திங்கள், 29 டிசம்பர், 2008

பணம் படுத்தும் பாடு

"பொருளில்லார்க்கு இவ்வுலக மில்லை" என்று திருவள்ளுவர் கூறினார். ஆனால் இந்த பொருள் படுத்தும் பாடு சொல்லி முடியாது. பணம் சேமிக்க வேண்டும். நியாயம் தான். அந்த பணத்திற்கு அதிக வட்டி கிடைக்க வேண்டும்.குறுகிய காலத்தில் பணத்தை பல மடங்கு ஆக்க வேண்டும் என்ற எண்ணம். இந்த பேராசையின் விளைவு உள்ளதும் போய் மிஞ்சுவது துன்பமும்,வருத்தமும் தான்.பலருக்கு 1995-1996ம ஆண்டில் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியின் போது காளான் போல் முளைத்த தனியார் முதலீடு நிறுவனங்கள் நினைவிலிருக்கும்.அதனால் சீரழிந்த குடும்பங்கள் கணக்கில் அடங்கா. அதே போல் இன்று உலகளவில் ஒரு பெரிய பண மோசடி வேலை நடந்திருக்கிறது.இந்த மோசடியின் வில்லன் "பெர்னார்ட் மெடாப்"(Bernard Medoff)..இன்று இணையத்தில் அதிகமாக உலா வரும் இரண்டு பெயர்கள் "சார்லஸ் பாஞ்சி"(Charles Ponzi)மற்றும் "பெர்னார்ட் மெடாப்"(Bernard Medoff). மெடாப் இந்த மாதம் 11ம் தேதி நியூயார்க்கில் கைது செய்யப் பட்டார். இவர் "மெடாப் முதலீடு பாதுகாப்பு" நிறுவனத்தின் தலைவர். இவர் செய்த குற்றம் உலகின் பலதரப்பட்ட முதலீட்டாளர்களை 50 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி)டாலர்கள ஏமாற்றி இருக்கிறார்.இது எப்படி முடிந்தது என்பதின் பிண்ணணியை பார்ப்போம்.

1960௦ம் ஆண்டு மெடாப் பங்குகளை வாங்கி விற்கும் ஒரு சிறிய நிறுவனத்தை ஆரம்பித்தார். 1970௦ களின் மத்தியில் சின்சினாட்டி பங்கு சந்தையை 21/௨ லட்சம் டாலர் செலவில் கணணி மயமாக்கினர். 1989ம் ஆண்டில் அவருடைய நிறுவனம் நியூயார்க் பங்கு சந்தையில் கிட்டத்தட்ட 5% பங்குகளை வாங்கி விற்கும் நிறுவனமாக உயர்ந்தது.கணணி மயத்தின் பலனால் நியூயார்க் பங்கு சந்தையில் பங்குகளை வாங்கி விற்பதை விரைவாகவும்,குறைந்த செலவிலும் செயல் படுத்த முடிந்தது.அதனால் மெடாபின் புகழ் பொருளாதார வர்த்தகத் துறையில் விரிவடைந்தது.மெடாப் ஒரு யூதர். யூத தொண்டு நிறுவனங்களுக்கு அதிகமாக நிதியுதவி கொடுத்து வந்தார்.பல யூத தொண்டு அமைப்புகள் மெடாப் நிறுவனத்திற்கு அதிக அளவிற்கு பண முதலீடு செய்தன.மெடாப் மீது நம்பிக்கை வைத்திருந்த வக்கீல்கள்,டாக்டர்கள் மற்றும் அக்கௌன்ட்டென்ட்கள் மூலமாக மேலும் மூதலீடுகள் வந்து குவிந்தன.சில பல்கலைகழகங்களும் பணத்தை இவர் நிறுவனத்தில் மூதலீடு செய்ததை விதி என்று தான் கூற வேண்டும்.அமெரிக்கா மட்டுமில்லாமல் உலகின் பல நாடுகளில் இருந்து வந்த மூதலீடுகள் ஏராளம். ஆண்டிற்கு 10% முதல் 12% வரை முதலீட்டின் பெருக்கம் இருந்தது. பொருளாதாரம் நன்றாக இருந்தாலும் இல்லையென்றாலும் இந்த அளவு முதலீட்டின் மதிப்பு உயர்ந்தது எல்லோரையும் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இதைப் பற்றி மெடாப் "என் நிறுவனத்திற்கே உரிய தொழில் முறை ரகசியம். வெளியில் சொல்ல முடியாது" என்று கூறி கேள்வி கேட்டவர்களை சமாதான படுத்திவிட்டார்.நம்பக்கூடிய வகையில் பொய்யான கணக்கு விவர அறிக்கையை (account statement) மூதலீடாளர்களுக்கு அனுப்பினார்.மேடாபின் நம்பகத் தன்மை பல மடங்கு உயர்ந்தது. பணம் பண்ணத் தெரிந்த ஒரு பண்பாளர் என்ற உருவம் (இமேஜ்) அவருக்கு கிடைத்தது. உலக நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் இருந்து வங்கிகள், மூதலீட்டு நிறுவனங்கள் மூலம் பண மழை பெய்தது. இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அமெரிக்கா பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டது. கடன் கிடைப்பது அரிதானது.மெடப்ப் நிறுவனத்தில் மூதலீடு செய்வது பெருமளவில் குறைந்தது.அதே சமயத்தில் மூதலீடாளர்களுக்கு கையிருப்பில் பணமாக தேவைப்பட்டது. ஒரே நேரத்தில் பல முதலீட்டாளர்கள் ஏழு பில்லியன் டாலர் பணத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கினர். மேடாபிற்கும் அவர் நிறுவனத்திற்கும் பெரும் சிக்கல் உண்டானது.பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.மெடாப் தன் மகன்களிடம் தான் நடத்தி வந்தது "பாஞ்சீ திட்டமுறை" (Ponzi scheme) என்று ஒத்துக் கொண்டார்.

பாஞ்சீ திட்டமுறை என்பது முதல் சில மூதலீடாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்து நம்பக தன்மையை ஏற்படுத்தி, அதிக முதலீட்டையும்,மூதலீடாளர்களையும் கவர்வது.பின்னால் வரும் மூதலீட்டை வைத்து முன்னால் மூதலீடாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பது.இந்த முறையில் மூதலீடு தொடர்ந்து வந்த வண்ணம் இருக்க வேண்டும்.இது நடை முறையில் சாத்தியமில்லை.இதை தான் மெடாப் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் செய்து வந்தார்.இதன் தோல்வியில் தனிமனிதர்கள்,தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பெருமளவில் பணத்தை இழந்தன.ஏழைகளுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களின் பண இழப்பு தான் மிகவும் வருத்தம் தரக் கூடியது. எந்த தவறிலும் முழுவதும் பாதிக்க கூடியவர்கள் ஏழைகள் தான் என்பது மீண்டும் நிறுபனமாகி உள்ளது.இங்கிலாந்து,ஸ்பெயின்,ஜப்பான் போன்ற பல நாட்டு நிறுவனங்களின் இழப்பு பல பில்லியன் டாலர்களாக கணக்கிடப் பட்டுள்ளது.மெடாப் நியூயார்க்,ப்ளோரிடா,பிரான்ஸ் என்று பல இடங்களில் சொகுசு பங்களாக்களை வாங்கி அனுபவித்திருக்கிறார். பெரிய எல்லா வசதிகளும் கொண்ட படகு வாங்கி அதில் சமுதாயத்தின் முக்கிய புள்ளிகளுக்கு ஆடம்பரமான விருந்து கொடுத்து தனது நிறுவனத்திற்கு போதுமான அளவில் மூதலீடை பெற்றிருக்கிறார்.இன்றுள்ள இவருடைய சொத்தின் மதிப்பு 15 பில்லியன் என்று கணக்கிடப் பட்டுள்ளது.70 வயதான இவர் தண்டிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும்.இவரின் இந்த செயல் பல விடை காண முடியாத கேள்விக்களை எழுப்பியுள்ளது.

பங்குச் சந்தை பரிமாற்ற பாதுகாப்பு ஆணைக்குழு (securities exchange commission - SEC) என்ற அமெரிக்கா அரசின் நிறுவனம் தான் இதை போல நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும். 1999ல் இருந்து வந்த குற்றச் சாட்டுகளை சரியாக விசாரிக்கவில்லை இந்தநிறுவனம்.மேலும் SEC 2005 மற்றும் 2007 ஆண்டுகளில் "ஆடிட்" செய்து, மெடாப் நிறுவனத்தின் கணக்கில் எந்த குறையுமில்லை என்று சான்று கொடுத்தது.இதை உலகே ஆச்சிரியமாக பார்க்கிறது. SECன் தலைவர் கிறிஸ்டோபர் காக்ஸ் "இந்த குற்றம் எப்படி நடந்தது என்றே தெரியவில்லை" என்று கூறி இருக்கிறார்.முழு விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. புஷ் அரசு நிர்வாகம் செயல்பட்ட லட்சணத்திற்கு மேலும் ஒரு சாட்சி.இதில் வெளிநாட்டு அரசுகளின் மூதலீடு மேற்பார்வை அமைப்புகளின் மீதும் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தான் தனி மனிதனாக இந்த குற்றத்தை செய்ததாக மெடாப் கூறியுள்ளார். இது நம்பக் கூடியதாக இல்லை.போகப் போக தெரியும்.

இது போல் தவறுகள் நடக்க மூதலீடு செய்யும் பொது மக்களும், மூதலீட்டு நிறுவனங்களும் தான் காரணம். பொது மக்கள் விழிப்புணர்வு மிகவும் முக்கியம்.நண்பன் சொன்னான், மாமன் சொன்னார் என்று மூதலீடு செய்வது பெரிய தவறு. நடைமுறைக்கு ஒத்து வராத வட்டி விகிதங்கள் அறிவிக்கும் நிறுவனங்களை முழுவதும் நிராகரிக்கப் பட வேண்டும். இந்த மாதிரி குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும். பொருளாதார தாராள மயமாக்கப் பட்ட இன்றைய உலகில் பணம் உலகம் முழுதும் புழங்கும் போது,இழப்பும் உலகளவில் பரவி இருப்பது தவிர்க்க முடியாதது.மிகவும் உலகில் நம்பகத் தன்மை குறைந்து வருவதற்கு மேலும் ஓர் உதாரணம்.

பணம் படுத்தும் பாடு

சனி, 27 டிசம்பர், 2008

ஜன்னல் வழியே


பசுமையான நாட்களை நினைத்து

உருகிக் காயும் உதிர்ந்த இலைகள்

துளிர்விடும் நாள் தொலைவில் இல்லை

என்ற நம்பிக்கையில் கிளைகள்

நிர்வாணமான கிளைகள் மேல்

மோகத்தில் பெய்யும் பனிமழை

பூமியின் பந்தத்தால் கட்டுண்ட வேர்கள்

ஜன்னல் வழியே பார்க்கும் அவன்

ஜன்னல் வழியே

டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள் - 2

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் பந்தில் ஆட்டத்தின் முடிவை எதிர் நோக்கி இருக்கும் ரசிகர்களின் மன நிலையில் காத்திருந்த தேடிரோஇட் மக்களை மகிழ்விக்கும் விதமாக வெளி வந்தது புஷ்ஷின் ஜெனரல் மோட்டார்ஸ் (ஜி.எம்) மற்றும் க்ரச்லேர் நிறுவனங்களுக்கான 13.6 பில்லியன் அரசின் கடனுதவி.மேலும் 4 பில்லியன் டாலர்கள் கடனாக பெறவும் வழி செய்யப்பட்டுள்ளது.அந்தமுடிவை வரப்போகும் அதிபர் ஒபாமாவிடம் புஷ் ஓப்படைத்திருக்கிறார். மார்ச் 15ம் தேதிக்குள் எடுத்த,எடுக்கப் போகும் நடவடிக்கைகளை அரசிடம் இந்த இரு நிறுவனங்களும் சமர்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் அரசின் எதிர்கால முடிவுகள் அமையும். ஆனால் அதனுடன் வந்த கட்டுப்பாடுகள் கடுமையானவை.குறிப்பாக ஆட்டோ தொழிலாளர்களின் கூட்டமைப்பு தனது ஊழியர்களின் ஊதியத்தை அமெரிக்காவிலுள்ள ஜப்பானிய கார் நிறுவனங்களின் ஊதியத்திற்கு சமமாக மாற்றுவது, உதிரி பாகங்கள் அளிக்கும் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கு பதிலாக முடிந்தளவு பங்குகளை கொடுப்பது, தன்னுடைய கடனை 2/3 பங்காக குறைப்பது,நடைமுறை செலவினங்களை கட்டுப் படுத்துவது முதலானவை முக்கியமானவைகள்.,."வேலை வங்கி" என்ற பல ஆண்டுகளாக தொழிலாளர்கள் அனுபவித்து வரும் சலுகையை முழுவதும் விட்டுக் கொடுக்க வேண்டும்.வேலை வங்கி என்பது வேலை இல்லாத போதும் பாதிக்கப் பட்ட தொழிலாளர்கள் 90% ஊதியத்தை பெறுவது.

ஜி.எம் க்கு 13,6 பில்லியனில் 9.6 பில்லியன் டாலர்கள் கிடைத்துள்ளது.உடனடியாக தொழிலாளர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை தொடங்கி சென்ற ஆண்டு செய்து கொண்ட ஓப்பந்தத்தை மீண்டும் பரிசீலனை செய்ய உள்ளதாக ஜி.எம் இன் தலைமை நிர்வாக அதிகாரி ரிக் வெக்னர் கூறியுள்ளார். தொழிலாளர்கள் எந்த அளவிற்கு தியாகத்திற்கு தயாராக இருப்பார்கள் என்று தெரியவில்லை.சென்ற ஐந்து ஆண்டுகளில் இந்த கூட்டமைப்பில் 1 1/௨ லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள்.மேலும் புதிதாக வேலைக்கு சேரும் தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 14 டாலர் என்று ஊதியம் நிர்ணயம் செய்ய கூட்டமைப்பு சென்ற ஆண்டு ஒத்துக் கொண்டது.தொழிலாளர்களின் மன வலியை இரும்புத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் லியோ ஜெரல்ட் "வேலைக்கு போகும் முன் குளிப்பவர்களுக்கு அமெரிக்கா அரசு உதவும்,ஆனால் அதையே வேலைக்குப் பிறகு குளிப்பவர்களுக்கு செய்யாது" என்று தெரிவித்துள்ளார்.ஜி.எம் நான்கு வர்த்தகக் குறிகளை (brands) விற்கவும் முடிவுசெய்துள்ளது.மேலும் தற்போதுள்ள 96000 தொழிலாளர்களின் எண்ணிக்கையை 66000 ஆக குறைக்க முடிவு செய்துள்ளது.

இந்த கடனுதவியால் ஜி.எம் மீண்டும் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.ஜி.எம் இன் பங்குகள் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது.ஒரு வேளை ஜி.எம் திவாலானால், அரசு கொடுத்த கடன் பணம் கூட திரும்ப வருவதற்கு சாத்தியமில்லை. இந்த நிறுவனத்தில் பங்குகள் வைத்திருப்பவர்களுக்கும் "வெறும் கை வெங்கட்ராமா" என்ற கதை தான்.

ஆனால் இந்த கெட்ட நேரத்திலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது.GMAC என்ற ஜி.எம் இன் கார்களுக்கு கடனுதவி வழங்கும் நிதி நிறுவனத்தை வங்கிகள் போல் பாவிக்க வேண்டும் என்று அரசிடம் கோரி இருந்தது. அதனை அரசு ஏற்றுக் கொண்டு அறிவுப்பு வெளியிட்டுள்ளது.அதனால் அமெரிக்கா அரசினால் சிக்கலில் தவிக்கும் நிதி நிறுவனங்களுக்கு ஓதுக்கப் பட்ட 700 பில்லியன் டாலர் பணத்திலிருந்து ஒரு குறிப்ப்பிட்ட தொகை கிடைக்கும் நிலை உள்ளது. இதனால் இந்த நிதி நிறுவனம் திவாலாகி விடுவதில் இருந்து காப்பாற்றப் பட்டுள்ளது.மேலும் ஜி.எம் கார்கள் வாங்குபவர்களுக்கு கடனுதவி அளிக்க முடியும். அதன் விளைவாக கார்களின் விற்பனை சரிவை தடுக்க ஏதுவாகும்.இதன் பயனாக ஜி.எம் இப்போது ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சரிவிலிருந்து மீளும் சிறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

போர்ட் நிறுவனம் எந்த நிதி உதவியும் தற்போது தேவையில்லை என்று அரசிடம் கூறியுள்ளது. 2006ம் ஆண்டிலேயே தன்னுடைய சொத்துக்களை அடமானம் வைத்து கிட்டத்தட்ட 23 பில்லியன் டாலர்கள் கடனாகப் பெற்றது. அதை அன்று கேலி செய்தவர்கள் இன்று போர்ட் புத்திசாலிதனமாக செயல் பட்டதாக கூறுகின்றன.அடுத்த வருடம் அமெரிக்காவில் கார்களின் விற்பனை 20% குறையும் என்று கணிக்கப் பட்டுள்ளது.அந்த அளவிற்கு உற்பத்தியை குறைக்கவும், செலவினங்களை குறைத்தும் செயல்பட போர்ட் தயாராக இருப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அலன் முல்லாலே கூறியுள்ளார். இருந்தாலும் எந்த எதிர்பாராத சூழ்நிலையை சமாளிக்க அரசிடம் 10 பில்லியன் டாலர்கள் கடன் பெறும் வசதியை கோரியுள்ளது.மேலும் 2009 மற்றும் 2010௦ம் ஆண்டுகளில் போர்ட் வெளியிட உள்ள புதிய கார்கள் தரமானதாகவும்,பெட்ரோலை குறைவாக உபயோகிப்பதாகவும் உள்ளது. இந்த கார்கள் வாடிக்கையாளர்களை போர்ட் பக்கம் திருப்பி இழுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இதனால் நூறு ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியமிக்க போர்ட் நிறுவனம் இந்த சிக்கலில் இருந்து மீண்டு லாபத்தை ஈட்டும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.

க்ரஸ்லெர் ஒரு தனியார் நிறுவனம். அதில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.4 பில்லியன் டாலர் கடனுதவி கிடைத்துள்ளது.கடன் கிடைத்துடனேயே அதனை திருப்பிக் கொடுப்பது கடினம் என்று அதனுடைய தலைமை நிவாக அதிகாரி நறேடெல்லி கூறியுள்ளார்.இந்த நிறுவனம் தனியாக செயல் பட்டு மீண்டும் லாப நோக்கத்துடன் திரும்புவது நடக்கக் கூடியதாகத் தெரியவில்லை. ஒன்று இந்த நிறுவனம் திவலாகவோ அல்லது வேறு நிறுவனத்துடன் இணைவதோ தான் எதிர் காலத்தில் நடக்கக் கூடியதாக அனுமானிக்க முடிகிறது.இந்த நிறுவனத்தின் சரித்திரத்தின் கடைசி அத்தியாயம் எழுதப் படுகிறதோ என்று தோன்றுகிறது.

அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்கவிருக்கும் ஒபாமா புஷ்ஷின் இந்த கடன் கொடுக்கும் முடிவை வரவேற்றுள்ளார். ஆனால் பதவி ஏற்றவுடன் ஒபாமா பலவிதமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். கார் நிறுவங்களின் தொழிலாளர் கூட்டமைப்பு தேர்தலின் போது அவருக்கு முழுமையான ஆதரவு கொடுத்தது நினைவிருக்கலாம். தொழிலாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளவும் முடியாது. அதே நேரத்தில் இந்த நிறுவனங்களின் செலவினங்களை குறைத்து லாப நோக்கத்துடன் செயல் படும் நிலையை உருவாக்க வேண்டும். மிகவும் கஷ்டம்தான். என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

தேட்டிரைட் மக்கள் வரும் புத்தாண்டை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மன அழுத்தத்துடன் எதிர்கொள்ளும் துரதிருஷ்டமான நிலையில் உள்ளார்கள்.

டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள் - 2

வெள்ளி, 19 டிசம்பர், 2008

டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள்

டேட்டிராயிட் கார் தொழிற்சாலைகளின் துயரம் தொடருகிறது. நவம்பர் ஏழாம் தேதி போர்ட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் என்ற இரண்டு நிறுவனங்களும் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பெரிய இழப்பு ஏற்பட்டதாகவும், ஜூலை,ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் 14.6 பில்லியன் டாலர் அளவு பணத்தை கையிருப்பில் இருந்து கரைத்ததாகவும் அறிவித்தது.கிர்ரைச்ளர் (Chrysler) என்ற மூன்றாவது நிறுவனத்தின் நிலையும் மிகவும் மோசமாக உள்ளது.இந்நிலைக்கு நிர்வாகக் கோளாறு,தொலைநோக்குப் பார்வை இல்லாதது, ஆட்டோ தொழிலாளர்கள் கூட்டமைப்பின் (United Worker's Union) செயல்பாடுகள், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான மருத்துவச் செலவுகள், ஓய்வூதியம் போன்ற பல காரணங்கள் முன் வைக்கப்படுகிறது. இதோடல்லாமல் ஆண்டு மத்தியில் கடுமையாக உயர்ந்த கச்சா எண்ணை விலை மற்றும் அமெரிக்கா பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவு இந்த நிறுவனங்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கி விட்டது.இந்த நிலையில் தான் அமெரிக்கா அரசாங்கத்தின் உதவியை நாடியது கம்பெனிகள்.


மூன்று கம்பெனியின் தலைமை நிர்வாகிகளும் இரண்டு முறை டேட்டிராயிட்யில் இருந்து வாஷிங்க்டனுக்கு யாசகம் கேட்டு படையெடுத்து ஆகிவிட்டது. முதல் முறை பண உதவி கிடைத்தால் அதை உபயோகிக்கும் முறைகளை பற்றி செனட் சபையில் சரியான விளக்கங்களை கொடுக்கத் தவறினார்கள். அதனால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளனார்கள் இந்த தலைமை நிர்வாகிகள்.முறையான செயல் திட்டத்துடன் வருமாறு திருப்பி அனுப்பப் பட்டனர். மீண்டும் டிசம்பர் 2ம் தேதி செயல் திட்டத்தை சமர்ப்பித்து, 34 பில்லியன் டாலர் பண உதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதில் ஜெனரல் மோட்டார்ஸ் இந்த ஆண்டு இறுதிவரை தான் கம்பெனியை நடத்த பணம் இருப்பதாக அறிவித்தது. உடனே அமெரிக்கா காங்கிரஸ் 15 பில்லியன் டாலர் உதவி கொடுப்பதற்கு வகை செய்யும் மசோதா ஒன்றை தயாரித்து அதற்கு புஷ்ஷின் ஆதரவையும் பெற்றது. பண உதவி மசோதாவை ஆதரிக்க ஆட்டோ தொழிலாளர்கள் கூட்டமைப்பு தன் தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்க, ஆள் குறைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகளை குடியரசுக் கட்சியினர் முன் மொழிந்தனர். அதனை தொழிலாளர் கூட்டமைப்பு முற்றிலுமாக நிராகரித்தது.மேலும் இந்த கம்பெனிகள் திவாலாகி விட்டோம் என்று அறிவித்து, கடுமையான சீர்திருத்தங்களை செய்து லாபத்தை அடைய வேண்டும் என்று பெரும்பாலான குடியரசுக் கட்சியின் செனேட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருதலானார்கள். அந்த மசோதா குடியரசுக் கட்சியனரின் ஆதரவு இல்லாததால் தோல்வியை தழுவியது. பணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த தொழிலாளர்களும், கம்பெனியின் நிர்வாகிகளும் பெரும் ஏமாற்றத்தை அடைந்தனர்.


ஒரு நாளைக்கு 200 மில்லியன் டாலர்கள் செலவு செய்யும் இந்த நிறுவனங்கள் "எதைத் தின்னால் பித்தம் தெளியும்" என்கிற பரிதாப நிலை.மசோதா தோல்வி அடைந்ததும், பொருளாதாரக் நிறுவனங்களின் சிக்கலை தீர்க்க அமெரிக்கா செனேட் அனுமதித்துள்ள 700 பில்லியன் டாலரில் இருந்து, 15 பில்லியன் பண உதவி செய்ய வேண்டும் என்று புஷ்ஷிடம் நேரடியாகக் கோரிக்கை வைக்கப்பட்டது.. புஷ்ஷும் அமெரிக்க நிர்வாகமும் இன்னும் முடிவெடுக்காமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. "ரோம் நகரம் எரியும் பொது நீரோ மன்னன் பிடில் வாசித்த" கதை தான்.இந்த நிறுவனங்களை திவாலாக விட்டால் அதனால் ஏற்படும் இழப்பு நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இந்த நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் அளிக்கும் பல தொழிற்சாலைகளில் வேலை இழப்பு ஏற்படும். இந்த தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள அத்தனை வியாபாரமும் பாதிக்கப்படும். பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்.ஏற்கனவே மூச்சு திணறிக் கொண்டிருக்கும் அமெரிக்கா பொருளாதாரம் மேலும் மோசமடையும். கனடாவிலும் வேலை இழப்பு பெரிய அளவில் இருக்கும்.திவாலான கம்பெனியின் கார்களை வாங்க மக்கள் முன் வர மாட்டார்கள். ஒரு கார் வாங்கினால் ஏழு முதல் பத்து வருடம் வைத்திருக்க நேரிடும். கார் உற்பத்தி செய்த நிறுவனமே இல்லை என்றால், உதிரி பாகங்கள் கிடைக்காது. அந்த காரை விற்க முடியாது என பல சிக்கல்கள்.


ஜப்பானில் இருந்து 1980ல் கார்களை இறக்குமதி செய்து வந்த நிறுவனங்கள், இன்று அமெரிக்காவிலேயே கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன. அவர்கள் நிலைமை மிகவும் மோசமாக இல்லை என்றாலும், உதிரி பாகங்கள் விநியோகிக்கும் நிறுவனங்கள் எல்லா கார் நிறுவனங்களுக்கும் பெரும்பாலும் பொதுவானவையே.அதனால் டேட்டிரோஇட் கார் நிறுவனங்களின் வீழ்ச்சி டொயோடா,ஹோண்டா மற்றும் நிசான் போன்ற நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும்.நிசான் நிறுவனம் ஜப்பானில் தன் உற்பத்தியை குறைக்கப் போவதாகவும்,500 தற்காலிக ஊழியர்களை இடை நீக்கம் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது. டொயோடா நிறுவனமோ ஜப்பான் மற்றும் இந்தியாவில் தன் விரிவாக்கத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. போர்ட் தன் தொழிற்சாலைகளுக்கு கிறிஸ்துமஸ் கால இரண்டு வார விடுமுறையை மூன்று வாரங்களாக நீட்டித்துள்ளது. கிர்ரைச்ளர் (Chrysler) ஒரு மாத விடுமுறையை அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் என்பது அமெரிக்காவின் முக்கியமான கலாச்சார திருவிழா. அதற்கு பரிசுப் பொருள்கள் வாங்கக் கூட பணமில்லாமல் தொழிலாளர்கள் அவதிப் படுகிறார்கள். முன்பெல்லாம் டேட்டிராயிட்ல் நண்பர்களைப் பார்த்தால் வேலை இருக்கிறதா என்று விசாரிப்போம். இன்று நிறுவனமே இருக்கிறதா என்று கேட்கும் நிலை.


இந்த கொடுமையான சூழ்நிலையை தற்காலிகமாக எதிர்கொள்ள புஷ் அரசு இந்த மூன்று நிறுவனங்களுக்கும் உடனடியாக பண உதவியை செய்ய வேண்டும். இடது சாரி,வலதுசாரி போன்ற மனப்பான்மையை மூட்டை கட்டி வைத்து, மனிதாபிமானத்துடன் அரசு செயல் பட வேண்டும். இந்த பண உதவியால் மூன்று கார் நிறுவனங்களின் பிரச்சனைகள் முழுவதும் தீர்ந்து விடாது. சிறிது மூச்சு விட நேரம் கிடைக்கும். மீண்டும் கிர்ரைச்ளர் (Chrysler) ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைவது குறித்து பேச்சு வார்த்தையை துவங்கி உள்ளது. கடுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்த நிறுவனங்கள் முன் வர வேண்டும். தரமான, பெட்ரோலை குறைந்த அளவில் பயன்படுத்தும், சுற்றுப் புற சூழலை அதிகம் பாதிக்காத, மிகவும் தரமான கார்களை உற்பத்தி செய்து மக்களை மீண்டும் கவர வேண்டும். தொழிலாளர் கூட்டமைப்பும் தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும். முழுவதும் வேலை இழப்பதை விட, சில சலுகைகளை விட்டு கொடுத்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுவது தான் விவேகம்.டேட்டிராயிட்ல் இன்றுள்ள மூன்று கார் நிறுவனங்கள் இரண்டாகவோ அல்லது ஒன்றாகவோ மாறுமா? இல்லை டேட்டிராயிட் "கார்களின் நகரம்" என்ற பாரம்பரியத்தை இழக்கும் காலம் வந்துவிட்டதா?



டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள்

வியாழன், 18 டிசம்பர், 2008

வைஷ்ணவ ஜனதோ

"வைஷ்ணவ ஜனதோ" என்ற காந்திக்கு மிகவும் பிடித்த குஜராத்தி புலவர் நரசிம்ம மேத்தா என்ற நரசையான் எழுதிய பாடலின் தமிழ் மொழி பெயர்ப்பு.

காந்தியின் ஆங்கில மொழி பெயர்ப்பில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தது

உண்மையான வைணவன்
ஒரு இயல்பான வைணவன் அவன் எண்ணங்களில்
அடுத்தவர் துன்பம் தன் துன்பமாகும்
அவன் சேவை செய்ய எப்போதும் தயாராக இருக்கிறான்,
அளவிற்கு அதிகமான பெருமையால்
ஒருபோதும் குற்ற உணர்வு இல்லாதவன்.
அவன் எல்லோருக்கும் தலை வணங்குபவன்,
யாரையும் வெறுக்காதவன்,
வார்த்தைகள் மற்றும் செயல்களிலும்
தூய்மையான எண்ணங்களை பாதுகாப்பவன்.
இப்படிப் பட்ட மகனின் தாய் ஆசிர்வதிக்கப்பட்டவள்
அவன் எல்லா பெண்களையும் தன் அன்னையைப் போல் வணங்குகிறான்.
அவன் வேறுபாடில்லாத சமநிலையை பாதுகாக்கிறான்
பொய்யால் அவனுடைய வாய் என்றும் கறை படாது
மேலும் அடுத்தவர் பொருளை தொடுவதும் இல்லை
பாசப் பிணைப்பால் கட்டிப் போட முடியாதவன்.
எப்பொழுதும் ராம நாமத்தில் இணக்கம்,
அவனுடைய உடம்பினுள்ளேயே எல்லா
திருத்தலங்களையும் சொந்தமாக்கிக் கொள்கிறான்.
அவன் ஆசை, ஏமாற்றம
விருப்பு, வெறுப்பு, சினம் இல்லாதவன்.

குஷ்வந்த் சிங் ஆங்கில மூலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தது.

கடவுள் போன்ற ஒரு மனிதன் என்பவன்,
அடுத்தவர்களின் வலியை உணர்பவன்
அடுத்தவர்களின் துன்பத்தை பகிர்ந்து கொள்பவன்
மேலும் பெருமையை வெறுப்பவன்
தன்னை அடியார்க்கு அடியாராக கருதுபவன்,
யாரைப் பற்றியும் ஒரு வார்த்தை கூட தீவினை பேசாதவன்
வார்த்தைகள், உடம்பு மற்றும் மனத்தால் சலனமில்லாமல் தீர்மானத்துடன் இருப்பவன்
அப்படிப்பட்ட பிள்ளையை பெறும் தாய் ஆசிர்வதிக்கப்பட்டவள்.
எல்லோரையும் சமமாக பாவிப்பவன், காமத்தை துறந்தவன்,
தன் தாயை கௌரவிப்பது போல் மற்ற பெண்களையும் மதிப்பவன்
அவன் நாக்கு இறுதி மூச்சு உள்ளவரை பொய்யின் சுவை அறியாது
அடுத்தவர்களின் உலக மோகப் பொருள்களை ரகசியமாக அடைய நினையாதவன்,
துறவின் பாதையில் நடப்பதால்
உலக மோகப் பொருள்கள் மேல் இச்சை இல்லாதவன்,
அவன் உதடுகளில் எப்பொழுதும் ராமனின் நாமம்.
எல்லா புனிதத் தலங்களையும் தன்னுள்ளே கொண்டவன்
பேராசை மற்றும் ஏமாற்றும் குணமற்றவன்,
காமத்தையும் சினத்தையும் வென்றவன்
அப்படிப்பட்ட மனிதன் மூலமாக துறவி நரசையானுக்கு கடவுளை ஒத்த தொலை நோக்குப் பார்வை இருந்தது,
அந்த மனிதன் வழியாக வருகின்ற தலைமுறைகள் அருள் பெறுவார்கள் என்று.

வைஷ்ணவ ஜனதோ

செவ்வாய், 9 டிசம்பர், 2008

மும்பை தாக்குதலும் பாகிஸ்தானின் நெருக்கடிகளும்

மும்பை நகரம் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாவது ஆண்டிற்கு ஒரு முறை வரும் நிகழ்வு போல் ஆகி விட்டது. இந்திய அரசின் மெத்தனப் போக்கு, பொறுப்பின்மை மற்றும் அலட்சியத்திற்கு மீண்டும் ஓர் எடுத்துக்காட்டு. தீவிரவாதம் தான் கடுமையாக எதிர்கொள்ள வேண்டிய நாட்டின் முக்கியப் பிரச்சனை என்று கூறி வந்த பிரதமர் நிர்வாகத் திறமையில்லாத சிவராஜ் படேலை உள்துறை அமைச்சராக தொடர்ந்து வைத்திருந்தது மன்னிக்க முடியாத குற்றம். கடல் வழியாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரிக்கைகள் இருந்தும் அதனை உதாசீனப் படுத்தியதின் விளைவு ௨00கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்சேதம். நாட்டின் பாதுகாப்புப் படை (NSG) சம்பவ இடத்திற்கு வருவதற்கு 10 மணி நேரம் தாமதம், தொலை நோக்கி (telescopic) துப்பாக்கி இல்லாததால் பிணைக் கைதிகளை பாதுகாப்புப் படையினரே தாக்கும் அபாயம்,மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அரசியல்வாதிகளின் ஆத்திரமூட்டும் அறிக்கைகள் மக்களுக்கு அரசாங்கம் மற்றும் அரசியல் வாதிகளின் மேல் இருந்த கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையையும் இழந்து வெறுப்பு மேலிட்டது. அதனை கேரளா முதலமைச்சர் விவகாரத்தில் தெளிவாக காண முடிந்தது.மேடைக்கு மேடை இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது என்று முழங்கிய உள்துறை பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் கடைசியில் பெரிய நாமம் போட்டது தான் மிச்சம்.

மும்பை போன்ற தீவிரவாத தாக்குதலுக்கு அடிக்கடி உள்ளாகும் நகரங்களில் தேசிய பாதுகாப்புப் படைப் பிரிவு இல்லாதது பெரிய அதிசியம் தான். தீவிரவாத தாக்குதல்களின் போது நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றிய பயிற்சி, சந்தேகப் படும் நபர்களைக் கண்டால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற அணுகு முறை முதலியவைகள் விளம்பரங்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் தீவிரமாக முயல வேண்டும்.மேலும் உளவியல் ரீதியாக பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்ய அரசாங்கம் முன் வர வேண்டும். இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொன்றதோடல்லாமல், பிணைக் கைதிகளை வைத்து மூன்று நாட்களுக்கு ஆடிய வெறியாட்டம் உலக அளவில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்தை கையாளும் முறையில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பல நாடுகளின் தவறான வெளிநாட்டுக் கொள்கை, சந்தர்ப்பவாதம் காரணமாக மிகவும் சிக்கலாகி விட்ட இந்த தீவிரவாத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியுமே தவிர முழுவதுமாக இந்த நூற்றாண்டில் ஒழிக்க முடியும் என்று தெரியவில்லை. எனவே இந்தியா தன்னுடைய உள்நாட்டு பாதுகாப்பில் மிக அதிகம் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதது.குறிப்பாக உளவுத் துறையை பலபடுத்துதல், பலவிதமான உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் பிரதானமானது. மக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழும் பரிதாப நிலை தான்.தீவிரவாதமே கொடுமை என்றால் அதனை ஆதரித்து பிரச்சாரம் செய்பவர்களை என்ன செய்ய. அவர்களுடன் ஓர் ஆக்கப்பூர்வமான உரையாடலில் மாற்றுக் கருத்து சிந்தனையாளர்கள் ஈடுபட்டு ஒரு தெளிவை ஏற்படுத்துவது தீவிரவாத எதிர்ப்பை வலுப்படுத்த உதவும்.

தீவிரவாத தாக்குதலுக்குப் பின் தொலைக் காட்சியில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், இந்த தாக்குதலுக்கு "வெளிநாட்டு சக்திகள்" தான் காரணம் என்று பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியது இன்று விசாரணையில் உண்மையாகிவிட்டது. பாகிஸ்தான் பல்முனை தாக்குதலுக்கு உள்ளான ஒரு பரிதாபமான நாடக உள்ளது. அதன் மேற்குப் பகுதியில் தலிபான்களால் தொல்லை. கிழக்கில் காஷ்மீர், பிரச்சனை. உள்நாட்டில் அடிக்கடி நடக்கும் வன்முறைகள். மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இன்றுள்ள சிவில் அரசாங்கம் நேரடியான ஈடுபட்டதற்கு சாட்சி இருப்பதாக தெரியவில்லை. இந்த ஈனச் செயலால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் அரசு அதனுடைய உளவுத் துறை தலைவரை இந்தியா அனுப்ப முதலில் சம்மதித்தது. ஆனால் இன்னும் உள்நாட்டு விவகாரத்தில் வலுவான ஆளுமையை வெளிப்படுத்தும் பாகிஸ்தானின் ராணுவ எதிர்ப்பால் பாகிஸ்தான் அரசு பின்வாங்கியது.பாகிஸ்தான் இராணுவம் மற்றும் அதன் உளவுத் துறைக்கு தீவிரவாத இயக்கங்களுடன் உள்ள தொடர்பு உலகறிந்த ஒன்று. இராணுவம் ஆதரித்த தீவிரவாத இயக்கம் தான் மும்பை தாக்குதலை திட்டமிட்டு அதனை செயல் படுத்தியது என்பதற்கான ஆதாரங்கள் வலுக்கிறது. இராணுவம் தனக்கு எந்த பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கத்துடனும் தொடர்பு இல்லை என்று உடனே அறிவித்து அதை செயல் படுத்தினால் இந்திய பாகிஸ்தான் உறவு வலுப் பெற உதவும். இந்தியா தன்னிடம் கிடைத்த தடயங்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான் அரசு இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும். எல்லா லக்ஷர் தோய்பா தீவிரவாத பயிற்சி முகாம்களையும் மூட வேண்டும். அந்த இயக்கம் வேறு எந்த பெயரிலும் ஈடுபடுவதை தடுக்க வேண்டும். எல்லாவற்றிகும் மேலாக பாகிஸ்தான் மக்கள் இந்த தீவிரவாத இயக்கங்களையும் முழுவதும் நிராகரிப்பது அவசியம். பாகிஸ்தானைத் தாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இதுவரை இந்தியா அரசு மிகவும் பொறுப்பான முறையில் நடந்து கொண்டுள்ளது. பாகிஸ்தானின் சிவில் அரசு மிகவும் வலுவிழந்து உள்ளது. அதற்கு மேலும் நெருக்கடி கொடுப்பது எதிர்மறை விளைவுகளைத் தான் ஏற்படுத்தும். ஏற்கனவே மிகவும் மோசமான நிலையில் உள்ள பாகிஸ்தானின் பொருளாதரத்தை மனதில் கொண்டு தீவிரவாதிகளை ஆதரிப்பதால் தன் நாட்டிற்கே பெரிய தீங்கிழைக்கிறோம் என்பதை பாகிஸ்தான் ராணுவமும், உளவுத் துறையும் உணர வேண்டியது அவசியம். இறுதியாக இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து இந்த தீவிரவாத கெடுதலை முறியடிக்க வேண்டும்.

மும்பை தாக்குதலும் பாகிஸ்தானின் நெருக்கடிகளும்

புதன், 26 நவம்பர், 2008

இலங்கை தமிழர்களின் அவல நிலை

இலங்கையில் இந்த வருடத் தொடக்கத்திலிருந்து தீவிரமடைந்துள்ள போரினால் பலவிதமான கேள்விகளும், யோசனைகளும் முன்வைக்கப் படுகின்றன.
தேசியம் மற்றும் தேச பக்தி என்பது தேவையானதா, எல்.டி.டி ஒரு தீவிரவாத இயக்கமா அல்லது விடுதலைக்குப் போராடும் ஆயுதம் ஏந்திய குழுவா போன்ற சர்ச்சைகள் நடை பெறுகின்றன. மேலும் தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த போருக்கு எதிரான தமிழர்களின் கொந்தளிப்பின் காரணம் "மூலப் படிம உணர்வா" (உயிரோசையில் தமிழவன் எழுதிய "தமிழ் மக்களின் மூலப்படிம உணர்வு" நினைவிருக்கலாம்) என்ற விவாதம் நாகர்ஜுனன் அவர்களின் வலைத்தளத்தில் ஓர் உயர் தளத்தில் (higher dimension) நடக்கிறது. இதைப் பற்றிய பரவலான விவாதத்திற்கு உகந்த நேரம் இது தான். கட்டாயமாக ஓர் அறுபடாத நூலிழை போல் தமிழ் உணர்வு என்ற சக்தி உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே இழையோடுகிறது. ஆனால் இந்த சக்தியை ஒருங்கிணைத்து ஒரு குறிக்கோளை நோக்கி நகர்த்திச் செல்ல தன்னலமற்ற, வியாபார நோக்கமில்லாத தலைமைத் தேவைப் படுகிறது. அப்படி ஒரு தலைவர் இன்று இல்லை. எதிர் காலத்தில் உருவாக வாய்ப்புள்ளது. காலம் பதில் சொல்லும்.

இந்தியாவின் ஆங்கில இதழ்கள் மற்றும் விடுதலிப் புலிகளை கடுமையாக எதிர்க்கும் என்.ராம், சோ, ஜெயலலிதா, இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இலங்கையில் நடக்கும் யுத்தத்தை அரசியல் பிரச்சனையாக மட்டுமே கருதுகிறார்கள். இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை. எனவே அதனை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணம். அதற்கு நேர்மாறாக முழுமையாக சமூகப் பிரச்சனையாகவும், உணர்வுப் பூர்வமாகவும் அணுகுகிறார்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள். ஆனால் எல்லோரும் ஓத்துப் போகும் ஒரே அம்சம் இலங்கையிலுள்ள தமிழர்கள் அனைவரும் ஜனநாயக முறையில் எல்லா உரிமைகளுடனும் நலமாக வாழ வேண்டும் என்பது தான். இதற்கு இரண்டே தீர்வு தான் உள்ளது. ஒன்று தமிழ் ஈழம். இன்றைக்கு இது சாத்தியமா?

பல இயக்கங்கள் ஆயுதம் ஏந்தி இலங்கை தமிழர்களுக்காகவும், தனி ஈழம் கேட்டும் போராடிய நிலையில், விடுதலிப் புலிகள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளனர். நீண்டகால போர், தவறான அணுகுமுறை, எதிர்கால விளைவுகளை பற்றி சிந்திக்காமல் எடுத்த நடவடிக்கைகள், தீவிரவாத குழு என்ற முத்திரை, பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற சுமை, கிழக்குப் பகுதியில் புலிகளின் மத்தியில் ஏற்பட்டப் பிளவு போன்ற காரணங்களினால் இன்று வலுவிழந்து நிற்கின்றனர் விடுதலைப் புலிகள். அதே நேரத்தில் இராணுவம் பெரிய அளவில் வெற்றி அடைந்து வரும் இன்றைய நிலையில் இலங்கை அரசு இறங்கிவந்து தமிழ் ஈழம் வழங்குவது ஒரு கனவாகத் தான் இருக்கிறது. அமைதிப் பேச்சு வார்த்தையில் தேவைப்படும் ராஜ தந்திரம் இல்லாமல் ஆயுத போராட்டத்தை மட்டும் வைத்து தனி நாடு அடைந்து விடலாம் என்ற புலிகளின் எண்ணம் மிகவும் தவறானது. 2000ம் ஆண்டு நடந்த போரில் புலிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றும், இலங்கை ராணுவமும், அரசும் பின்னடைவில் இருந்த நேரத்தில் நார்வே மற்றும் உலக நாடுகளின் உதவியுடன் குறைந்த பட்சம் இலங்கையில் ஒன்றிணைந்த (fedaral) தனி தமிழ் மாநிலம் பெற்றிருக்க வாய்ப்பிருந்தது. அதையும் தவற விட்டார்கள். உலக நாடுகள் குறிப்பாக இந்தியாவின் துணை இல்லாமல் தனி நாடு அடைவது என்பது கனவாகவே முடிந்து விடும் என்று புலிகளின் தலைமை உணர வேண்டும். அதற்கான தீவிர அரசியல் முயற்சியில் ஈடுபடுவது தான் புலிகளுக்கு இன்றுள்ள ஒரே வழி. முதற் கட்டமாக இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற அடையாளத்தை உடைத்து, இந்திய அரசு அங்கீகரிக்கும் நிலைக்கு செல்ல வேண்டும். புலிகளின் இன்றைய செயல் பாடுகளில் பெரிய அளவிற்கு மாற்றம் இல்லாமல் இந்த இலக்கை அடைய முடியாது.இதற்கு தமிழ் நாட்டில் புலிகளுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் இந்திய அரசுக்கும் புலிகளுக்கும் இடையே பாலமாக இருந்து உதவலாம். ஆனால் அதற்கு முன்பாக புலிகள் தங்கள் இயக்கத்தின் மேல் மற்றவர்களுக்கு உள்ள நம்பகத் தன்மையை மேம்படுத்த வேண்டும்.

தமிழர்களின் விவகாரத்தில் இலங்கை அரசின் செயல்பாட்டை எழுதுவதற்கே மிகவும் வெட்கமாக இருக்கிறது. பண்டாரநாயக இலங்கையின் சுதந்திரத்திற்கு பிறகு சிங்கள இன வெறி என்ற விஷ விதையை விதைத்ததின் பலன், இன்று ஆயிரக் கணக்கில் அப்பாவித் தமிழர்கள் மற்றும் சிங்கள ராணுவத்தினரின் உயிர்கள் அறுவடையாகின்றன. அதற்கு பிறகு இலங்கையில் இருந்த ஆட்சியாளர்கள் மறைமுகத் திட்டத்தை M.S.S. பாண்டியன் என்ற சமூகவியல் அறிஞர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதியதில் (http://timesofindia.indiatimes.com/SUBVERSE_Change_course_in_Lanka/rssarticleshow/3630071.cms) இருந்து தெரிந்து கொள்ளலாம். இன்றுள்ள இலங்கை அதிபர் ராஜ்பக்ஷே அமெரிக்க அதிபர் புஷ்ஷைப் போல் முரட்டுப் பிடிவாதம் கொண்டிருக்கிறார்.தமிழர் பிரச்சனை போரினால் தீர்க்கப் பட முடியாத ஒன்று என்று இன்னும் அவருக்கு உறைக்கவில்லை. இவருடைய குறிக்கோள் போரில் வெற்றி பெற்று(?) அரசியல் தீர்வு என்ற பெயரில் கிழக்குப் பகுதியில் வெள்ளையன் தலைமையில் ஏற்படுத்தியது போல இலங்கையின் வடக்கில் பெயரளவில் ஒரு பொம்மை அரசாங்கத்தை உண்டாக்குவதுதான்.புலிகளை வெற்றி பெற்று விட்டோம் என்ற மமதையில் ஆதரவற்ற தமிழர்கள் மேல் அடக்குமுறையை ஏவி விட ராஜபக்சே நினைத்தால், அது வரலாற்றில இலங்கை அரசு இழைத்த மிகப் பெரிய தவறாகிவிடும். தமிழர்கள் எதிர் பார்க்கும் உரிமையும், சுயமரியாதையும் கொண்ட சமூகம் அமையாவிட்டால், இனப் பிரச்சனை மீண்டும் தலை தூக்க நீண்ட நாள் ஆகாது. ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமாக 30% பணவீக்கத்துடன் திணறிக் கொண்டிருக்கிறது. நீண்ட நாள் இந்த போர் தொடர்ந்தால் ஏற்கனவே மோசமான நிலையிலுள்ள இலங்கை மக்களின் வாழ்க்கை சீரழிந்து விடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். புலிகள் ஆயுதத்தை கைவிட வேண்டும் என்று கோரும் ராஜ்பக்ஷே, அதே சமயத்தில் ஒரு பரந்த, தமிழர்கள் ஏற்கத்தக்க, தமிழர்களுக்கு சம அந்தஸ்து அளிக்கக் கூடிய ஜனநாயகத் திட்டத்தை முன் வைக்க வேண்டும்.

இந்த போரினால் மீறப் பட்டுள்ள மனித உரிமைகள் மனித சமுதாயத்தையே தலை குனிய வைக்கும் அளவிற்கு உள்ளது. யாழ்ப்பாண பல்கலைக் கழக மனித உரிமை சங்கம் (UTHR-J) அக்டோபர் 28ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கை புலிகள் மற்றும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது. "உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி" என்பது போல் போர் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் நிலை உள்ளது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் தங்கள் தாய் மண்ணிலேயே அகதிகளாக வாழும் அவல நிலை. இதை பார்த்து கண்ணீர் வடிக்க தமிழ் உணர்வு தேவையில்லை. மனிதாபிமானமே போதுமானது. இந்த நேரத்தில் இந்திய அரசின் கடமை மிகவும் முக்கியமானது. இந்திய அரசு செய்ய வேண்டியது என்ன?

என்னதான் உள்நாட்டுப் பிரச்சனை என்று இந்தியா கருதினாலும், இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி இலங்கை அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடவேண்டும். விடுதலைப் புலிகளின் பின்வாங்குதலால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பி அவதியுறும் இலங்கைத் தமிழர்களின் நல் வாழ்வுக்கு வழி வகுக்க வேண்டும். மற்ற நாடுகளுடன் தனக்குள்ள நல்லுறவைப் பயன்படுத்தி உலக நாடுகளின் மூலமாக இந்த இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்க இது தான் சரியான தருணம்.மேலும் இந்திய அரசாங்கம் எப்போதுமே இருதரப்பு பேச்சு வார்த்தையைத் தான் வெளிநாட்டுக் கொள்கையில் கடைபிடிக்கிறது. ஆனால் புலிகளுடன் நேரடி தொடர்பு வேண்டாம் என்ற பட்சத்தில், பல தரப்பு பேச்சு வார்த்தை (multilateral talks) நடத்த முன் வரலாம். சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளையும் கொண்ட ஒரு குழு அமைத்து சிங்கள மற்றும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயலலாம். அதில் "தமிழ் ஈழமா அல்லது ஒருங்கிணைந்த இலங்கையில் ஒன்றிணைந்த தமிழ் மாநிலமா?" என்ற தீர்வுக்கு வரலாம். அதை விட்டு இந்தியா இலங்கைக்கு ஆயுதம் அளிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை போருக்கு தீர்வாகாது. இந்தியா ஆயுதம் தரவில்லை என்றால் சீனா அல்லது பாகிஸ்தானில் இருந்து வாங்கிக் கொள்வார்கள். ஏற்கனவே சீன மற்றும் பாகிஸ்தான் உளவாளிகள் அதிக அளவில் இலங்கையில் உள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இறுதியாக, போரினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பதை இலங்கை அரசும், புலிகளும் உடனடியாக கை விட வேண்டும். மூன்று லட்சம் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். மூன்று லட்சம் தமிழ் மக்கள் குறைந்த பட்ச தேவையான உணவு, உடை,இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதி கூட இல்லாமல் அவதிப் படுகிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது நாம் 21ம் நூற்றாண்டில் இருக்கிறோமா அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இருக்கிறோமா என்று தெரியவில்லை. உலக நாடுகள் மற்றும் குறிப்பாக இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கையில் தலையிட்டு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடிய வள்ளலார் இன்று இருந்தால் இந்த அல்லல் படும் தமிழ் மக்களைப் பார்த்து என்ன பாடியிருப்பாரோ?

உயிரோசை இதழில் வெளியானது.
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=577

அமெரிக்க தேர்தல் களம்

உயிரோசை இதழில் வெளியானது

தண்ணி டாங்கர் லாரி ஏறி நசிங்கிய தகர டப்பா போல அமெரிக்க பொருளாதாரம் ஒரு புறம் இருக்க, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரங்கேறும் தேர்தல் திருவிழா மற்றொரு புறம். அமெரிக்க ஊடகங்கள் பசிக்கி நல்ல தீனி. ஜனநாயக கட்சி வேட்பாளராக ஓபாமாவும், குடியரசுக் கட்சி வேட்பாளராக மெக்கைனும் போட்டியிடுவது தெரிந்ததே. தனி நபர் தாக்குதல்களும், எதிர்மறை விளம்பரங்களும் முன் எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை ஆக்ரமித்துக் கொண்டுள்ளது. பொருளாதாரம், ஓர் இனச்சேர்க்கை, கருக்கலைப்பு,வெளிநாட்டு கொள்கை,ஈராக்குடனான யுத்தம், சுற்றுபுறச் சூழல் மற்றும் உடல் நல பாதுகாப்பு (ஹெல்த் கேர்) தேர்தலின் முக்கியப் பிரச்சனைகளாக உள்ளன. சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி அமெரிக்க மக்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கயுள்ளது. புஷ்ஷின் எட்டு ஆண்டு கால கைங்கர்யம் ஈராக் மீது போர் மற்றும் வரிக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் உபரியாக இருந்த அமெரிக்க பட்ஜெட்டில் பெரிய துண்டு (டெபிசிட்) விழுமாறு செய்தது தான். ஒரு பக்கம் புஷ்ஷால் ஏற்பட்ட சுமை, மறுபக்கம் வங்கிகள் கண்மூடித்தனமாக வீட்டுக் கடன்கள் வழங்கி திரும்பப் பெற முடியாமல் போனதால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என்ற இரண்டு பிரச்சனைகளையும் ஒரு சேர சமாளிக்கும்படியான பொருளாதார திட்டத்தை அறிவிக்க வேண்டிய பரிதாப நிலையில் வேட்பாளர்கள். பூதாகாரமாக விஸ்வரூபம் எடுத்துள்ள பொருளாதாரச் சிக்கலில் இருந்து அமெரிக்காவை மீட்பது குறித்து இரண்டு வேட்பாளர்களும் முற்றிலும் மாறுபட்ட பொருளாதாரத் திட்டத்தை முன் மொழிந்து இருக்கிறார்கள்.

மெகைனின் திட்டத்தைப் பொறுத்த வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 35% இல் இருந்து 25% குறைப்பது, புஷ் தற்காலிகமாக அறிமுகப்படுத்திய வரிக் குறைப்பை நிரந்தரமாக்குவது, முக்கியமாக அரசாங்கத்தின் செலவை குறைப்பது முதலானவைகள் பிரதான அம்சங்கள். ஈராக்கில் உள்ள ராணுவத்தை இப்போதைக்கு திரும்ப அழைக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ள மெகைன், அரசாங்கத்தின் செலவினைக் குறைக்க முடியுமா என்பது சந்தேகம் தான். மேலும் மெகைனின் வரி கொள்கை 60% மக்களுக்கு அனுகூலமாகவும், 1% மக்களுக்கு அதிக வரி கட்டும் படியும் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே அதிக வருமானம் உள்ளவர்களுக்கு அதிகப் படியான சலுகை அளிப்பதாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. வீட்டுக் கடன் திரும்ப செலுத்த முடியாமல் பல மக்கள் அவதியால் வீட்டை மீண்டும் கடன் வாங்கிய வங்கியிடமே விட்டுச் செல்வதால் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, நிர்ணயிக்கப் பட்ட வட்டி விகிதத்தில் 30 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் படியான கடன் வழங்கப்படும் என்றும், இது 2 லட்சம் முதல் 3 லட்சம் மக்களுக்கு பயன்படும் என்று மெகைன் கூறுகிறார்.

ஓபாமாவின் வரிக் கொள்கை முற்றிலும் மாறு பட்டதாக உள்ளது. 20 பில்லியன் டாலர் பெறுமானமுள்ள வரித் தள்ளுபடி செய்து காசோலையாக மக்களுக்குக் கொடுப்பது, வீட்டுக் கடன் செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு 10 பில்லியன் டாலர் நீதி ஒதுக்கீடு செய்வது, புஷ் செயல்படுத்திய வரிச் சலுகையை பணக்காரர்களுக்கு (250000 டாலாருக்கு மேல் வருமானம் உள்ளவர்கள்) ரத்து செய்வது, எரிபொருள் நிறுவனங்கள் மேல் "விண்ட்பால்" வரி விதித்து, கிட்டதட்ட ஆயிரம் டாலர் வரை குறைந்த மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு"அவசர எரிபொருள் தள்ளுபடி" என்ற பெயரில் வழங்குவது போன்றவைகள் முக்கியமானவைகளாகும்.ஓபாமாவின் வரிக் குறைப்புத் திட்டத்தால் 80% மக்களுக்கு நன்மையும், 17% அதிக வருமானமுள்ள மக்கள் கூடுதல் வரி செலுத்தும் படியும் நேரிடும் என்பது பொருளாதார நிபுணர்கள் கருத்து.

வெளிநாட்டுக்கு வேலையை அனுப்பாத அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும் என்ற ஓபாமாவின் கூற்றுக்கு, உலக அளவில் போட்டியிடும் வாய்ப்பை அமெரிக்க கார்பரேட் நிறுவனங்கள் இழந்து விடும் என்று மெகைன் மறுதலிக்கிறார். ஈராக்கில் இருந்து பதினாறு மாதங்களில் ராணுவத்தை திரும்ப அழைப்பது என்ற ஓபாமாவின் நிலையால் அரசாங்கத்தின் செலவினங்களை குறைப்பது கடினம். செல்வத்தைப் பரவலாக்குவது என்ற ஓபாமாவின் கூற்றை நாட்டை சோசலிசத்தை நோக்கி எடுத்துச் செல்ல முயல்கிறார் என்று மெகைன் கடுமையாக சாடுகிறார். சோசலிசம் என்றாலே வேப்பங்காயாக கசக்கும் சோர்ந்து போயுள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்களை ஒன்று சேர்க்க மெகைனின் இந்த பிரச்சாரம் உதவலாம். நடுத்தர மக்களைப் பற்றி மெகைன் கவலை படவில்லை என்பது ஓபாமாவின் கட்சி. உடல் நல காப்பீடு மக்களின் உரிமை என்று ஓபாமாவும், இல்லை அது மக்களின் பொறுப்பு என்று மெகைனும் வாதிடுகிறார்கள். இதை அடிப்படையாகக் கொண்டே அவர்களின் கொள்கைகளும் வரையறுக்கப் பட்டுள்ளன. வெளிநாட்டு விவகாரத்தில், "பொறுக்கி" நாடுகள் என்று புஷ் விளித்த வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளுடன் உட்கார்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என்பது ஓபாமாவின் நிலைப்பாடு. மெகைன் கிட்டத்தட்ட புஷ்ஷின் வெளிநாட்டு கொள்கையையே தொடர்ந்து கடை பிடிப்பவராக தெரிகிறது.

ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கும் மாநிலங்களை "நீல மாநிலங்கள்" என்றும், குடியரசுக் கட்சியை ஆதரிக்கும் மாநிலங்களை "சிவப்பு மாநிலங்கள்" என்றும் பிரித்திருக்கிறார்கள். கடைசி கட்ட பிரச்சாரமாக இரண்டு வேட்பாளர்களும் சிவப்பு மாநிலங்களில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்கள். ஜோ பைடேன் என்ற அனுபவமிக்க ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக ஓபாமாவும், அனுபவக்குறைவான, கிறிஸ்துவ மதத்தில் அதிதீவிர ஈடுபாடு கொண்ட சாரா பாலின் என்பவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக மெகைனும் தேர்தெடுத்து உள்ளார்கள். .அமெரிக்காவின் இந்த கஷ்ட நிலைக்கு புஷ்ஷின் கொள்கைகளைகளே காரணம் என்றும், அதை மெகைன் முழுவதும் ஆதரித்தவர் என்றும், அவர் ஜனாதிபதி ஆனால் அதே கொள்கைகளை தொடர்ந்து கடை பிடிப்பார் என்றும், அது நாட்டுக்கு மிகவும் கெடுதல் என்றும் மீண்டும் மீண்டும் ஓபாமா கூறியதால் எரிச்சல் அடைந்த மெகைன், மூன்றாவது நேரடி விவாதத்தில் "நான் புஷ் இல்லை" என்று கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே மூன்று நேரடி விவாதங்கள் (debate) நடந்து முடிந்த நிலையில், மூன்றிலும் ஒபாமா வெற்றி பெற்றதாக நடுநிலை கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மெகைன் எரிச்சலுடனும், உணர்ச்சிவசப்பட்டும் இருந்த நிலையில், ஓபாமா பொறுமையுடனும், நிதானமாகவும் விவாதத்தை அணுகியது பாராட்டக் கூடியதாக இருந்தது. ஒரு விமர்சகர் கூறியது போல் "90 நிமிட விவாதத்திற்குப் பிறகும் கூட ஓபாமா தலையில் ஐஸ் கட்டியை வைத்தாலும் உருகாத அளவிற்கு சாந்தமான மனநிலையில் இருந்தார்" என்பதே உண்மை. ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு ஒபாமாவுக்கே அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. புஷ் நிர்வாகத்தில் அங்கம் வகித்த காலின் பொவெல் கூட ஓபாமாவை ஆதரித்துள்ளது குறிப்பிடத் தக்கது. என்னதான் ஓபாமா முன்னணியில் இருந்தாலும், 60% தீவிர கிறிஸ்துவர்கள் உள்ள இந்த நாட்டில், ஏறத்தாழ அனைவரும் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள், அவர்களை வாக்குச் சாவடிக்கு வரவைக்க மேகினால் முடிந்தால், ஓபாமா வெற்றி பெறுவது கேள்விக்குறி ஆக வாய்ப்புள்ளது. . ஓபாமா வெற்றி பெற்று சரித்திரம் படைப்பாரா? ஆனால் யார் வெற்றி பெற்றாலும் அது முள்ளின் மேல் படுத்த சுகத்தைத் தான் கொடுக்கப் போகிறது இந்த பதவி என்பது நிதர்சனமான உண்மை.

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=408

அறிக்கைகளும் ஆர்பாட்டங்களும்

14-Oct-2008

இன்று இந்தியாவிலும் குறிப்பாக தமிழ் நாட்டிலும் உள்ள அரசியலை வூடகங்கள் மூலம் படிக்கும் போதும், பார்க்கும் போதும் கற்பனையில் உதித்த பேட்டிகளையும், அறிக்கைகளையும் மன வேதனையுடனும், நகைச்சுவையுடனும் பகிரிந்து கொள்கிறேன்.

தமிழகத்தில் மின்வெட்டு 'கட்': ஆற்காடு வீராசாமி அறிவிப்பு

இயற்கையின் சதியால் தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி நின்றது என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால் தமிழ் நாட்டில் மின்வெட்டு இருக்காது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

இருண்ட தமிழகம்: ஜெயலலிதா அறிக்கை

என் ஆட்சியில் 'பிரகாசமாக ஒளி வீசி மின்னிய" தமிழகத்தை இருண்ட தமிழகமாக மாற்றிய கையாலாகாத ஆற்காடு வீராசாமியையும், நயவஞ்சக கருணாநிதியின் அரசையும் கண்டித்து நெல்லை மாவட்டத்தில் உள்ள ராமையன்பட்டி என்ற கிராமத்தில் அ.தி.மு.க மிகப் பெரிய போராட்டத்தை வரும் அக்டோபர் 22ம் நடத்தும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஜெயலலிதாவைக் கண்டித்து கருணாநிதி உருக்கமான கவிதை

ஆற்காடார் அறிவித்தது புரிந்தும்
புரியாதது போல் - பொறாமையில்
பிதற்றும் பேதையே
இரவில் மட்டுமே மின்வெட்டு
பகலிலோ சுட்டெரிக்கும் நமது சூரிய ஒளியை
இலவசமாக எல்லா தமிழ் மக்களுக்கும் பகிர்தளித்து
மின்வெட்டு இல்லா மாநிலமாக்கி
பார் புகழ நடாத்திச் செல்லும்
அரசை ஆன்றோரும், சான்றோரும் பாராட்ட
கண்டிக்கப் புறப்பட்ட
நயவஞ்சகியே, நாசக்கார அம்மையே
கலங்காது இந்த மனம்
வீழாது தமிழ் இனம் - உன் சூழ்ச்சிக்கு
இந்நாளும் மறந்திருந்த இலங்கை
இனப் படு கொலை கண்டித்து
யாம் போராடத்துடிக்கும் போது
தமிழ் நெஞ்சங்களை திசை மாற்றும்
தரம் கெட்ட உன் இழிச் செயலை
தகர்த்தெறிவோம் தடைகளை களைவோம்
உயிரை துச்சமாக மதிப்போம் - பொருத்தது போதும்
பொங்கியெழு உடன்பிறப்பே

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


இலவச "லாந்தர்" : கருணாநிதி பேட்டி

மின்சார உற்பத்தி நின்றதால் இரவில் அவதியுறும் தமிழக மக்களுக்கு இலவச லாந்தர் விளக்கு அளித்து ஒளி ஏற்றி வைக்க அண்ணா வழியில் அற நெறியில் நிற்கும் கழக அரசு முடிவு எடுத்திருக்கிறது என்பதை உளமார உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கருணாநிதியை கண்டித்து ராமதாஸ் பேட்டி

இருண்ட தமிழகத்தை மீட்க லாந்தர் விளக்கு கொடுத்து ஒளி ஏற்றி வைக்க முன் வந்த அரசு "டாஸ்மாக்" கடைகளை மூடியும், தமிழக மக்களுக்கு எண்ணை,திரி மற்றும் தீப்பெட்டி இலவசமாக கொடுக்கவும் முன் வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

லாந்தர் ஊழல்: சுப்ரமணிய சுவாமி அறிக்கை

லாந்தர் வாங்குவதில் தமிழ் நாட்டில் பெரிய ஊழல் நடந்திருக்கிறது. இந்த விஷயத்தில் கனிமொழி பெரிய அளவில் கோடிக் கணக்கில் பணம் கையாடல் செய்ததாக சுப்ரமணிய சுவாமி அறிவித்தார். இதற்காக தி.மு.க அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளார்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சுப்ரமணிய சுவாமி ஒரு மன நோயாளி : கனிமொழி எம்.பி. அறிக்கை

தியாக உள்ளதுடன் மக்களுக்கு சேவை செய்து வரும் தமிழக முதல்வர் அவர்களை களங்கப் படுத்த வேண்டும் என்றே சு.சுவாமி அறிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு எடுக்கும் எந்த முடிவிற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அவர் செயல்களில் இருந்தே அவர் ஒரு மன நோயாளி என்பது திட்ட வட்டமாகத் தெரிகிறது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அரசியலுக்கு வருவது குறித்து ரஜினி பரபரப்பு அறிக்கை:

நான் அரசியலுக்கு வருவது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது ஆண்டவனுக்கே எப்படி தெரியவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. ஆண்டவனே நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது. ஆனால் ஆண்டவன் ஆணையிட்டால் நான் அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. இது தான் என் அரசியல் பிரவேசம் பற்றிய தெளிவான நிலை என்பதை இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx



காதலில் விழுந்தேன்: விஜய காந்த் பேட்டி

இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த விஜய காந்த் கூறியது:
ஏழை மக்களுக்காக நான் கட்டிய கல்யாண மண்டபத்தை இடித்து என்னை அழிக்க நினைத்த இந்த அராஜக அரசு, என்னைக் கண்டு பயந்து நடுங்கும் இந்த அரசு, ஏழைப் பங்காளன் "சன்" தொலைக் காட்சி பாமர மக்களுக்காகவே தயாரித்த "காதலில் விழுந்தேன்" என்ற திரைக் காவியத்தை மதுரை மாநகரில் வெளியிட முடியாமல் தடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதனால் நான் "சன்" தொலைக் காட்சி நிர்வாகத்துடன் கூட்டணி அமைத்து விட்டேன் என்றோ, விலை போய் விட்டேன் என்றோ நினைக்காதீர்கள்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

"பொடா" சட்டம்: அத்வானி பேட்டி

இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்த பா.ஜ.க தலைவர் அத்வானி
"பா.ஜ.க" பாராளுமன்றத் தேர்தலில் வென்று தான் பிரதமர் பதவி ஏற்றவுடன் "பொடா" சட்டத்தை நிறைவேற்றி இந்தியப் பொருளாதரத்தை சீர்படுத்தி, தீவிரவாதத்தை ஒழித்து இந்தியாவை மீண்டும் "ஒளிரச் செய்வேன்" என்று கூறினார்.
மேலும் ஒரிசாவில் கிருஸ்துவர்கள் தாக்கப் படுவதை நிறுத்த "மோடி"யை ஒரிசாவின் முதல்வர் ஆக்கினால், ஒரிசாவில் கிருஸ்துவர்களே இல்லாமல் செய்து "டாட்டா"வோ, "பிர்லா"வையோ அவர்கள் வாழ்ந்த இடத்தில் தொழிற்சாலை அமைக்கச் செய்து ஒரிசாவை இந்தியாவின் முதல் மாநிலமாக மோடி மாற்றி விடுவார் என்றும் கூறினார்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

இந்தியா பொருளாதாரம்: சிதம்பரம் பேட்டி

இந்தியப் பொருளாதாரம் மிகவும் வலுவான நிலையில் உள்ளதாகவும் பொது மக்கள் பீதி அடையவேண்டாம் என்றும், இருபது வருடம் பொறுமையாக இருந்தால் பங்கு சந்தையில் மக்கள் இழந்த பணத்தை மீட்டு விடலாம் என்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். மேலும் அமெரிக்கப் பொருளாதாரச் சிக்கலுக்கு, இந்தியா பண உதவி செய்யும் நிலையில் உள்ளதாகவும், எதற்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


கம்யூனிஸ்ட் ஆதரவு வாபஸ் எதிரொலி: பிரகாஷ் காரட் பேட்டி

கம்யூனிஸ்ட் ஆதரவு இருந்த வரை, மத்திய ஆட்சி சிறப்பாக நடந்து வந்தது. விலை வாசி உயர்வோ, பங்கு சந்தை விழ்ச்சியோ காணவில்லை. அமெரிக்க-இந்தியா அணு சக்தி ஒப்பந்தத்தால், உலகப் பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்து விட்டது. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தால் உலகமே மகிழ்ச்சி அடையும் என்று கூறினார்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

செவ்வாய், 25 நவம்பர், 2008

மனக்கிறுக்கல்கள் - 2

கர்நாடக இசை


பல விதமான ரசிகர்கள்

நண்பர் அழைப்பை ஏற்று செல்லும் குழந்தை பிறந்தநாள் விழாவோ, நல்ல இயக்குனரின் விரைவில் வர இருக்கும் திரைப்பட வெளியீடோ, அபிமான எழுத்தாளரின் புதிய புத்தக வரவோ மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் தரக் கூடியவைகள். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமோ, ஏதாவது புதிய உத்தியைக் கையாண்டு அசர வைத்து விடுவாரோ இயக்குனர், புதிய கதைக் களம் என்னவாக இருக்கும் என்று பல விதமான கற்பனைகள் மனதில் ஓட ஆரம்பித்து விடும். சில சமயங்களில் இதனால் ஏமாற்றம் ஏற்படுவதும் இயற்கை தான். எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாகி விடுகிறது. குறிப்பாக கர்நாடக இசை நிகழ்ச்சிக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தால் தோன்றும் எண்ணங்களுக்கு அளவே கிடையாது. இன்று பிரதான ராகம் என்னவாக இருக்கும், "ராகம் தானம் பல்லவி" இடம் பெறுமா, அப்படியானால் என்ன ராகத்தில் அமையும், துக்கடா பாடல்கள், தனி ஆவர்த்தனம், வயலின் ஒத்துழைப்பு என்று பெரிய பட்டியல் போடலாம்.

மாம்பலம் நடேசன் மாமா ஒரு தனி ரகம். கர்நாடக இசை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் மனிதர். ஆனால் அவர் மனைவிக்கு அபார சங்கீத ஞானம். தாழ்வு மனப்பான்மையோ என்னவோ, "ஒரே வரியை நான்கு முறை மாற்றி மாற்றி பாடினால் அதற்குப் பெயர் கர்நாடக சங்கீதம்" என்று கூறும் கட்சி அவர். ஒரு முறை அவரை ஓர் இசை கச்சேரியில் பார்த்த போது, "என்ன மாமா இங்கே" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். "ராஜம் (பொண்ணு) ஊரிலிருந்து வந்திருக்கா, கச்சேரிக்கு போகனும்னா" என்றார். "எப்படி மாமா இருந்தது' என்ற கேள்விக்கு "நன்னா இருந்துடா. எதோ அந்த ராகம் இந்த ராகம் அப்படினா ராஜம், ஆனா எனக்கு எல்லாம் ஒரே மாதிரி தான் இருந்தது" என்று சொல்லி சிரித்தார்.


சில விஷயங்கள் வாழ்கையில் எத்தனை முறை எதிர் கொண்டாலும் ஓர் இனம் புரியாத சந்தோஷ உணர்வு மனதைக் கவ்விக் கொள்கிறது. தோடி ராகத்தை எத்தனை முறை கேட்டாலும் உதாரணமாக ஐன்ஸ்டைனின் இயற்பியல் தத்துவம், திருக்குறள்,பாரதியின் கவிதைகள், தி.ஜா. வின் மோக முள் என்று பெரிய பட்டியலே போடலாம். இந்த வகையைச் சேர்த்தது தான் தோடி ராகமும். குறிப்பாக ஒ.எஸ். தியாகராஜன் அவர்கள் தோடி ராகத்தில் ராகம்,தானம்,பல்லவி பாடியது மிகச் சிறப்பாக அமைந்த நிகழ்ச்சியின் உச்ச கட்டம் என்றால் மிகையாகது. ஓர் அழகான சிற்பத்தை செதுக்கிய சிற்பியின் கை வண்ணத்திற்கு இணையானது பாடகரின் கற்பனையும், ராகத்தை கையாண்ட விதமும். வயலின் வித்வான் ராகவேந்திரர் மற்றும் மிருதங்கக் கலைஞர் முருகபூபதி அவர்களின் சமமான பங்களிப்பு ரசிகர்களின் மகிழ்ச்சியையும், பாடலின் இறுதி வடிவத்தையும் மெருகேற்றியது என்பது நிதர்சனமான உண்மை. "ஹனுமனை தினம் நினை மனமே" என்று பக்தி ரசம் சொட்ட இறுதியாக பாடி நிகழ்ச்சியை அமைதியான, மன நிறைவான சூழலில் முடித்தார் வித்வான். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த GLAC அன்பர்களுக்கு பாராட்டுக்கள். இருபது அல்லது இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொலை நோக்கு பார்வையுடன் GLAC என்ற அமைப்பை உருவாக்கியவர்களையும், அதை இன்று வரை தொடர்ந்து நடத்தி வருபவர்களையும் நினைக்கும் போது "எந்தரோ மகானு பாவலு அந்தரிக்கு மா வந்தனமு" என்று சொல்லத் தோன்றுகிறது.

மனக்கிறுக்கல்கள்


சுஜாதாவைப் பற்றி அவர் எழுதிய இன்றும் ரசிக்கத்தக்க விஷயங்களை த.ம.இ நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதாக நண்பர் திரு. ராஜராமனிடம் கூறி விட்டேன். ஆனால் எங்கு ஆரம்பிப்பது, எதை எழுதுவது, எதை விடுவது என்ற சிந்தனைக்குப் பிறகு கிடைத்தவை இவைகள். சுஜாதா தவிர வேறு சில விஷயங்களும் இதில் இடம் பெறலாம். எனக்குப் பிடித்தவைகள் என் கருத்துகளுடன் இங்கு இடம் பெறுகின்றன. உங்கள் மாறுபட்ட கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மிகவும் பயனுளதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.


முதலில் வணக்கத்துடன் ஆரம்பிப்போம். "கவிதை ரசனை என்பதே கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போலத்தான்" என்று எங்கேயோ படித்ததாக நினைவு என்கிறார் சுஜாதா.

"வணக்கம்" என்ற புவியரசு 1989ல் எழுதிய கவிதையை உதாரணமாகக் கொடுத்திருக்கிறார்.

"கோவை முகப்பில் உங்களை வரவேற்றும்
வாலான்குளக் கோட்டை மேட்டுப்
பாலத்து முனையின்
கள்ளுக்கடைக்கு வணக்கம்.
அதன் வாசல் புழுதியில் கருப்பன்
காசு கொண்டு வரக் காத்திருக்கும்
நகர்சுத்திப் பெண்ணுக்கும்
கள்ளுக்கடை சாராயக்கடை
வைன்ஷோப் முதலாளிக்கும்
கொடைக்கானலில் படிக்கும் அவர் புதல்வருக்கும்
அவர்களின் புதிய கான்டேசா கார்களுக்கும் வணக்கம்."

இதை படிக்கும் போது பட்டுகோட்டையார் எழுதிய

"காடு விளைஜென்ன மச்சான்
கையும் காலும் தானே மிச்சம்"

என்கிற கவிதை வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. இந்த கவிதைகளில் இடதுசாரி கருத்துக்களை "சிவப்பு" சாயம் இல்லாமல் அழகாகக் கூறி உள்ளார்கள். இந்தியா இத்தனை முன்னேறிய பிறகும் இந்த கவிதைகளுக்கு இன்னும் உயிர் இருக்கிறது.

"பெரும்பாலான மனிதர்கள் முப்பது வயது வரை இடதுசாரி சிந்தனையுடன் தான் வாழ்கிறார்கள்" என்று படித்ததாக நினைவு. இது உண்மைதானா?

சீனக் கவிதை

அடுத்தது சீனக் கவிதைகளைப் பற்றி பார்ப்போம்.

சைனீஸ் கவிதைகளைப் பற்றி சுஜாதா:

"சைநீசில் கவிதைகளுக்கு நன்கு வரிகள் உண்டு. முதல் வரி கவிதையை தொடங்குகிறது. இரண்டாம் வரி கவிதையை தொடர்கிறது. மூன்றாவது வரி ஒரு புதிய கருத்தை ஆரம்பிக்கிறது. நான்காவது வரி முதல் மூன்று வரிகளையும் ஒன்று சேர்க்கிறது" என்று ஜப்பானியக் கவிஞர் கூறியதாக எழுதி உள்ளார்.

உதாரணத்திற்கு இந்த கவிதையை மேற்கோள் காட்டியுள்ளார்.

"சியோடவைச் சேர்ந்த சில்க் வியாபாரிக்கு இரண்டு பெண்கள்
மூத்தவளுக்கு இருபது வயது இளையவள் பதினெட்டு
ஒரு படைவீரன் கத்தியால் கொள்கிறான்.
ஆனால் இந்தப் பெண்கள் ஆண்களை தத்தம் கண்களால் கொள்கிறார்கள்."


இந்த கவிதையை படித்தவுடன் பாரதியின் கற்பனையில் உதித்த இந்த பாடலை நினைவு கூறாமல் இருக்க முடியாது.
"சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோவட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொல்லோ"


கண்ணையும்,பெண்ணையும் வைத்து எதிர்மறையாக கண்ணதாசன் கற்பனையில்

"கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே"

கண்ணைக் கொடுத்தாலே கவிஞர்கள் கடல் உள்ள வரை கவிதை படைப்பார்கள். பெண்ணையும் கொடுத்தால் கற்பனைக் குதிரையை நிறுத்த முடியாது.

சுஜாதா முயற்சித்த சீனக் கவிதை:

மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்.
மணி பார்த்தான். உட்கார்ந்தான். படுத்துக் கொண்டான்.
சென்னை விட்டு திருச்சி போகும் ராக்க்போர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தில் கடந்து செல்லும்.

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போல் எனுக்கும் ஒரு சீனக் கவிதை எழுதிப் பார்க்கலாமே என்று தோன்றியது. விளைவு இதோ:

எட்டு வயது வேலன் பந்து விளையாடினான்.
பசிக்கு பழைய சோறு சாப்பிட்டான். படுத்து உறங்கினான்
இளமையில் கல் என்பது தமிழ் முதுமொழி
விடியலில் வேலன் வேலைக்கு புறப்பட்டான் தந்தையுடன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxxxxxx xxxxxxxxxxxxx
நீல. பத்மநாபன்

நீல. பத்மநாபன் அவர்களுக்கு காலம் கடந்து "சாகத்ய அகாடமி" விருது கிடைத்துள்ளது. இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எழுவது வயதான இவர் திருவனந்தபுரத்தில் அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். முப்பது வயதில் இவர் எழுதிய "தலைமுறைகள்" என்ற நாவல் மிகவும் பிரபலமானது. க.நா. சு. இந்த நாவலை இந்தியாவிலேயே தலை சிறந்த பத்து நாவல்களில் ஒன்றாக மதிப்பிட்டுள்ளார். "உறவுகள்", "தேரோடும் வீதி", "இலையுதிர் காலம்" போன்ற நாவல்களும், நூற்றி ஐம்பது சிறு கதைகளும் எழுதி உள்ளார். இவருக்கு பரிசு கொடுத்து "அகாடமி" பெருமை சேர்த்துக் கொண்டது.


சுஜாதா - ஒரு வாசகனின் அஞ்சலி


சுஜாதாவின் மறைவுச் செய்தியை அறிந்தவுடன் கவிஞர் கண்ணதாசன் கூறிய "சாவே உனக்கு ஒரு சாவு வரதா" என்று எழுதியது தான் நினைவுக்கு வந்தது. ஒரு சிறந்த பொறியியல் வல்லுநர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் தமிழில் அறிவியலை மிகவும் எளிதாக கூறும் திறமை என்று பல சிறப்புகளை பெற்றவர். இவருடைய நைலான் கயிறு, கனவு தொழிற்சாலை, ரத்தம் ஒரே நிறம், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று பிரபலமான நூற்று கணக்கான கதைகள், நாவல்கள் படைத்தவர். இவருடைய முதல் சிறுகதை "சிவாஜி" என்ற பத்திரிகையில் வெளி வந்தது. பிற்காலத்தில் ஒரு பேட்டியில் முதல் கதை பிரசுரமானத்தில் ஏற்பட்ட சந்தோஷம் அளவிட முடியாதது என்றும், அதை யாராவது பெற்று தந்தால் தன் சாம்ராஜ்யத்தில் பாதியை கொடுப்பதாகவும் கூறி இருந்தார். தமிழில் கதை எழுதிவதில் "விஸுஅல் ரைடிங்" என்ற புதிய அணுகு முறையை கையாண்டார். அறிவியல் புனைக் கதைகள் (science fiction) மற்றும் அறிவியல் சார்ந்த இவருடைய கட்டுரைகள் தான் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து இவரை மிகஉம் வேறுபடுத்தி காட்டியது. தமிழில் "அறிவியல் கதைகளின் முன்னோடி" என்ற பட்டம் இவருக்கு சரியாக பொருந்தும். எழுவதுகளில் வந்த சுஜாதாவின் "கணையாழிஇன் கடைசி பக்கங்கள்" அவருடைய பரந்த அறிவையும், புத்திகூர்மையையும் வெளி படுத்துவதாக இருந்தன. கவிதை மற்றும் நாடகங்கள் படைப்பதிலும் கூட இவருடைய திறமையை காண முடிந்தது. "ஹைக்கூ" கவிதைகளை தமிழில் பிரபல படுத்தினார். பல வாசகர்களை கவிதை எழுதும் முயற்சியில் எடுபடச் செய்து சிறிதளவு வெற்றியும் பெற்றார். தமிழ் இலக்கியத்தின் பால் இவருடைய எழுத்தால் பல இளைய தலை முறையினர் கவர்ந்து இழுக்கப்பட்டனர் என்பது தான் இவர் தமிழுக்கு ஆற்றிய மிகப் பெரிய சேவை.

எண்பதுகளில் இருந்து எழுதுவதற்கு கணணி உபயோகித்தார் என்பது ஓர் ஆச்சிர்யமான விஷயம். "கணணியில் தமிழ்" என்பதிற்கு உண்மையான முயற்சி மேற்கொண்டவர். வைஷ்ணவ பக்தி இலக்கியத்தை பற்றி நிறைய எழுதினார். குறிப்பாக ஆண்டாள் பற்றிய கட்டுரை மிகவும் அற்புதமாக இருந்தது. சிறு கதைகள் மற்றும் கதைகள் எழுதும் நுணுக்கங்களை அழகான கட்டுரைகள் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சிற்றிதழ்களில் இடம் பெற்ற அருமையான கதைகள்,கட்டுரைகள் மற்றும் கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள தவறியதே இல்லை. உதாரணமாக விழுப்புரம் கல்லூரி பேராசிரியர் பழமலை எழுதிய "சனங்களின் கதை" என்ற யதார்த்தமான கவிதை தொகுப்பை பாராட்டி எழுதி சாதாரண வாசகனை அடையச்சைதார். தமிழ் பழங்கால இலக்கியத்தையும் இவர் விட்டுவைக்கவில்லை. கடுமையான விமர்சனகளுக்கிடையே ("இந்தியா டுடே", காலச்சுவடு" ) "புறநானூறு ஓர் எளிய அறிமுகம்" என்ற நூலை இரண்டு தொகுப்புகளாக வெளியிட்டார். இவருடைய எளிமையான உரைநடை, சிறு வாக்கியங்களாக செய்தியைச் சொல்லும் முறை மற்றும் நகைச் சுவை உணர்வு ("குதிரை" சிறு கதை, அந்நியன் சினிமாவில் விக்ரம் எழுதும் காதல் கடிதம்) திரை உலக வசனகர்த்தாவாக பிரகாசிக்க உதவியது. மணிரத்தினம், சங்கர் போன்ற இயக்குனர்கள் இவரை நன்கு பயன் படுத்திக் கொண்டார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இவர் கதைகள் சினிமாவில் சிதைக்கபடுவதை கண்டு முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், எழுத்து மற்றும் திரைக்கு இடையே உள்ள ஊடக வித்தியாசங்களை புரிந்து கொண்டு யதார்த்த நிலையை கையாண்டார் என்றால் மிகையாகாது. காச்மாலாஜி (cosmology) , குஅந்டொம் ப்ஹைசிச்ஸ் (quantum physics) முதலிய சிக்கலான விஷயங்களை தமிழில் என்னைப் போன்ற சாதரணமான வாசகனுக்கும் புரியும் வகையில் பகிர்ந்து கொண்டார். முதலில் இவருடைய கதைகளை நல்ல இலக்கியமாக விமர்சகர்கள் ஏற்க மறுத்தாலும், காலப் போக்கில் தமிழ் சிறுகதை இலக்கியத்தில் புதுமைப் பித்தன், லா.ச.ராமாமிருதம், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி , கி ராஜநாராயணன் போன்ற தலை சிறந்த எழுத்தாளர்களுடன் சுஜாதா பெயர் இடம் பெறுவது தடுக்க முடியதாகி விட்டது.


ஓட்டு போடும் இயந்திரம் கண்டு பிடித்ததற்கு, அறிவியலை (ஏன், எப்படி, எதற்கு) பிரபலமான ஊடகங்கள் மூலமாக பிரபலப்படுதியதற்கு சுஜாதாவிற்கு பரிசுகள் கிடைத்தன. தன்னுடைய தொழிலையும், சொந்த வாழ்க்கையையும் மற்றும் எழுத்தாளர் என்ற அடையாளத்தையும் குழப்பிக் கொள்ளாமல் எளிமையான, இறுதிவரை உற்சாகமான ஒரு வித இளமையுடன் வாழ்ந்து வந்தார். சுஜாதாவை இழந்து நிற்கும் அவருடைய குடும்பத்தார்க்கும், வாசக நண்பர்களுக்கும் அவருடைய எழுத்துக்களில் வாழ்கிறார் என்பது தான் ஒரே ஆறுதல்.

இறுதியாக சுஜாதா இறப்பு பற்றி அவர் எழுத்தில்:
"செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்? நான் செத்த பின் நானாக இருந்தால்தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை ,என் புத்தகங்கள் ,என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும் .செத்தாலும் ஆத்மா தொடர்ந்து இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை.
நான் நானாகவே தொடர வேண்டும் . அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும். உறவினர்கள், என் வாசகர்கள் வேண்டும் . கட்டுரை அனுப்பினால் அதை பற்றி விமர்சிப்பவர்கள் வேண்டும். தமிழ் வேண்டும் . அதெல்லாம் இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன , முடிந்தால் என்ன? எனவே சாவு என்பது கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம் நினைவுகளின் அழிவுதான்."


சுஜாதா நினைவாக ஒரு கவிதை முயற்சி:

சுஜாதா மரணம்

பூஜ்ஜியத்தால் வகுத்து பிரபஞ்சத்தை
படைத்த ஆண்டவனுக்கே ஆசை
அறிவியல் தமிழில் அறிய
கணணி கற்க கதைகள் கேட்க
ஆள் தேவை விளம்பரம் கண்ட
காலன் பாசக்கயிற்றுக்கு விடை