செவ்வாய், 28 ஏப்ரல், 2009

நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம்-3

உயிரோசை இதழில் வெளியானது
இந்த நிலையில் 1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்தது.இந்தத் தேர்தலில்தான் முதல் முறையாக உத்திரப் பிரதேசத்தில் பிராமணர்கள் பா.ஜ.கவுக்கும்,முஸ்லீம்கள் ஜனதா கட்சிக்கும் ஓட்டளித்தார்கள். காங்கிரஸ் பெரும்பான்மை பெறத் தவறியது. வி.பி.சிங், ஜனதா கூட்டணி இடதுசாரி மற்றும் பா.ஜ.க உதவியுடன் ஆட்சி அமைத்தார். ஆனால் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ஆட்சிக்கு ஆபத்து வந்த போது மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தினார் என்ற குற்றச் சாட்டு பிறந்தது. வட மாநிலங்களில் பெரிய அளவில் மண்டலை எதிர்த்து போராட்டம் நடந்தது. பா.ஜ.க தன்னுடைய இந்து ஓட்டுக்களைப் பிரிப்பதற்கு வி.பி.சிங் செய்த சதி என்று கருதியது. அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டார். ரத யாத்திரை பீகார் வந்த போது அத்வானி கைது செய்யப்பட்டார். மதக் கலவரத்திற்கு வித்திட்டது. வட இந்தியாவில் ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டது. பா.ஜ.க, வி.பி சிங் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டது. ஆட்சி கவிழ்ந்தது. சந்திர சேகர் காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமரானார். அந்த ஆட்சியும் அல்ப ஆயுளில் முடிந்தது. ஏதோ நொண்டிச் சாக்குச் சொல்லி காங்கிரஸ் சந்திரசேகர் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. மீண்டும் பொதுத் தேர்தல் வந்தது
.தமிழ் நாட்டில் 1991ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணா. தி.மு.கவும் காங்கிரசும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.தேர்தலின் போது தமிழ்நாட்டில் பிரச்சாரத்தில் இருந்த ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இருந்தாலும் காங்கிரஸ் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற முடியவில்லை. ஆனால் அதிக இடங்கள் வென்ற தனிக் கட்சியாக காங்கிரஸ் இருந்ததால் அதனை ஆட்சி அமைக்க வருமாறு அன்று ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் அழைத்தார். தேர்தலிலேயே நிற்காத நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவி ஏற்றார். வி.பி.சிங் மற்றும் சந்திரசேகர் அரசுகள் இந்தியப் பொருளாதாரத்தை மோசமாகக் கையாண்டதின் விளைவு, நரசிம்ம ராவ் பதவி ஏற்ற போது நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. மன்மோகன் சிங் நிதி அமைச்சராகப் பதவி ஏற்றார். நரசிம்ம ராவ் அவருக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். பொருளாதாரச் சீர்திருத்தத்தை முழு வீச்சுடன் செயல்படுத்தினார். இன்று இந்தியா அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம் இட்டவர்கள் என்ற பெருமை மன்மோகன் சிங் மற்றும் நரசிம்ம ராவையே சேரும். மேலும் நரசிம்ம ராவ் ஆட்சியில்தான் பஞ்சாபில் நடந்து வந்த காலிஸ்தான் பிரிவினை வாதம் முழுவதும் அடக்கப்பட்டு,சாதாரண நிலைக்குக் கொண்டு வரப்பட்டது.

ஆனாலும் பாபர் மசூதி இடிப்பு,ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல், ஆட்சியைக் காப்பற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்த சர்ச்சை என்று நரசிம்ம ராவ் ஆட்சி பல குற்றச் சாட்டுகளுக்கு ஆளானது.இருந்தாலும் நரசிம்ம ராவ் தொலை நோக்குப் பார்வையுடன் ஆட்சி செய்தார் என்பதை மறுக்க முடியாது. 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. ஜெயலலிதாவின் மிகப் பெரிய ஊழல் ஆட்சி,தமிழ் நாட்டில் காங்கிரசில் ஏற்பட்ட பிளவு,காங்கிரசுக்கு தமிழ் நாட்டில் பெரிய தோல்வியைத் தந்தது. ஜெயலலிதா மற்றும் நரசிம்ம ராவ் இருவரும் பதவியை இழந்தனர். மூப்பனார் தலைமையில் பிரிந்து சென்ற காங்கிரஸ் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெற்றது. முதல் முறையாக பா.ஜ.க வாஜ்பாய் தலைமையில் பதவி ஏற்று 13 நாட்களே தாக்குப் பிடிக்க முடிந்தது. அதற்குப் பின் மத்தியில் மூன்றாவது அணி கோம்முநிச்த்களின் ஆதரவுடன் தேவகவ்டா தலைமையில் ஆட்சி அமைத்தது. கோம்முநிச்ட்கள் ஆதரவுடன் நடத்தப்பட்ட கவுடா அரசு நரசிம்ம ராவால் தொடங்கப் பட்ட புதிய பொருளாதரக் கொள்கையை, தொடர்ந்து கடைப்பிடித்தது குறிப்பிடத் தக்கது. தமிழ் நாட்டில் இருந்து முதல் முறையாக எட்டு மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றார்கள். அந்த ஆட்சி பெரிதாக ஒன்றும் செய்யாமலே கவிழ்ந்து, குஜ்ரால் தலைமையில் மற்றொரு குறுகிய கால அரசு பதவி ஏற்றது. குஜ்ரால் தலைமையில் மற்றொரு குறுகிய கால அரசு பதவி ஏற்றது
மீண்டும் 1998ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் அண்ணா தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, ம.தி.மு.க மற்றும் பா.ம.க போட்டியிட்டன. கணிசமான தொகுதிகளில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது. பா.ஜ.க தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்தது. வாஜ்பாய் பிரதமராகப் பதவி ஏற்றார். ஆனால் அந்த அரசை நடத்த வாஜ்பாய் மிகவும் கஷ்டப்பட்டார். பிரமச்சாரியான வாஜ்பாய், ஜெயலலிதா,மம்தா பானர்ஜி மற்றும் மாயாவதியால் பட்ட துன்பம் சொல்லி முடியாது. ஜெயலலிதா ஆதரவை விலக்கிக் கொண்டதால் பா.ஜ.க அரசு கவிழ்ந்து 1999ஆம் ஆண்டு மீண்டும் பொதுத் தேர்தல் வந்தது.
இந்த முறை தமிழ் நாட்டில் பா.ஜ.க, தி.மு.க கூட்டணியில் சேர்ந்தது. பா.ஜ.க மீண்டும் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. பா.ஜ.க தலைமையில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைந்தது. பா.ஜ.க தலைமையில் முதல் முறையாக காங்கிரஸ் இல்லாத ஓர் அரசு ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்தது குறிப்பிடத் தக்கது. வாஜ்பாய் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சீராக இருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுடனான கார்கில் போர் மற்றும் கண்டகர் விமானக் கடத்தல் சம்பவங்கள் ஆட்சிக்கு நல்ல பெயரைச் சேர்க்காத விஷயங்கள். மிகப்பெரிய பணச் சேமிப்பு மற்றும் ஆங்கிலம் நன்கு படித்திருந்த இளைஞர்கள் அமெரிக்க மற்றும் பிற வெளி நாட்டு நிறுவனங்களைப் பலதரப்பட்ட வேலைகளை இந்தியாவிற்கு அனுப்பத் தூண்டின. அதில் அந்த நிறுவனங்கள் வெற்றியையும் சுவைத்தன. அதே நேரத்தில் இந்தியாவில், குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழ்ந்த மக்களுக்கு அதிக பணமும்,வசதி வாய்ப்பும் கிடைக்கச் செய்தன. ஆனால் கிராம மக்களுக்கும்,விவசாயிகளுக்கும் இதில் பெரிய அளவில் ஆதாயம் கிடைக்க வில்லை. இதை உணராத பா.ஜ.க "இந்தியா மிளிருகிறது" என்ற கோஷத்துடன் 2004ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலைச் சந்தித்தது. ஆனால் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வென்றது. தமிழ் நாட்டில் இந்த முறை தி.மு.க, காங்கிரசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 40௦ தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது.
கம்யூனிஸ்ட்களும் இந்திய அளவில் 60௦ இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது. கம்யூனிஸ்ட் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி 2004ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைத்தது. லல்லு பிரசாத் கட்சி,தி.மு.க மற்றும் ஷரத் பவார் கட்சிகள் ஆட்சியில் பங்கு வகித்தன. மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்ததற்கும் பிரதமராக கடந்த ஐந்து ஆண்டுகள் இருந்ததற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது. அவரால் பிரதமராக தன்னிச்சையாகச் செயல்பட முடியாது தான். எந்த விஷயத்திலும் சோனியாவின் கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருந்தார். கம்யூனிஸ்ட்கள் மற்றும் தி.மு.க வின் எடுபிடிகள்.அமெரிக்காவுடனான 1-2-3 ஒப்பந்தத்தில் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டில் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் கூட்டணிக்குக் கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. பல சமயங்களில் மன்மோகன் சிங்கைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது என்றால் மிகையாகாது. ஆனாலும் இந்திய அரசியலில் மன்மோகன் சிங் ஒரு மிகச் சிறந்த பண்பாளர் என்பதை மறுக்க முடியாது.
இப்போது நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பலருக்கு பிரதமர் பதவி மேல் ஆசை உள்ளது. ஆனால் ஒரு தொங்குப் பாராளுமன்றம்தான் வரும் போல் உள்ளது. தேர்தலுக்குப் பிறகு பல பேரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. நாட்டில் ஒரு நல்ல தலைவர் கூடிய சீக்கிரத்தில் வருவார் என்று எதிர்பார்ப்போம்.
tlbhaskar@gmail.com

1 கருத்து: