்லோரும் நன்கு நடித்திருந்தாலும் கிஷோரின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இசை பிரமாதமில்லை என்றாலும், விஜய் அன்டோநியயைப் போட்டு கெடுக்காமல் இருந்த இயக்குனரை பாராட்ட வேண்டும். படத் தயாரிப்பளருக்கு (பெயர் மறந்து விட்டது) ரொம்ப துணிச்சல்.



படத்தின் கிளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று. சரண்யா (கதாநாயகி) மனதில் பேருந்தில் பயணிக்கும் போது என்ன மாதிரி எண்ணங்கள் ஓடியிருக்கும். மாரிமுத்துவை பார்க்காத வருத்தமா அல்லது அடுத்த திருவிழாவில் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையா? அருமை.

இந்தப் படத்தை பார்த்த பின் தான் சன் டிவி திரையை கிழித்துக் கொண்டு வரும் சுறா ஏன் திரையரங்குகளில் தூங்குகிறது என்றும், வலை உலகத்தினர் ஏன் சுறாவைச் சுரண்டிப் பார்க்கிறார்கள் என்றும் தெரிகிறது.

செவ்வாய், 25 மே, 2010

நோபெலும், ஏபலும், கணிதமும் மற்றும் பரிசுகளும் - 2

ஏபலின் 100 வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அவருக்கு ஒரு நினைவு மண்டபமும், கருத்தரங்கும் மற்றும் அவர் பெயரில் ஒரு கணிதப் பரிசும் கொடுக்க வேண்டும் என்ற கனவு அப்போதிருந்த கணித மேதைகளின் எண்ணமாக இருந்தது. ஆனால் அதில் முதல் இரண்டும் நிறைவேறியது. கணிதத்தில் பரிசு என்பது கனவாகவே இருந்தது. அந்த கனவு ஏபலின் 200 வது பிறந்த நாளில் நிறைவேறியது.2003 ஆம் ஆண்டு முதல் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. முதல் பரிசு Jean-Pierre Serre என்ற கணித மேதைக்குக் கொடுக்கப்பட்டது.சேரே (Serre) இடவியல் (Topology) மற்றும் எண் கோட்பாட்டில் (Number Thoery) பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக் காரர்.



இடவியல் பொருட்களின் மாறாத தன்மையைப் பற்றி அறிந்து கொள்வது எனக் கூறலாம். ஒரு பொருளை மடக்கியோ, நீட்டியோ,வளைத்தோ பார்ப்பதால் அதனுடைய நீளம்,அகலம் மாறலாம்.ஆனால் அதன் பொதுத் தன்மை மாறாது. அதாவது ஒரு வடிவத்தில் இருந்து அடுத்த வடிவத்திற்கு அந்த பொருளை கிழிக்காமலோ,வேறு ஒட்டுதல் எதுவும் செய்யாமல் மாற்ற முடியும். உதாரணத்திற்கு காபி கோப்பையும் ஓட்டை போட்ட வடையும் இடவியலில் ஒன்று தான்.எப்படி ஒன்றாகிறது என்பதை இங்கே பார்க்க.(நன்றி விக்கிபீடியா)
ஏனெனில் ஒன்றிலிருந்து மற்றொன்றை ஒரு தொடர் சார்பின் (continuous mapping) மூலம் பெறமுடியும்.காற்று போன, நசிங்கிய மற்றும் நல்ல அழகான விளையாட உபயோகிக்கும் பந்தும் ஒன்று தான்.




மேலும் ஒரு பந்தை எடுத்து அதில் ஒரு சிறிய வட்டம் வரைவோம். அதே போல் மேலும் ஒரு பெரிய வட்டம் வரைந்தால், அந்த சின்ன வட்டத்தை பெரிதாக்கி பெரிய வட்டத்தை கொண்டு வந்த முடியும்.அதே நேரத்தில் ஒரு சைக்கிள் டூபில் (cycle tube) வேறுவேறு விதமான ஒன்றிலிருந்து மற்றொன்று பெற முடியாத வட்டங்கள் வரைய முடியும். இடவியலில் பந்தும், சைக்கிள் டூபும் ஒன்றல்ல. ஆனால் சைக்கிள் டூபு,ஓட்டை வடை மற்றும் காபி கோப்பை எல்லாம் ஒன்று தான். இப்படி பொருட்களின் மேற்பரப்பு (surface) பற்றி ஆராயும் போது ஓர் இயற்கணித (algebraic) முறையை மிக அழகான முறையில் கண்டறிந்து இயற்கணித இடவியல் என்ற புதிய கணிதப் பிரிவை தோற்றுவித்தார் சேரே (Serre).

எண்கணிதக் கோட்பாட்டில் அவருடைய பங்கைப் பற்றி அடுத்த இடுகையில் பார்க்கலாம்.

திங்கள், 17 மே, 2010

இந்த வாரக் கணக்கு - 25


நவீன் 3 செமீ, 4 செமீ மற்றும் 6 செமீ அளவுகள் கொண்ட குச்சிகளை வைத்து ஓர் அழகான முக்கோணம் செய்தான். ஆனால் குச்சியின் அளவுகள் 3 செமீ, 4 செமீ மற்றும் 7 செமீ இருந்த போது முக்கோணம் அமையாமல் திடுக்கிட்டான். பிறகு அதன் காரணத்தை உணர்ந்தான்.சிறிது நாட்களுக்குப் பிறகு பதினோரு குச்சிகளை செய்தான்.அதில் எந்த மூன்று குச்சிகளை எடுத்து முக்கோணம் அமைக்க முயன்றாலும் அது முடியவே இல்லை. அவனிடம் இருந்த இந்த 11 குச்சிகளில், 11 வது குச்சியின் மிகச் சிறிய அளவு என்னவாக இருக்கும்?

செவ்வாய், 11 மே, 2010

நோபெலும், ஏபலும், கணிதமும் மற்றும் பரிசுகளும் - I

கணிதத்திற்கு நோபெல் பரிசு இல்லை என்பது நமக்கு தெரிந்ததே. ஆனால் அதற்கு இணையான மற்றொரு பரிசு கணிதத்திற்காக 2002 ஆம் ஆண்டிலிருந்து கொடுக்கப்படுகிறது. அது ஏபல் (Abel) என்ற கணிதமேதையின் பெயரில் வழங்கப்படுகிறது. இதைத் தவிர பீல்ட்ஸ் மெடல் (Fields Medal) என்ற பரிசும் 1936 ஆம் ஆண்டிலிருந்து நான்கு வருடத்திற்கு ஒரு முறை கொடுக்கப்படுகிறது. இதையும் நோபெல் பரிசின் இணையாகக் கருதுகிறார்கள்.ஆனால் இதைப் பெறுபவரின் வயது நாற்பதிற்குள் இருக்க வேண்டும்.இதைப் பற்றி மேலும் இந்த தொடர் பதிவில் பார்க்கலாம். 2010 ஆம் ஆண்டிற்கான இந்த பரிசு ஜான் டேட் (John Tate) என்ற கணித மேதைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜான் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 36 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அவருக்கு வயது 85. இந்த பரிசின் மூலம் அவருக்கு ஒரு மில்லியன் டாலர் பணமுடிப்பு கிடைக்கும். அதைவிட இந்த பரிசினால் கிடைக்கும் பெருமை அளவிட முடியாதது. இவர் கணிதத்தில் புரிந்துள்ள சாதனைகளை பார்ப்பதற்கு முன் ஏபல் மற்றும் ஏபல் பரிசைப் பற்றி பார்க்கலாம்.



ஏபல் 1802 ஆம் ஆண்டு நோர்வே நாட்டில் பிறந்தவர். மிகவும் வறுமையான வாழ்கை. இருந்தாலும் கணிதத்தில் அளப்பரிய ஆவல் மற்றும் திறமை. வாழ்ந்தது 26 ஆண்டுகளே. ஆனால் கணிதத்தில் பல முக்கியமான கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர். கல்லூரியில் கணிதம் படித்தவர்கள் இவர் பெயரை அறியாமல் இருந்திருக்க முடியாது. எல்லா இயல் எண்களுக்கும் ஈறுருப்புக்கோவைத் தேற்றம் (Binomial Theorem) உண்மையே என்ற நிரூபணத்தை கொடுத்தார். ஐந்துபடி சமன்பாட்டுக்கு (Quintic Equation ) பொதுவான இயற்கணிதத் தீர்வு (algebraic solution) கிடையாது என்ற பங்களிப்பு கணிதத்தில் மிக முக்கிய முடிவாகவும் மற்றும் இவருடைய கணிதக் கண்டுபிடிப்புகளில் மகுடம் சூடுவதாகவும் இருக்கிறது.இந்த ஐந்துபடி சமன்பாட்டுக்கு பொதுவான இயற்கணிதத் தீர்வு உண்டா அல்லது இல்லையா என்று கண்டறிய பல நூற்றாண்டுகளாக கணித மேதைகள் முயற்சி செய்து வந்தார்கள். அதாவது ax^2+bx+c=௦ 0 என்ற இருபடி சமன்பாட்டுக்கு (quadratic equation)



என்ற தீர்வு காணும் முறையை பள்ளியில் படிக்காமல் தப்பித்திருக்க முடியாது. அதே போல் ax^3+bx^2+cx+d=௦௦௦ 0 என்ற மூன்றுபடி சமன்பாட்டுக்கு




என்பது தீர்வாகும்,(இதை மனப்பாடம் செய்ய முயற்சிக்க வேண்டாம். இதைக் கண்டு பிடித்தவர் கார்டானோ [Cardano] என்பவர்.) இதேபோல் நான்குபடி சமன்பாடுக்கும் தீர்வு காண முடியும். அது மிகவும் சிக்கலான சூத்திரமாகையால் இங்கு கொடுக்கவில்லை. ஆனால் இதேபோல் ஒரு தீர்வு ஐந்துபடி சமன்பாடுக்குக் கிடையாது என்று ஏபல் நிறுவியது கணித வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இதை நிரூபிக்க முயற்சித்த போது குலக் கோட்பாடு (Group Theory) என்ற புதிய கணிதப் பிரிவை தொடங்கி வைத்தார்.

இவர் 1829 ஆம் ஆண்டு காச நோயால் மரணமடைந்தார். 26 ஆண்டுகள் வாழ்ந்தாலும், என்ன ஒரு வாழ்க்கை. இப்படிப் பட்ட ஒரு மேதை தோன்றியதை நினைத்து மகிழ்வதா அல்லது இயற்கை விதிகளை நிந்திப்பதா?

விடுவதாக இல்லை...