வெள்ளி, 27 ஜூலை, 2012

எழுத்தாளர் எஸ்ராவுடன் ஒரு சந்திப்பு - பாகம் 3

முதல் பாகம் 
இரண்டாவது பாகம் 

தனக்கு எழுதுவதில் எந்த சோர்வும் இல்லை எனவும் இப்போது அதிகம் எழுத வேண்டும் எனத் தோன்றுவதாகவும் கூறினார் எஸ்ரா. சமீபத்தில் பீகாரில் ஒரு பெண்ணை சிலர் துரத்திக் கொண்டு போக அதைப் பார்த்த வயலில் வேலை செய்து வந்த  விவசாயிகள் அவர்களை விரட்டி விட்டு அந்தப் பெண்ணை விவசாயிகளே வன்புணர்ச்சி செய்ததாக ஒரு செய்தி பார்த்ததாகக் கூறினார். இந்திய விவசாயிகள் மேல் வைத்திருந்த பிம்பம் உடைந்ததாகவும், இந்த அளவு சமுதாய சீர் கேட்டிற்கு மூல காரணம் என்னவாக இருக்கும் போன்ற எண்ணங்கள் தன்னை இப்போது எழுதத் தூண்டுவதாகவும் ஈஸ்ரா கூறினார். பிறகு அவருடைய உபபாண்டவம் நாவல் மொழி அதன் பிறகு கைகூடி வரவில்லையே என்ற கேள்விக்கு அந்த நாவலை எழுதும் போது தான் கடந்து வந்த துன்பங்கள் மற்றும் மனநிலை பற்றி தெளிவாக்கினார்.சுந்தர ராமசாமி பற்றி பேச்சு திசை மாறியது. அவரை சந்தித்த இனிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.பின் ஒவ்வொருவராக விடை பெற்ற பின் சினிமாவைப் பற்றி சிறிது நேரம் பேசினோம். ரஜினியுடனான தன்னுடைய நட்பை குறித்து சிலாகித்து  பேசினார். இரவு 2:30 மணிக்கு திருவும் எஸ்ராவும் விடை பெற்றார்கள்.

அடுத்த நாள் எனக்கு அலுவலகப் பணி நிமித்தம் எஸ்ராவுடன் செல்ல முடியவில்லை. ஆனால் அன்று  மாலை எஸ்ரா, திரு, என் மகன் ஸ்ரீஹரி மற்றும் நான் "Abraham Lincoln vampire hunter" திரைப்படம் பார்த்தோம். அந்த திரைப்படம் நான் எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்தது. அடுத்த நாள் திரு வீட்டிற்குச் சென்றேன். எஸ்ராவும் திருவும் நூலகம் சென்றிந்தார்கள். அங்கு சந்தோஷ் என்ற  இளைஞர் எஸ்ராவைப் பார்க்க நான்கு மணி நேரம் கார் பயணம் மேற்கொண்டு வந்திருந்தார். இலக்கியத்தில் ஆர்வமுள்ள துடிப்பான இளைஞர். எஸ்ராவும் திருவும் வந்தவுடன் கல்பனா மற்றும் ஹரிஹரன் வந்தார்கள்.

மீண்டும்  பேச்சு. அவர் எழுத்தைப் பற்றி கூறும் போது "தரையில் கப்பல் செய்து தண்ணீரில் விட்டு விடுகிறோம். அதில் யாராரோ பயணிக்கிறார்கள். எழுத்தின் தரம் பயணத்தையும், பயணிகளையும் நிர்ணயிக்கிறது." என்றார். பிறகு நகுலன் கவிதைகள் பற்றி பேசினோம். நகுலனுக்கு விளக்கு விருது வழங்கிய விழா குறித்து விரிவாகக் கூறினார். ஆத்மாநாம், தேவதச்சன் என ஒரு சுற்று வந்தோம். தேவதச்சனின் ஒரு கவிதையை விளக்கும் போது எஸ்ரா  "Mobius Strip" பை மேற்கோள் கட்டியது எனக்கு சந்தோஷமாகவும், ஆச்சிரியமாகவும் இருந்தது.


பிறகு எஸ்ரா, ஹரி, திரு,சந்தோஷ் மற்றும் நான் " Detriot  Institute of Arts" சென்றோம். அந்த அனுபவத்தை ஈஸ்ராவே தன் வலைப்பதிவில் விவரமாக எழுதியுள்ளார். அது ஒரு நல்ல படிப்பினை கலந்த அனுபவம். அதன் பின் காபி அருந்திக் கொண்டே எனக்கும் எஸ்ரவுக்கும் மிகவும் பிடித்த வண்ணநிலவன் குறித்து பேசினோம். அன்று இரவு கல்பனா ஹரிஹரன் வீட்டில் அருமையான விருந்து. ரசித்துச் சாப்பிட்டோம். உண்ணும் போது  சமீபத்தில் தமிழகத்தில் ஒரு பள்ளியில் பொதுத் தேர்வின் போது பள்ளி  நிர்வாகமே மாணவர்களை காப்பி அடிக்க அனுமதித்ததை நினைத்து வருந்தும் சமயம்  சுராவின் "எலிசபெத் டீச்சர்" என்ற அருமையான கதையை நினைவு கூர்ந்தார் எஸ்ரா. பின் மாமியார், மருமகள் உறவு, திரைப்படம் எடுப்பதில் இருக்கும் சிக்கல்கள் என பல விஷயங்கள் விவாதிக்கப் பட்டன.அப்போது தான் சந்தோஷ் தமிழின் எதிர்காலத்தைப் பற்றி வினவினார் . அதற்கு பதிலளித்த எஸ்ரா தமிழின் தொன்மையும், அதிலிருக்கும் இலக்கியத்தைப்  படிக்கவும் தொடர்ந்து இளைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் இன்று வீட்டில் தமிழ் மொழி புழங்குவது மிகவும் குறைந்து போய் , தமிழ் வீட்டை விட்டு வெளியேறுவதே கவலை அளிக்கக் கூடியது எனக் கூறினார்.

இன்னும் பல விஷயங்கள் பேசி இரவு இரண்டு மணிக்கு ஹரி அவர்கள் வீட்டிலிருந்து விடை பெற்றோம். என் மகன் ஸ்ரீ ஹரிக்கு "Hundred years of solitude" என்ற புத்தகத்தை எஸ்ரா பரிசாகக் கொடுத்தார். அவர் கொண்டு வந்திருந்த சில புத்தகங்களை வாங்கினேன். அவருடைய உறுபசி நான் படித்ததில்லை. நல்ல வேளை ஒரு பிரதி வைத்திருந்தார். அதை வாங்கினேன். இப்போது படித்தும் ஆகி விட்டது. அதைப் பற்றிய என் கருத்தை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்

இந்த நேரத்தில் எஸ்ராவை அறிமுகப்படுத்திய நண்பர் திருமூர்த்திக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஓர் இனிய அனுபவத்தை கொடுத்த எஸ்ராவுக்கும் நன்றி. எங்கள் நட்பு தொடரும் என நினைக்கிறேன்.

நான் சுஜாதா பற்றி எழுதிய ஒரு கட்டுரையை எஸ்ராவுக்கு அனுப்பினேன். அதைப் படித்து அவர் நன்றாக (?) எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். அதன் விளைவு தான் இந்த வலைத் தளம். அதற்கும் அவருக்கு நன்றிகள்.

2 கருத்துகள்:

  1. இனிய நண்பரின் மூலம் பல விசயங்களை அறிந்து கொள்ள முடிகிறது....

    சுஜாதா பற்றிய கட்டுரையை படிக்க காத்திருக்கிறேன்... தொடருங்கள்... நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  2. எஸ்.ராமகிருஷ்ணனுடனான தங்கள் சந்திப்பை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. எஸ்.ரா'வினால்தான் வண்ணநிலவன் போன்ற ஆளுமைகளின் நூல்களை வாசிக்க முடிந்தது. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு