திங்கள், 24 ஜனவரி, 2011

ஸ்பெக்ட்ரமும், சு.ரா.வின் கவிதையும்

ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று ஒன்று இல்லவே இல்லை என்று கூறும் கபில் சிபல் மற்றும் அவரோடு தோளோடு தோள் கொடுக்கும் தோழர்களுக்கும் இந்த சுராவின் கவிதைக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. சு.ரா. இந்தக் கவிதையை எழுதியது போன நூற்றாண்டில்.




நடுநிசி நாய்கள்

இந்த நடுநிசி நாய்கள்
இருள் விழுங்குகையில்
தொண்டையில் சிக்கிக்
கத்திச் சாகின்றன.

தரை வெளுத்ததும்
பாதையோரம்
குனிந்த தலை குனிந்தபடி
மோப்பக் காற்றில் தூசிபறக்க
சாபத்தின் ஏவல்போல்
மனித மலங்கள்
தேடித் தெரிகின்றன.

கருப்பு விதைகாட்டி
பிட்டி சிறுத்துக் குலுங்க,
வெட்கம் கெட்டுத்திரியும்
இந் நடுநிசி நாய்களுக்கு
ஓய்வில்லை.
உறக்கமும் ஓய்வாக இல்லை.
கைஉயர்த்திப் பாசாங்கு காட்டும்
பள்ளிச் சிறுவனிடம் பயங்கொண்டு
இந் நடுநிசி நாய்கள்
பின்னங் காலிடை நுழையும் வாலை
வாய்கொண்டு பற்றி இழுத்து
பயங்கொண்டு வால்நின்று சாகின்றன.

முற்பகலில் மனம் மூட்டமடைய
நினைவுகளால் துக்கம் தேக்கி
சிறிது வலுச்சண்டை கிளப்பி
கடித்துக் குதறி
ரத்தம்கண்டு ஆசுவாசம் கொள்கின்றன.

பிற்பகல் ஒளிவெள்ளம்
பார்வையைத் தாக்க
இலைகளின் நிழல்கள் முதுகில் அசைய
சற்றே கண்மயங்கிக் கிடக்கின்றன.

மாலையில் கண்விழித்து
நால்திசையும் பார்வை திருப்பி
உறக்கத்தில் சுழன்ற உலகம் மதித்து
எழுந்து சோம்பல் முறித்து நீட்டி நிமிர்ந்து
தேக்கிய சிறுநீர்
கம்பந்தோறும் சிறுகக் கழித்து
ஈக்கள் மேல்வட்டமிட்டுப் பின்தொடர
மாலை நடை செல்கின்றன.

அந்தியில் புணர்ச்சி இன்பம்
(ஒரு தடவை அல்லது இரு தடவை)
மீண்டும் நடுநிசியில் இருள் விழுங்கித்
தொண்டை சிக்கக் கத்தல்.


நன்றி: சுந்தர ராமசாமி கவிதைகள் காலச்சுவடு பதிப்பகம்.

திங்கள், 10 ஜனவரி, 2011

வாங்க விரும்பும் புத்தகங்கள் - புத்தகக் கண்காட்சி

சென்னையில் இருந்திருந்தால் கட்டாயம் குறைந்த பட்சம் கீழே உள்ள புத்தகங்களாவது வாங்கி இருப்பேன். udumalai .com அல்லது வேறு பதிப்பார்களுடன் பேசி seamail (ஷிப்பிங் பணம் குறையும்) மூலம் வாங்க முயற்சிக்கிறேன். வேறு எதாவது நல்ல புத்தகம் நீங்கள் வாங்கி இருந்தால் சிபாரிசு செய்யுங்களேன்.



புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்

தண்ணீர் - அசோகமித்திரன்

நினைவுப் பாதை - நகுலன்

அபிதா, - லா.ச.ரா

ஜனனி - லா.ச.ரா

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

அம்பை சிறுகதைகள்

ஏழாம் உலகம் - ஜெயமோகன்

இன்றைய காந்தி - ஜெயமோகன்

பின்தொடரும் நிழலில் - ஜெயமோகன்
காடு - ஜெயமோகன்

திசைகளின் நடுவே - ஜெயமோகன்

நாவல் (கோட்பாடு) - ஜெயமோகன்

ரப்பர் - ஜெயமோகன்

குழந்தைகள் ஆண்கள் பெண்கள் - சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி கவிதைள்

ஜி.நாகராஜன் ஆக்கங்கள் (முழுத் தொகுப்பு)


யுவன்சந்திரசேகர் சிறுகதைகள்


முதல் 74 கவிதைகள் - யுவன்சந்திரசேகர்




கல்யாண்ஜி கவிதைகள்




ஞானக்கூத்தன் கவிதைகள்




தேவதேவன் கவிதைகள்




பிரமிள் கவிதைகள்




புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும். - வல்லிகண்ணன்

பூமணி பிறகு


வெட்டுப்புலி - தமிழ்மகன்

விமலாதித்த மாமல்லன் கதைகள்

வெங்கட் சாமிநாதன் எழுதிய எல்லா புத்தகங்களும்

வியாழன், 6 ஜனவரி, 2011

வைதீஸ்வரனின் கவிதை

இந்தக் கவிதை பிடித்திருந்தால் தயவு செய்து இப்போது நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் வாங்கி படித்து மகிழவும்.

கால் மனிதன்; (கவிதைத் தொகுப்பு) எஸ். வைதீஸ்வரன், சந்தியா பதிப்பகம்

பரிசு

நெருங்கியவன்

தெரிந்த முகம் என்று

சிரித்து விட்டேன்

மிகச் சிநேகிதமாய். பதிலுக்கு

அவனும் சிரித்துவிட்டான்

நாகரீகமாய்


கடந்த பின் தான்

புரிந்தது.. அவனை

அறிந்தவன் நான் இல்லையென்று


எறிந்த சிரிப்பை மீண்டும்

திரும்பி வாங்க சாத்தியமில்லை


இருந்தாலும்

அறிமுகமற்ற மனிதனிடம்

அன்பு காட்ட முடிந்தது

இன்று ஒரு நல்ல ஆரம்பம் தான்

தவறுதலாக் இருந்தாலும் கூட.

கிறிஸ்டினா ரோச்செட்டி கவிதை


Christina Rossetti ஓர் ஆபூர்வமான கவிஞர். அவரின் இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்தது. இதன் ஆங்கில வடிவம் இங்கு படிக்கலாம். இங்குள்ள புகைப்படமும் அங்கிருந்து சுட்டதது தான். இந்தக் கவிதையைப் படிக்கும் போதல்லாம் விதவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றுகிறது. உங்கள் மனதில் தோன்றுவதைப் பகிர்ந்து கொள்ளலாமே?

கடினமான ஏற்றம்

அந்தப் பாதை இறுதி வரை ஏற்றதை நோக்கி வளைகிறதா?
ஆமாம் இறுதி நுனி வரை
நாளின் பயணம் அந்த நீளமான நாளின் முழுமையும் எடுத்துக் கொள்ளுமா?
நண்பா, காலையிலிருந்து இரவு வரை

இரவு ஓய்வு எடுப்பதற்கு ஓர் இடமிருக்கிறதா?
மெதுவாக இருள் சூழும் நேரத்திற்கு ஒரு கூரை
வெளிச்சமின்மை என் முகத்திலிருந்து அதை மறைத்து விட்டால்?
அந்த விடுதியை நீ தவற விடமுடியாது.

இரவில் மற்ற வழிப் போககர்களை சந்திப்பேனா?
எல்லோரும் முன்னால் சென்றவர்கள்.
கண்ணில் படும் போது கதவைத் தட்டவா இல்லை கூப்பிடவா? .
அவர்கள் உன்னை கதவின் அருகில் நின்று கொண்டிருக்க விடமாட்டார்கள்.

பயணக் களைப்பும், அயர்ச்சியும் நீங்க எனக்கு ஆறுதல் கிடைக்குமா?
உழைப்பின் கூட்டுத் தொகையை கண்டறியலாம்.
மற்ற நாடுபவர்களுக்கும், எனக்கும் அங்கு படுக்கைகள் இருக்குமா?
ஆமாம், வருபவர்கள் எல்லோருக்கும் அங்கு படுக்கைகள் உண்டு.

சனி, 1 ஜனவரி, 2011

எறும்பும் எழுத்தாளனும்


சுறுசுறுப்பாக என்ன செய்கிறாய்
என்று கேட்டான் எழுத்தாளன்
எறும்பைப் பார்த்து
"உணவு சேகரிக்கிறேன்
என்றது எறும்பு"

சேகரித்த உணவை என்ன
செய்வாய் என்றான் எழுத்தாளன்
"எறும்புகள் எல்லோரும் பகிர்ந்து
உண்டு விடுவோம் என்றது எறும்பு".

நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என்று எறும்பு கேட்டது
எழுத்தாளனை
"இலக்கியத் தரமான எழுத்தை
தேன் தமிழில்
எழுதிக் கொண்டிருக்கிறேன்
என்றான் எழுத்தாளன்".



எழுதி எழுதி என்ன
செய்யப்போகிறாய் என்றது எறும்பு
"நான் தான் படிக்கணும்
என்றான் எழுத்தாளன்".

ஒருமை



கோடான கோடி நட்சத்திர
நண்பர்கள் வெற்றிக் களிப்பு
இருள் கவிகிறது.




உக்கிரத்துடன் விரட்டுகிறது
வெப்பம் கக்கி இருளை
சூரியக் கதிர்கள்.
இருளும் ஒளியும் வேறுவேறா?

மறைவதற்கு உதிக்கிறது
உதிக்க மறைகிறது.
உதிப்பது மறைவது வேறுவேறா?

நாள்தோறும் நடக்கும்
இந்தப் போட்டி
வெற்றி தோல்வி
தோல்வி வெற்றி
வெற்றி தோல்வி வேறுவேறா?

எத்தனை காலம் இந்த
விளையாட்டு
வென்றாலும் வருத்தமில்லை
தோற்றாலும் மகிழ்ச்சி
வருத்தம் மகிழ்ச்சி வேறுவேறா?

வேறு தான் ஒன்றா?
ஒன்று தான் வேறா?