புதன், 22 செப்டம்பர், 2010

சா.கந்தசாமியின் சாயாவனம் - அழிவைச் சித்தரிக்கும் அழியாத ஆக்கம்


சுமார் நாற்பத்தைன்பது வருடங்களுக்கு முன் சுற்றுச் சூழலை சமூக மாற்றங்களுடன் ஒருங்கிணைத்து ஓர் உயர்வான ஆக்கத்தை உருவாக்கும் எண்ணம் சா.கந்தசாமி அவர்களுக்கு எப்படித் தான் தோன்றியதோ? அதிலும் அவருடைய இருபத்தைந்து வயதில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். சமூகத்தில் அன்று நிலவிய ஏற்றத் தாழ்வுகள் மற்றும் மரபான பண்ட மாற்று முறையிலிருந்து பணம் என்ற பேய் எப்படி மெதுவாக தன் பலத்தை பரப்ப ஆரம்பித்தது என்பதை சாயாவனம் துல்லியமாக படம் பிடித்து காட்டியிருக்கிறது.ஓர் அழிவை அழியாத சித்திரம் ஆக்கிக் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

"ஒரு புளியன் தோப்பை அழித்து சர்க்கரை ஆலை கட்டப்படுகிறது" என்று கதையை ஒரு வரியில் சொல்லி விடலாம். ஆனால் அதன் பின்னால் இருக்கும் மனிதனின் பேராசை, அகங்காரம், இலக்கை அடைந்தே தீரும் வெறி, அப்பாவி மக்களின் எண்ண ஓட்டங்கள், மனிதர்களுக்குள் நடக்கும் சண்டைகள் மற்றும் ஏற்ற தாழ்வுகள் என்ற பல விசயங்களை மனதில் ஒருவிதமான நெருடலோடு படிக்கும் படி கதையை கட்டமைத்துள்ளார் நாவலாசிரியர் என்றால் மிகையாகாது.

வெளிநாட்டில் இருந்து சாயவனத்திற்கு வரும் சிதம்பரம் தான் புளியன் தோப்பை வாங்கி சர்க்கரை ஆலை கட்ட முற்படும் கதையின் நாயகன். அதற்காக அவன் மேற்கொள்ளும் சமாதானங்கள், அவனுக்குள் நிகழும் அற வீழ்ச்சி, அவனுடைய எண்ணங்கள் நிறைவேற, நிறைவேற முற்றிலும் மறந்து போகும் மனிதாபிமானம் என்று கதைப் பின்னப்பட்டுள்ளது. இதில் சிவனாண்டித்தேவர் சிதம்பரத்திற்கு பெரிதும் உதுவுகிறார். காடு எரியூட்டப் படுவதை சிறிது கூட ஆர்வம் குறையாமல் படிக்கும் படி எழுதியுள்ளார். சிதம்பரத்தின் மன நிலையையும், அற வீழ்ச்சியையும் அணையில் நீர்மட்டம் போன்ற சித்தரிப்புக்கு ஒப்பிடலாம்.

செட்டியார் வீட்டிற்க்குச் சென்று நெய்த புடவையை எடுத்து வந்து நெல் விளையும் போது கொடுக்கும் ஓர் இணக்கம், "பெண்ணிற்கு ஒரு தங்கக் கூண்டிலிருந்து மற்றொரு தங்கக் கூண்டிற்கு செல்லும்" நிகழ்ச்சியாக அந்தக் காலத்துக் கல்யாணத்தை பற்றிய விவரிப்பு, காங்கிரஸ் மாநாடு பற்றிய செய்தி, பண்ட மாற்று முறைக்கு பதிலாக பணப் புழக்கத்தை கையாளத் தெரியாத மற்றும் விரும்பாத ஊர் மக்கள், ஆலைக்கு கரும்பு வேண்டும் என்பதற்காக கரும்பைப் பயிரிட ஊக்குவிக்கும் சிதம்பரத்தின் செயல்பாடுகள், தன் இறந்த தாயைப் பற்றி அவளுடைய பால்ய சிநேகிதி பேசும் போது கூட சிறுதும் உணர்ச்சி காட்டாத சிதம்பரத்தின் மன ஓட்டம் என்று பல நிகழ்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த நாவலின் சிறப்பே ஆசிரியர் எந்த இடத்திலும் ஒரு முடிவைச் சொல்லாமல், வாசகர்களின் கற்பனையில் காட்சிகளை விரிவடையச் செய்வது மற்றும் நாவல் முழுவதும் மறைத்து கிடக்கும் படிமங்கள் என்று சொல்லலாம்.

தமிழ் இலக்கியத்தில் ஆவல் இருப்பவர்கள் எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல் இது. தமிழின் தலை சிறந்த படைப்புகளில் ஒன்றாக எந்தக் காலத்திலும் இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

காலச்சுவடின் கிளாசிக் பதிப்பில் அழகாக நாவல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு சிகரம் வைத்தார் போல் பாவண்ணன் அவர்களின் முகவுரை அற்புதம்.
மீண்டும் மீண்டும் படிக்கும் ஆவலைத் தூண்டும் ஒரு நாவல் சாயவனம்.

6 கருத்துகள்:

  1. நீண்ட நாட்களுக்கு முன்பு படித்தது. இன்னமும் மனதில் நிற்கும் நாவல் அது

    பதிலளிநீக்கு
  2. நன்றி கக்கு - மாணிக்கம் அவர்களே.

    பதிலளிநீக்கு
  3. பகிர்தலுக்கு நன்றி பாஸ்கர்.

    தமிழில் வெளிவந்துள்ள நாவல்களில் மிக முக்கியமானது சாயவனம்.இந்நாவலின் மனிதர்களிடம் கற்று கொள்ள நிறைய விஷயங்கள் உண்டு.நீண்ட நாட்களுக்கு முன் வாசித்தது.அது குறித்த எனது பதிவு http://yalisai.blogspot.com/2008/10/blog-post_07.html

    பதிலளிநீக்கு
  4. நன்றி லேகா.உங்கள் விமர்சனம் மிக நன்றாக உள்ளது. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. பாஸ்கர், அருமையாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    முன்னாலேயே உங்கள் பதிவை படித்திருந்தாலும் கமென்ட் எழுத விட்டுவிட்டேன். மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு