செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

புஷ் விட்டுச் சென்றிருக்கும் அமெரிக்கா



மிகுந்த சர்ச்சைக்கும்,விமர்சனத்திற்கும் மற்றும் கேலிக்கும் உள்ளான ஜியார்ஜ் புஷ்ஷின் எட்டு ஆண்டு கால ஆட்சி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.ஒபாமா அதிபராக பதவி ஏற்றதை விட,புஷ் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியது அமெரிக்கா மக்களுக்கும்,பல உலக நாடுகளுக்கும் மகிழ்ச்சியை தந்தது என்றால் மிகையாகாது. ஒரு விதமான பிடிவாதம்,முரட்டு சுபாவம் மற்றும் தொலைநோக்கு சிந்தனை இல்லாதது போன்ற குணங்களால் இவர் ஆட்சியில் எடுத்த பல முடிவுகள் அமெரிக்கா மக்களின் இன்றைய இக்கட்டான நிலைக்கும், பல உலக மக்களின் துன்பங்களுக்கும் காரணமானது.

தேர்தலில் நடந்த குழறுபடியால் 2001௦௦௦ம் ஆண்டு அமெரிக்கா அதிபராக புஷ் பதவி ஏற்றார்.செப்டம்பர் 11,2001ம் ஆண்டு நடந்த தீவிரவாதிகளின் நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலால் இவருடைய ஆட்சியின் திசை திரும்பியது."தீவிரவாதிகளின் மீது போர்"(war on terror) என்ற அறைகூவலுடன் ஆப்கனிஸ்தானுக்கு அமெரிக்கா படையை அனுப்பினார்.பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தலிபான் அரசுக்கு புஷ் வேண்டுகோள் விடுத்தார்.தலிபான் அரசு அதனை நிராகரித்தால் அமெரிக்காவும்,பிரிட்டனும் அப்கநிச்தனின் மேல் போர் தொடுத்தன.தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாத இயக்கம் என்பதால் ஜெனிவா கன்வேன்ஷுன் படி போரில் ராணுவத்திற்கு அளிக்கும் பாதுகாப்பு அளிக்க மறுக்கப்பட்டது.குண்டு மழை பொழிந்தது.தலிபான் அரசு நீக்கப்பட்டது.ஆனால் பின்லாடனையும் பிடிக்கவில்லை,அல்கொய்தா அழிந்த பாடில்லை.தலிபான் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தாலும்,அவர்களை முற்றும் அழிக்க முடியாமல் போனது.இன்றும் ஆப்கனிஸ்தான் அமெரிக்காவுக்கு பெரிய பிரச்சனையாகவே உள்ளது.

புஷ் ஆட்சியின் மிகப் பெரிய தவறுகள் இரண்டு. ஒன்று ஈராக்கின் மீது போர்.இரண்டாவது அபுகரிப் மற்றும் கோண்டனமொபே கொடுமைகள்.
2001 நவம்பர் மாதம் ஈராக்கின் மீது போர் தொடுக்க ஆயுத்தமாகுமாறு புஷ் ஆணையிட்டுள்ளார்.அதுவும் அன்று வெளியுறவு அமைச்சராக இருந்த காலின் போவெல்லுக்குத் தெரியாமலே.இதைப்பற்றி பாப் வொட்வர்ட் என்ற பத்திரிகையாளர் "Plan of Attack" என்ற புத்தகத்தில் விவரமாக கூறியுள்ளார்.அங்கு பிரச்சனையை தீர்க்காமல் ஈராக்கின் மீது போர் என்று அறிவித்தார்.ஈராக்கின் மீது போர் தொடுக்க உண்மையான காரணம் என்ன என்று இன்றும் தெரியவில்லை."மக்கள் தொகுதியை அழிக்கும் ஆயுதங்கள்"(weapons of mass diestruction) வைத்திருப்பதாக கூறி போர் தொடுக்கப்பட்டது.புஷ்ஷின் ஆட்சியில் துணை அதிபராக இருந்த சென்னியோ சதாமை எப்படியாவது அல்கொய்தா உடன் சம்பந்தப்படுத்த முடியுமா என்று பார்த்தார்.ஐநா சபை ஆதரவில்லாமல் தன்னிச்சையாக போர் தொடுக்கப்பட்டது.போரில் சதாம் ஆட்சி நீக்கப்பட்டதுடன் ஈராக்கில் ஏற்பட்ட குழப்பங்களை,பிரச்சனைகளை சந்திக்க எந்த ஆயுத்தமும் செய்ய தவறியது அமெரிக்கா அரசு.ஆப்கனிஸ்தாநிலோ,ஈராக்கிலோ மேற்கொண்ட போர் வழக்கமான நாடுகளுக்கு இடையேயான போர் இல்லை என்பதை புஷும்,அவர் ஆட்சியும் உணரவில்லை.

அதனால் பிரச்சனைகள் மேல் பிரச்சனை.அதனை தீர்க்க மேலும் ராணுவ வீரர்களை அனுப்ப வேண்டியதாகியது.மக்களின் வரிப்பணம் எந்த உபோயோகமும் இல்லாமல் விரயமாகியது தான் மிச்சம்.4000௦௦௦க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.குறைந்தது ஒரு லட்சம் ஈராக் மக்களாவது கொல்லப்பட்டிருகிறார்கள்.புஷ்ஷின் மீது ஈராக் மக்களுக்கு இருந்த வெறுப்பு அவர் மீது செருப்பு எரியும் நிலைக்கு தள்ளியுள்ளது.மக்கள் தொகுதியை அழிக்கும் ஆயுதங்கள் ஈராக்கில் கிடைக்கவில்லை என்றவுடன் புஷ் "அதனால் என்ன.ஈராக் மக்களை விடுவிக்கவே போர் தொடுத்ததாக கூறினார்."மன்னிக்க முடியாத இரண்டாவது குற்றம் அபுகரை சிறையில் கைதிகளை கொடுமை படுத்தியது தான்.அதை அமெரிக்கா ஊடகங்கள் வெளிபடுத்திய போது,அதை மிகவும் அவமான கரமான விஷயம் என்றார் புஷ். ஆனால் புஷ் தான் அதற்கு உத்தரவிட்டார் என்பது உலகத்திற்கு மனித உரிமைகள் பற்றி கவலை தெரிவிக்கும் அமெரிக்க அரசின் அதிபர் செய்த மிகப் பெரிய தவறு என்பதில் சந்தேகமில்லை.கோண்டனமொபே அநியாயம் பற்றி தனி கட்டுரை தான் எழுத வேண்டும்.

புஷ் தன்னுடைய ஆட்சியின் முதல் நான்கு ஆண்டுகள் துணை அதிபர் செனி மற்றும் ராணுவ அமைச்சர் ரம்ஸ்பில்ட் ஆகியவரின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தது அவர் இன்று இந்த விமர்சனத்திற்கு உள்ளாக காரணமாகியது.சம்பத்தப் பட்டவர்களை ஒரு சேர வைத்து வெளிப்படையான விவாதங்கள் நடத்தாமல் புஷ் எடுத்த முடிவுகள் எல்லாமே தவறாக முடிந்ததில் ஆச்சிரியமில்லை.தன் ஆட்சியின் எட்டு ஆண்டு கால முடியும் நேரத்தில் ஊடகங்களுக்கு அளித்த "வெளியேறும் பேட்டியில்" ,அமெரிக்காவின் உளவுத் துறையின் தவறான தகவலால் தான் ஈராக் மீது போர் தொடுக்க வேண்டியதாகியது என்று பழியை திருப்பிவிடும் முயற்சி செய்துள்ளார்.ஆனால் தீர விசாரித்து முடிவு எடுக்கும் பொறுப்பு அதிபரின் முக்கிய கடமை என்பதை மறந்து விட்டார்.புஷ்ஷாவது பதவியை விட்டு வெளியேறும் நேரத்தில் தான் அதிபராக எடுத்த சில முடிவுகள் தவறானது என்று ஒப்புக்கொண்டார்.ஆனால் துணை அதிபர் செனி வருத்தம் தெரிவிக்காததுடன், லிங்கன் மற்றும் ரூஸ்வெல்ட் போன்றவர்கள் செய்ததைத் தான் புஷ் அரசு செய்ததாக கூறியது ஆணவத்தின் உச்சகட்டம் என்றால் மிகையாகாது.அதே போல் வடக்கு கொரியா,ஈரான்,சிரியா போன்ற நாடுகள் "தீவினையின் அச்சுகள்"(axis of evil) என்று நடத்திய கூத்து புஷ் அரசின் வெளியுறவுக் கொள்கையின் மற்றுமொரு தவறு.

இப்படி போர்,வெளி நாட்டுக் கொள்கையில் சொதப்பல் என்று ஆட்சியை நடத்தி வந்த புஷ்,உள்நாட்டு பொருளாதாரத்தில் பெரிய அளவு கவனம் செலுத்த முடியாமல் போனது.வரிக் குறைப்பு செய்தார்.அது பெரும்பாலும் மிகப் பெரிய நிறுவங்களுக்கும்,பணக்காரர்களுக்கும் சாதகமாக அமைந்தது.மத்திய வங்கி வட்டி விகிதத்தை மிகவும் குறைவாக வைத்து,தாரளமாக கட்டுபாடில்லாமல் கடன் கொடுப்பதை ஊக்குவித்தது.அதன் பலன் பல மக்கள் தங்கள் தகுதிக்கு மீறி கடன் வாங்கினார்கள்.மேலும் வீட்டின் மீது கடன் வாங்கி,விடுமுறையைக் கொண்டாடினார்கள்.மக்களால் கடனைக் கட்டமுடியாமல் போனபோது,இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் ஒரு நாள் முடிவுக்கு வந்தது.வங்கிகள் நஷ்டமடைந்தது.பங்குச் சந்தை வீழ்ச்சி.மக்களின் வேலை இழப்பு.1929 ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பெரிய பொருளாதார வீழ்ச்சியை நினைவூட்டும் இன்றைய நிலை.அமெரிக்கா அதிபர்கள் தங்கள் பதவியை விட்டு செல்லும் போது,அவர்களுடைய அதிபர் காலத்து நினைவுகளை புத்தகமாக எழுதியும்,பல இடங்களில் உரையாற்றியும் பணம் சம்பாதிப்பார்கள்.பில் க்ளின்டன் கடந்த ஏழு வருடத்தில் 90 மில்லியன் டாலர்கள் சம்பாதித்தாக கூறுகிறார்கள்.ஆனால் புஷை எந்த பதிப்பாளரும் அணுகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அவர் பேசுவதைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

இரண்டு நடந்து கொண்டிருக்கும் போர்கள்,வரலாறு காணாத பொருளாதார விழ்ச்சி,வெட்கப்பட வைக்கும் மனித உரிமை மீறல்கள்,பல லட்சம் மக்கள் வேலை இழந்து தவிக்கும் நிலை போன்றவைகள் தான் புஷ் விட்டு சென்றிருக்கும் அமெரிக்கா..அமெரிக்கா அதிபராக முதல் முறையாக ஒபாமா என்ற கறுப்பர் தேர்தெடுக்க பட்டபோது,அவர் கூறியது"உலகிலேயே அமெரிக்காவில் தான் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் என்றார்".ஆனால் புஷ் போன்றவர்கள் இரண்டு முறை அமெரிக்கா அதிபராக தேர்ந்து எடுக்கப் படுவதும் அமெரிக்காவில் தான் நடக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக